29/06/2018

பாஜக பினாமி அதிமுக மாநில அரசுக்கு எச்சரிக்கை...


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம், 2013 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு 100 கோடி அபராதத்தை விதித்தது.

இத்தொகையின் வட்டியை கொண்டு நீர், நிலம், காற்று மாசு படுதலை தடுத்து சுற்று சூழலை காக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது.

உத்தரவுபடி ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.100 கோடி அபராதத்தை காசோலை (எண் 184903) மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு 01.07.2013 அன்று வழங்கி வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. வைப்பு தொகையாக செலுத்திய தேதியில் இருந்து 13.04.2018 வரை அத்தொகை 42 கோடியே 26 லட்சத்து 96 ஆயிரத்து 162 ரூபாய் வட்டி ஈட்டியிருக்கிறது. அதில் 35 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரத்து 337 ரூபாய் செலவழிக்கப்படாமல் வங்கியிருப்பில் உள்ளது. (இயக்கம் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் பெற்ற தகவல்).

ஸ்டெர்லைட் தொழிற்சாலை மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை வார்த்தைகளால் அளக்க முடியாத அளவிற்கு உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றுசேர வேண்டிய நிதி வங்கிகணக்கில் தூங்கிவழிந்து வருகிறது. இதுவரை செலவழிக்கப்பட்ட 7 கோடி அளவிலான பணிகளின் விவரங்களையும் மாவட்ட நிர்வாகம் தர மறுக்கிறது.

இந்நிலையில் நானும் இயக்க மாநில அமைப்பு செயலாளர் திரு.ஜெய் கணேஷ் மற்றும் நெல்லை மாநகர பொறுப்பாளர் திரு.ரகுமான் அவர்களும் தூத்துக்குடி துணை ஆட்சியரை நேரில் சந்தித்து இந்த நிதியை உச்ச நீதிமன்ற உத்தரவு படி உரிய திட்டத்திற்கு பயன்படுத்த மனு (26.06.2018) அளித்தோம். பல்வேறு காரணங்களால் இந்நிதியை பயன்படுத்த முடியவில்லை என்றும்  திட்ட மதிப்பீடு சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி உள்ளதாகவும் அனுமதி கிடைத்த உடன் இந்நிதியை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.

இதுவரை மெத்தனப்போக்காக இருந்த தமிழக அரசையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தையும்  இயக்கம் கடுமையாக கண்டிக்கிறது.உச்ச நீதிமன்ற உத்தரவு படி நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளோம் என்பதை  மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் இதன் மூலம் எச்சரிக்கை செய்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.