26/04/2019

கூடங்குளம் அணுவுலையில் பிரச்னைகள் உள்ளதை ஒப்புக் கொண்டது இந்திய அரசு...


விரிவாக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

சுதந்திரமான குழுவைக் கொண்டு அணுவுலை செயல்பாடுகளை ஆராய வேண்டும்.

பூவுலகின் நண்பர்கள் அறிக்கை...

கூடங்குளம் அணுவுலையானது செயல்படத் துவங்கும் முன்னரே அந்த அணுவுலையை அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ச்சி செய்து அதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை அறிந்த காரணத்தினால் தான் அந்த உலையை செயல்பட அனுமதிக்க கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இடிந்தகரை கிராமத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்களும் நீண்டகாலமாக இரண்டு அணு உலைகளை எதிர்த்து போராடி வருகின்றனர்.

அணுஉலை செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே நாங்கள் வைத்து வரும் குற்றச்சாட்டை அரசியல்வாதிகளும் இந்திய அணுசக்திக் கழகத்தினரும், அணுசக்தித் துறை வல்லுநர்களும் மறுத்து வந்தனர். ஆனால் RTI மூலம் பெறப்பட்ட தகவலின்படி கூடங்குளம் அணு உலை அலகு 1 2013ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 47 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது அணு உலை அலகு 2, 2017 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 19 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் நமக்கு கிடைத்தது. சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு உலையானது ஆண்டிற்கு 2 அல்லது 3 முறைதான் பராமரிப்பிற்காக மட்டும் நிறுத்தப்படும். இதன் மூலமாகவே கூடங்குளம் அணுவுலையில் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவரும் அணுசக்தித் துறையின் செயலாளருமான கமலேஷ் நில்கந்த் வியாஸ் கூறுகையில் " கூடங்குளம் அணு உலை அடிக்கடி நிறுத்தப்படும் எண்ணிக்கையானது வழக்கத்திற்கு மாறானது, அந்த உலையில் தொடக்க நிலை பிரச்சனைகள் உள்ளது அதை சரிசெய்ய இந்திய அணுமின்சக்தி கழகத்தினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாங்களும் இடிந்தகரை மக்களும் நீண்டகாலமாக முன்வைத்துவரும் குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது. இனியாவது அணுசக்தி கழகத்தின் செயலாளர் கூறியதை கருத்தில் கொண்டு கூடங்குளம் அணு உலை அலகு 1 மற்றும் 2ந் செயல்பாடுகளை ஒரு சுதந்திரமான வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை கூடங்குளத்தில் மேற்கொண்டு புதிய உலைகள் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்துகிறது. மேலும் அணுவுலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மாநில அரசின் கைகளில் உள்ள காரணத்தால் இப்பிரச்னைக்கு முழுக் கவனம் அளித்து உடனடியாக கூடங்குளத்தில் அணுவுலை செயல்பாடுகள் அனைத்தையும் மாநில அரசு நிறுத்தி வைப்பதற்கான அழுத்தத்தை அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் தமிழக அரசிற்கு கொடுக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.