05/12/2017

தீர்க்க தரிசனம் : யோனாவின் அடையாளம் யுக முடிவின் அடையாளம்...


ஆய்விற்காக அலைந்து கொண்டிருக்கும் மார்க்க அறிஞர்கள் மலரவைக்கும் கருத்துக்கள் முழுமையுடையதா, முனைந்து பார்ப்போம்.

நியாயத்தீர்ப்பு நாளின் அடையாளம் கேட்ட பரிசேயர்க்கு, இயேசு அளித்த பதில்கள்  அடையாளங்களாக அங்கே இடம் பெற்று நிற்கின்றபோது, விளக்கம் சொல்லும் போதகர்கள் இன்று தவறான விளக்கத்தை தரணியிலே பரப்புகிறார்கள்.

யோனாவின் அடையாளத்தை காட்டிநின்ற இயேசுவின் வார்த்தைக்கு விளக்கம் இடும் அறிஞர்கள், யோனாவை போல் அவர் மூன்று நாளில் உயிர்த்தெழுந்தார் என தவறான விளக்கத்தைத் தந்துநிற்கிறார்கள்.

அந்த தவறான விளக்கத்தை உண்மை ஆதாரம் என எடுத்துக்கொண்ட மற்ற மார்க்க அறிஞர்கள் அதை விமர்சனம் செய்து இயேசுவின் இறப்பைப் பற்றி பல கருத்துகளை எடுத்து வைக்கிறார்கள்.

இவர்கள் இயேசு சொன்ன வார்த்தையின் உட்பொருளை, உண்மைப்பொருளை கண்டு உணராமல் மார்க்க அறிஞர்களின் தவறான கருத்துகளுக்கு துணைபோய் நின்று தரமில்லா கருத்துகளை தரணியில் முன் வைக்கின்றனர்.

இதற்கான விளக்கத்தை நாம் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இதோ...

இயேசு கூறியதையும் அதற்கு கிறிஸ்துவர்கள் கொடுக்கின்ற விளக்கத்தையும் பல காலமாக விவாதித்து வருகின்ற சூழலில் யோனாவின் அடையாளத்தை பற்றிய விளக்கத்தை பார்ப்போம்.

முதலில் முகமதுநபியையும், முகமதுநபியால் மிகவும் மதிக்கப்பட்ட இயேசுநபி பற்றி பார்ப்போம்.

இறைதூதர்கள் கூறும் வார்த்தைகள் அனைத்தும் அவர்களுக்கு சொந்தமானவைகள் அல்ல. அதை அவர்களுக்கு கொடுத்தது வானதூதர்களே.. இப்படியிருக்க முகமதுநபி தந்தவைகள் உண்மை என்றால் இயேசுநபி சொன்னவைகளும் உண்மையே.


இயேசுநபியும்   "ஏகஇறைவனை "பற்றிதான் மக்களுக்கு போதித்தார் என்பது உண்மையே, ஏனென்றால் இயேசுவும் தன்னை இறைவன் என்று சொல்லவில்லை. இறைவனை உரிமையோடு பிதா என்று தான் சொன்னார்.

இறைதூதர்கள் தந்த சான்றுகள் அனைத்தும்  வானதூதர்களால் தரப்படும்போது வானதூதர்களுள் பொய்மை உண்டோ? அப்படியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க இறைதூதர்கள் சொன்னவைகளும் பொய்யாய் போவதில்லை. அதை பற்றி தெளிவான விளக்கங்கள் தெரியாததால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தனது சொந்த கருத்தை திணித்து தனக்கு தோன்றியவைகளையே அதற்கு விளக்கமாக தருகின்றனர்.

முதலில் இயேசு அவருடைய சீடர்களிடத்தில் உவமையாக பேசுவது போல் உண்மையையே பேசியுள்ளார். அனைத்து உவமைகளும் இறுதியைப் பற்றிய உண்மைகளே. சாதாரண மானுடர்களான நாமே இவ்வளவு  தெளிவாய் சிந்திக்கும்போது இறைதூதர் தன்னுடைய முடிவின் கணக்கைப் பற்றி அறியாமல் இருந்திருப்பாரா?

யோனாவின் அடையாளத்தை இயேசு  கூறியதும்,  அதற்கு அவருடைய சீடர்முதல் இன்றுவரை கூறுகின்ற அனைத்து கருத்துகளும் வெவ்வேறானவை. இயேசுவிடம் பரிசேயர் நியாயத்தீர்ப்புக்கு முன் நிகழும் அடையாளம் சொல்லுங்கள் என கேட்டதற்கு சொன்ன அடையாளம் தான் யோனாவின் அடையாளம்.(மத்தேயு .12 :40) .

இதனை இயேசு தன்னுடைய முடிவை பற்றிய அடையாளமாக குறிப்பிடவில்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.உலக முடிவைப் பற்றிய அதாவது தீர்ப்பு நாளை பற்றியதெளிவான, சரியான அடையாளமே இந்த அடையாளம்.

இதே போல் யோவான் (3:13-21)ல் சொன்ன. மூன்று நாட்களும் இறுதியைப் பற்றிய அடையாளமே தவிர அவருடைய காலத்தில் நடந்தவைகள் அல்ல.இயேசு தெளிவாக மூன்று பகல், மூன்று இரவு என்று சொன்னதற்கு காரணம், தன்னுடைய மரணத்தை பற்றிய அடையாளம் என தவறாக எடுத்து கொள்ள கூடாது என்பதற்காகத்தான்.

எனவே யோனாவின் அடையாளம் இறுதிநாளின் தீர்ப்புநாளின் அடையாளம் என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். யோனாவின் அடையாளம் முதலாம் இயேசுவின் மரணத்திற்கான அடையாளம் அல்ல.இது முழுக்க முழுக்க மறுமைநாளின் இரண்டாம் வருகையின் வருகையின் அடையாளமே.

ஏதோ கிருஸ்துவர்கள் மட்டும்தான் வேதத்திற்கான தவறான விளக்கங்களை தருகிறார்கள் என்பது இல்லை. முஸ்லீம் சகோதரர்களும்தான். இறைதூதர்களுக்கே சில அடையாளத்தின் உண்மைகள் தெரியாத போது நம்மை பற்றி என்ன சொல்வது? காரணம் குரானில் பல இடத்தில் உள்ள வசனங்களுக்கு இன்று உங்களை போன்றவர்கள் தவறான விளக்கத்தையே தருகிறார்கள்.


அனைத்து இறைதூதர்களும் இறுதியை பற்றி தீர்பப்புநாளின் நெருக்கத்தை பற்றிய விளக்கங்களையே தந்துள்ளனர்.

இயேசு 2000ஆண்டுகளுக்கு முன் சொன்னதும் சரி, முகமது நபி 1400ஆண்டுகளுக்கு முன் சொன்னதும் சரி, அனைத்தும் இறுதியைப் பற்றிய, மறுமையைப் பற்றி, அடையாளங்களே.

யோனாவின் அடையாளம் என்பது யூதர்களுக்கு மட்டும் சொன்னது அல்ல.  ஒட்டு மொத்த உலகத்திற்கே சொன்ன அடையாளம்.

நம் முன்னோர்கள் தெளிவாக தந்தவைகளின் தெளிவு நமக்கு தெரியவில்லை. ஆனால் ஞானம் உள்ளவர்களுக்கு  தெளிவாக தெரியும் என்ற கூற்றிற்கு இணங்க இறுதி ஞானகூட்டம் அனைத்தையும் அறியும் காலத்தில் உலகிற்கே ஓர் தெளிவு கிடைக்கும்.

அப்பொழுது குரான் மட்டும் அல்ல, பைபிள் மட்டும் அல்ல, மண்ணுலகில் உள்ள அனைத்து வேதங்களும் மண்ணுக்குள் மறையும் காலம் வரும் விரைவில். மேலும் இயேசுவே இறுதி நாளில் இரண்டாம் வருகையில் நான் அந்நியராய் வருகிறேன் என்றும், முகமது நபியும் இறுதி நாளில்  வேறொறு கூட்டமே சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்றும் தெளிவாக கூறியுள்ளனர்.

இறுதி நாளில் இவ்விரண்டு மார்க்கங்களும் இல்லாமல் "ஏக இறை கொள்கை" கொண்ட இறைவனுக்கு பந்தமான, ஓர் புதிய மார்க்கமே உலகை நடுதீர்ப்பு செய்து, சொர்க்கச்சோலையில் வாழப்போகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

காரணம் உலகை நல்வழிப்படுத்த ஏக இறைவன் தந்த மார்க்கவழி சான்று குரான் என்றால் இறுதியில் (மறுமையில்) இறைவன் வரும்போது இந்த இறைமறை மறையவேண்டிய அவசியம் என்ன? இறைவன் தந்த மறை இறைவன் வரும்போது மறையக் காரணம் என்ன?             


ஏப்ரல் 1-2016 ஸ்பெயின் நாட்டில் மீனவர் ஒருவர் கடலில் பயணம் செய்தபோது, சூறாவளியால் படகு சிதறுண்டுபோய், கடலில் கவிழ்ந்தது. அந்த மீனவர் கடலுக்குள் விழுந்து மூழ்கிய போது இராட்சத திமிங்கலத்தால் விழுங்கபட்டு மூன்று நாள் அதாவது 3பகல் 3இரவு 72 மணி நேரம் மீனின் வயிற்றிலிருந்து கழிவுடன் வெளியேற்றபட்டு, தீவிர சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளார் என்ற செய்தி.

நியாயதீர்ப்பு நடக்கும் நேரத்திற்கு சற்று முன்பாக, உலகில் யோனாவின் அடையாளம் தோன்றும் என்ற இயேசு சொன்ன வார்த்தை மெய்பட்டுவிட்டன.

இப்படி இறுதி நாளின் அடையாளமாய் காட்டபட்ட 72மணி நேரம் கொண்ட 3நாளை அடையாளமாக்கி தந்த இயேசுவினுடைய சான்று அவருடைய முடிவு நாளுக்கு அறிவிக்கப்பட்டது  இல்லை என்பது புலனாகிறது.

இன்னும் சொல்லப்போனால், அவர் சொல்லும் "மனுஷகுமாரன், மனுஷகுமாரனை ஒத்த" என்ற பதங்கள் எல்லாம் இறுதிகாலத்தில் நீயாயத்தீர்ப்பபிற்கு முன்பு ஏற்படுகின்ற காட்சிகளை குறித்த சொற்களாகும்.

இயேசு முதல் வருகையில் தேவகுமாரன் ,இரண்டாம் வருகையில் மனுஷகுமாரன் .இந்த தேவகுமாரன் என்ற வார்த்தையை மற்றைய மார்க்கங்கள் வரிந்து கட்டிகொண்டு இறைவன் பெற்றெடுத்த பிள்ளை என்பது போல ஒரு முகாந்தரத்தை முன்வைக்கின்றனர்.

அந்த பதம் எதற்கு சொல்லபட்டது என்றால் ஒரு தீர்க்கதரிசியோ, இறையாளனோ, தீர்க்கதரிசன காட்சிகளை  காணவேண்டும் என்றால் இறைவனால் சிருஷ்டிக்கட்ட உடம்பு தேவதன்மை பெற்றிருக்கிறது என்பது பொருள்.

அதே ஆன்மா இறுதிகாலத்தில் வந்து பூமியில் வாழ்கின்றபோதும் மற்றவர்களால்  இரண்டாம் வருகை என அழைக்கப்படும் அந்த வருகை மனுஷகுமாரன் என குறிப்பிடபடும்.

இரண்டாம் வருகை இயேசு தீர்க்கதரிசன காட்சிகளை பார்க்க வாய்ப்பு அற்றவர் என்பது புலனாகிறது.

இதை இயேசுவே தன்னுடைய வார்த்தையில், தான் தேவனிடத்தில் சென்றால்த்தான், பிரிதொரு "தேற்றரவாளனை "பூமிக்கு அனுப்புவார்.

அப்படி வரும் அவர் தாமாக, எதையும் சொல்லாமல் நான் சொல்லியவற்றை தன் சபையிலே எடுத்துக்கூறி, என்னை மகிமைப்படுத்துவார் (யோவான்.16 :7-15). இறுதியில் சூட்சம ஒளிரூபமான, அரூபமான. இதுவரை யாருடைய கண்ணிற்கும் புலப்பட்டிராத "இறைவன் பூமிக்கு வரும்போது "சாதரண மனிதனை, அந்த இறையாளனை உச்ச தேவப்பதவிக்கு, உயர்த்திக்காட்டுவது தான் இறுதிகட்ட காட்சிகளின் நிலை.

எனவே மகன் என்ற வார்த்தையை எடுத்து கொண்டு மதங்களுக்குள் கருத்து பேதமோ, விவாதமோ தேவையற்றது.


இப்படி மானிட மகனாய் மலர்ந்து நிற்கும், இறுதி காட்சியில் மலர்ந்து நிற்கும் இரண்டாம் வருகை இயேசு, கிருஸ்துவ மக்களோடு தொடர்பு கொண்டு நேரடியாக பேசிக் கொண்டிருக்கிறார் என பிதற்றி திரியும் பேதமையை என்னவென்று சொல்வது?

மானுட குமாரனாய் மண்ணுக்கு வரும் அவரையே சர்வ வல்லமை பொருந்தியவராய், தேவனாய் இறைவன் ஆக்கி காட்டுவதற்கு முன், யோனாவின் அடையாளத்தை  ஒத்த காட்சி ஒரு வழியாய் பூமியில் அரங்கேற்றம் ஆகும் போதுதான் என சொல்லும்போது, அவரோடு பேசி பல நோய்களை குணபடுத்துவதாக சொல்லிதிரிகின்றனர் போதகர்கள்.

இயேசுவே தீர்க்கதரிசனம் சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றபோது தீர்க்கதரிசனம் சொல்லிதிரியும் போதகர்களை இயேசு "கள்ளதீர்க்கதரசிகள் "என சாடுவது சிறப்பாய் தானே இருக்கிறது.

இறையாளர்களை  பற்றி  பேசும்போது (குறையாய்) நாம் ஒன்றை முடிவு கொள்ள வேண்டும். நம்மைவிட அதிக வல்லமை கொண்டவர்கள் அவர்கள். எனவே இறுதியில் வருபவர் மீனோடு வருபர்.

நபி கூட குரானில் அவருடைய தெய்வம் அவர்களை புகழேணியில் தூக்கி வைக்கிறார் என யோனாவின் அடையாளத்தை அவரும் அடையாளபடுத்திசொல்கிறார் . (அத்தியாயம் 68:48-50)  இயேசுவின் கூற்றுபடி இறுதி அடையாளம் யோனாவின் அடையாளம் என்று தெரிகிறது அல்லவா?

ஏகாதிபத்திய இறைக்கொள்கையில் ஆணித்தரமாய் நம்பிக்கை கொண்ட இவரின் சொற்கள் அதிலிருந்து நழுவப்பட்டதாக சொல்ல முடியுமா? ஒரு இடத்தில் மட்டுமின்றி பல இடத்திலும் அவர்கள் தெய்வம் என்று பிரித்து பேசியது ஏன் என்று யோசிக்க வேண்டுமேயொழிய ஏகாதிபத்திய இறைகொள்கையிலிருந்து இறங்கினார் என்று என்னக்கூடாது. அப்படி என்றால் அந்த காரணம் தான் என்ன?

உலகமே அதிசியிக்க போகின்ற அந்த நிகழ்ச்சி மீனோடு வருபவரை மீண்டும் நினைவுபடுத்தி நிற்க வேண்டிய சூழ்நிலையில் ஏக இறைவன் தத்துவத்தை உயர் பிடியாய் கொண்ட இரண்டாம் வருகை இயேசு அறிமுகம் செய்யும் வழிபாட்டிற்குரிய வழி, கடந்தகால வரலாற்றில் பதித்திருக்கும், எல்லா மார்க்க மற்றும் சிலைவழிபாட்டு வழிமுறைகள் உட்பட அனைத்தையும் அழித்து, அனைத்து மார்க்க "மறைகளை மறையவைத்து, புதிய ஆக்கம் பெற்று ஏகாதிபத்திய இறைகொள்கையை உலகத்தில்  இறக்கி வைக்கும் போது புத்தம் புதுமையாய் இந்த அடையாளம் புதுமுகவரி தந்து நிற்பதால் இறைவன் அதே இறைவன் என்றாலும் வந்தவிதம், முகவரி தந்த விதம், இவையெல்லாம் பழைய மார்க்கங்களில்  ஒன்றிலும் தன்னை இணைத்துக்கொள்ளாத பாதையாய் இருப்பதால், நபி அவர்கள்  "அவர்களின் தெய்வம்" எனக்குறிப்பிட்டது புதிய முகவரியில் இறுதிக்காட்சி புலப்பட்டு நிற்பதால்தான் என உணரவேண்டும்.

இதோ சீக்கிரமே வருகிறேன், என்ற பதம் நிறைய தீர்க்கதரசிகள், எடுத்தாண்டுள்ளனர், ஏன்? இயேசுவும், நபியும் கூட எடுத்தாண்டுள்ளனர்.

இயேசுவின்படி 2000ஆண்டுகளாகியும், நபியின்ப்படி 1400ஆண்டுகளாகியும், இன்னும் மறுமை வரவில்லையே என கேட்போருக்கு, மார்க்கவாதிகள் மட்டமான விளக்கங்களை மலர வைக்கின்றனர்.

காலம் என்பது இலட்சோப லட்சம் ஆண்டுகள் போல சித்தரித்து அதில் 1000ஆண்டுகள் என்பது, சிறியக் காலமே என ஒன்றுக்கும் உதவாத விளக்கங்களை முன் வைத்து நிற்கின்றனர். மறுமைக்கான அடையாளங்களை, நியாயத்தீர்ப்பிற்கான அடையாளங்களை சொல்லிக் கொண்டுவரும் தீர்க்கதரசிகள், அந்த அடையாளங்களில் இருந்துதான், சீக்கிரம் என்ற வார்த்தையைச் சொல்லி வைத்தார்களே ஒழிய தன்னுடைய காலத்திலிருந்து என்று சொல்லவில்லை.

படிப்பவர்கள் அத்தனைப் பேரும்  தீர்க்கதரசிகள் அனேகர் சீக்கரமே வருகிறேன் என்ற பதத்தில் பேசும்போது உதாரணமாய் இயேசுவிற்கும் , நபிக்குமே 600 ஆண்டுக் காலகட்ட இடைவெளி  இருக்கும்போது இயேசு சொன்ன பதம் அவர் காலத்திற்கு அருகில் என்றால், நபியின் தோற்றம் பூமியில் வருவதற்கு முன்பே மறுமை நடந்து முடிந்திருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. அப்போதாவது சிந்தித்திருக்க வேண்டும்.

"நபிகள் நாயகம்  "சீக்கிரம் என்ற வார்த்தையை விரைவு என்ற பதத்தில் பயன்படுத்தும்போது அவர் காலத்திற்குப் பிறகு 1400 ஆண்டுகளுக்குள் எப்போதே நடந்து முடிந்திருக்கவேண்டும் நியாயத்தீர்ப்பு. எனவே சீக்கிரம் என்ற பதம் அவர்கள் வாழ்ந்தக் காலத்தைப்பற்றிது அல்ல.

யோவானின் திருவெளிப்பாட்டு  தீர்க்கத்தரிசனம், முழுக்க முழுக்கக் காட்சிகள் அத்தனையும் இறுதி நேரத்தில் வரும் இறையாளனையும்,  அவருடைய மிகச்சிறிய கூட்டத்தையும், அவர்கள் வாழ்க்கையும், அவர்கள் வாழம் நாட்டின் அமைப்பையும், அப்போது நிகழும் உலக அரசியல்  அமைப்புக் காட்சிகளையும் சொல்லி செல்கிறது. அதன் முடிவிலும் இதோ சீக்கரமே வருகிறேன்.தாகமுள்ளவன்  என்னிடம் வரட்டும், விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய் குடிக்கட்டும் என்று கூறுவது இன்றையக் கிருஸ்த்துவர்கள் , கொடுத்துக் கொண்டிருக்கின்ற அப்பமோ, திராட்சைரசமோ குறித்துச் சொன்னது அல்ல.

இறுதியில் வருகின்றவர், இறுதி நாளில் தன் கூட்டத்திற்க்கு தாகத்திற்க்கு (நித்திய வாழ்விற்க்கு) தருபவை என்ற காட்சியை விளக்குவதாகவே அமைய வேண்டும்.                       
                                       
இன்னும் சிலத் தமிழ் முனிவர்களின்,  தீர்க்கதரிசனங்கள் திவ்வியமாய், திடமாய், இறுதிக்காட்சிகள் அறுதியாய், உறுதியாய் சொல்லப்பட்டு நிற்கின்ற போது  இதே விரைவு என்ற பதத்தை, சீக்கிரம் என்ற பதத்தை சிறப்பாய் சொல்லி நிற்கின்றபோது தாங்கள் சொல்லும் அடையாளத்திலிருந்தே நாட்கள் எண்ணப்படுவதை சுட்டிக்காட்டி தெளிவாய் உபதேசித்து நிற்கிறார்கள்.

ஒரு வகையில் அனைவரும் "ஏக இறைவனைப் பற்றி " சொல்லிநிற்கின்ற அதேநேரத்தில் ஒன்றை ஊன்றி கவனித்துப் பார்த்தால் பிதா என்றும், "அல்லா "என்றும் "பரம்ப்பொருள் "என்றும் " பரப்பிரம்பம் "என்றும் "சிவன் "என்றும் "குரு "என்றும்,  சொல்லி நிற்க்கும் பதங்கள் "ஏக இறைவனை " குறிப்பனவாய் இருக்கின்றன.

யோவான் திருவெளிப்பாட்டில் சொல்லியிருக்கும் அத்தனை காட்சிகளும் இரண்டாம் வருகை  இறையாளனை சார்ந்ததே ஒழிய முதலாம் வருகை இயேசுவை சார்ந்தது அல்ல.

முதல் வருகையில் வந்த ஆன்மா  இரண்டாம் வருகையில் வருகிறது என்பது மட்டும் திண்ணமான உண்மை.

முதல் வருகையை ஆராதிக்கும், எந்த "கிருஸ்த்துவ மக்களுக்கும் "இரண்டாம் வருகை காட்சிகள் சொந்தமானது அல்ல. சொந்தமாயிருந்தால் இறுதியில் வருபவர், ஏன் சிலுவையை முறிக்க வேண்டும். அத்தோடு "அல்லா "என்றப்பதத்தையும் நீக்குகின்றார். சிலைவழிப்பாடு செய்யும் அத்தனை கோயில்க்களையும்  மூடுக்கினறார். 4வேதங்களையும், 32 புராணங்களையும், புனித நூலாய்க் கருதும், பகவத்கீதையையும், பைபிளையும், குரானையும், மற்றும் இருக்கின்ற பழையது அத்தனையும் ஒழித்து "புதியஞானத்தை", புதிய வழியை தடம் பதிக்கிறார் என்று எண்ணும்ப்போது இப்படி இறுதியில் வருபவர் தனிப்பட்ட ஒரு மதத்திற்கு சொந்தமானவர் அல்ல. அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர்.

எந்த மதத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் அவர்களையும் இரட்சித்து ஆட்க்கொள்கிறார் என்றால் அவர் எந்த மதமும், எந்த மார்க்கமும் சாராத, விரும்பாத தனிவழிப்பபாதையை தடம்பதித்து நிற்பவர் என்பதை எண்ணும் போது மனம் கடந்து வந்தப் பாதையை, காலத்தைப் பார்க்கின்றப்போது மனக்கசப்பாய் பார்த்தாலும், இறைவன் இறுதி நேரத்தில் அனைத்துலக இரட்சகராய் நிற்க்கப்போகிறார், என எண்ணும்போது மனம், அந்நாளை நோக்கி வேகமாய் நடைபோடுகிறது.

உலகில் உள்ள இதுகாறும் வந்த அத்தனை தீர்க்கத்தரசிகளையும் அலசி ஆராயும்போது கிடைக்காத பெரும் விளக்கம்  "தமிழ்நாட்டு முனிவர்களின் "தீர்க்காத்தரிசனங்களை பார்க்கின்றப் பொழுது மற்றைய மதங்களில்  உரைக்கப்பட்ட தீர்க்கத் தரிசனங்களே இவர்கள் தீர்க்கத் தரிசனத்திலும் அப்படியே அடங்கியிருக்கிறது என்றாலும் இதையெல்லாம் தாண்டி எந்த நாட்டில் நிகழும் எந்த மாநிலத்தில் நிகழும் என்ற விளக்கம் தமிழ்நாட்டு முனிவர்களின் தீர்க்கத்தரிசனத்தில் மட்டும் தான் திடமாய் சொல்லப் பட்டிருக்கின்றது.

இடத்தை சொல்லும், மாநிலத்தை சொல்லும், மாவட்டத்தை சொல்லும் தீர்க்கத்தரிசனம் உலகில் பைபிளாகட்டும், குரானாகட்டும் எதிலும் உரைத்திடாத அரிய விளக்கம் தமிழ்ழொழியில் எழுதிய முனிவர்களின் தீர்க்கத்தரிசன கூற்றுகளில் அடங்கியிருப்பதை பார்க்கின்றப்போது வியப்பிலும் , வியப்பாய்த்தான் இருக்கிறது.

எனவே இறுதிக்காட்சிகள், இடம் பெறும் இடம் "தமிழ்நாடு"  என சொல்லும்போது , இறைவன் நீயாயத்தீர்ப்பை நடத்துவதற்க்கு தேர்ந்தெடுத்த மண் "தமிழ்நாடு "எனநினைக்கும்போது  இறைவருகையால்  ஏற்படும் சொர்க்கப்படைப்பு தமிழ்நாடு என எண்ணும்போது தமிழ்நாடு உலகளவில் உயரிய. முதலிடத்தைப் பிடித்து "இறை மாநிலம் அது  நிறை மாநிலம்" என்ற அந்தஸ்த்தோடு நிற்க்கப்போகும் காட்சியை எண்ணும்போது தமிழன் என்ற அளவில், மனம் பெருமைப்பட்டு தலைநிமிர்ந்து நிற்கிறது.

தமிழினம் உலகெங்கும் தலைநிமிரும் காலம் இதோ விரைவில். நாட்கள் எண்ணப்படுகிறது .இறைவனின் பாதத்தை அடைவதற்க்கு, சிரம்தாழ்ந்து பணிவதற்க்கு தயராவோம். நம்மிடையே இருக்கும் பேதத்தை அகற்றி இறைவன்  பாதம் ஒன்றே பணிவோம். இறைவனே எல்லாம் வல்லவர். அவரை மிஞ்சிய வல்லமை உலகில் யாருக்கும்மில்லை. அவர் கரம் பற்றப்போகும் மக்களுக்கு இனி மூப்பு ஏது? நோய் ஏது? ஊனம் ஏது? மரணம் ஏது? பயம் ஏது? அதர்மம் ஏது? தர்மத்தின் தலைவன் பாதம் பற்றி பணிவோம். வாழ்க இறைவன் புகழ்...

இந்த பதிவு யாருடைய மனதையும் துன்புறுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.