08/12/2017

புதுச்சேரியில் அரசுப் பள்ளிக் கட்டடத்தை இடிக்கும்போது ஏற்பட்ட விபத்தால் பள்ளி ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்...


புதுச்சேரி வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் அன்சாரி துரைசாமி அரசு மேனிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியின் ஒரு பிரிவுக் கட்டடம் சுமார் 32 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுவிட்டதால் பழைய கட்டடத்தை இடிக்கும் பணி கடந்த 3-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்றும் (5.12.2017) பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அதில் இருந்த பொருள்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு விட்டதா என்பதைப் பள்ளியின் கண்காணிப்பாளர் சிவபாரதி, ஊழியர்கள் அய்யனார், மதிவாணன் ஆகியோர் சென்று பார்த்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மொத்தக் கட்டடமும் சரிந்து நால்வர் மீதும் விழுந்தது. அதில் படுகாயமடைந்த நான்கு பேரும் உடனே ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், படுகாயமடைந்திருந்த சிவபாரதி மற்றும் பிள்ளையார்குப்பம் பேட் பகுதியைச் சேர்ந்த அய்யனார் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனால் இந்தப் பள்ளிக்கு இன்று (6.12.2017) விடுமுறை விடப்பட்டுள்ளது. கட்டடம் இடிக்கும் பணியின் போது மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருந்ததால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.