30/08/2020

கன்னிமாரா நூலகம்...



கி.பி. 20ம் நூற்றாண்டில் பொது நூலகங்களின் வளர்ச்சி என்பது மிகவும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்று சொல்லாம்.

எல்லாத் துறைகளிலும் எழில் மிக்க முன்னேற்றம், மாற்றம் ஏற்பட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நூலக இயக்கம் சிறந்து விளங்குகின்றது என்பதை அறியலாம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் நூலகப் பாதையில் இருபதாம் நூற்றாண்டினைப் “பொற்காலம்” என்று குறிப் பிடலாம்.

சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும்.

கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவர். அவர்தம் முயற்சியாலும் சீரிய சிந்தனையாலும் உயர்ந்த எண்ணத்தில் உருவானதுதான் தற்பொழுது வளர்ந்து உயர்ந்தோர் ஆலமரமாக காட்சியளிக்கிறது இந்த நூலகம்.

1890-ல் மக்களுக்காக, மக்களே, மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினர் என்பதை அறியலாம்.

அடிக்கல் நாட்டிய ஆளுநர் அவர்கள், 1890 மார்ச் 22ல் ஆற்றிய உரையின் சாரமானது, “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் பெற முடியவில்லை.

காரணம் என்ன? படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள் இல்லை. நூல்கள் கொடுத்து உதவும் வகையில் நூலகங்கள் இல்லை என்ற குறையை போக்குகின்ற வகையில் தான், பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் உங்கள் முன் நிற்கின்றேன்” என்றார்.

“படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்று அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர் அவர்கள் மிகவும் உயர்ந்த எண்ணத்தில் பதிவு செய்யப்பட்ட வரலாற்று பெட்டகமாக நமது கண் முன் காட்சியாக காணுகின்றோம்.

கன்னிமாரா பொது நூலகமான சிறப்பான கட்டடம் கட்டப் பெற்று புத்தம் புதிய பொலிவுடன் காட்சியளித்தது. பிரிட்டிஷ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள் (இன்று) பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

கன்னிமாரா நூலகத்திற்கு கொடையாக நூல்கள் வழங்குபவர்களும் வழங்கினார். பின்பு அரசு மானியத்தில் நூல்கள் வாங்கப் பெற்று சிறப்புடன் வளர்ச்சியை அடைந்தது.

நூலகத்தின் வளர்ச்சி..

1940-ல் தனி நிறுவனம் ஆகியது
1950-ல் தமிழ்நாடு மைய நூலகமானது
1954-ல் இந்திய நூல்களின் வைப்பிடம் Depository under the Delivery of Books (Public Libraries) Act 1954) ஆகியது
1955-ல் ஐக்கிய நாடுகள் அவை நூல்களின் வைப்பிடமாக மாறியது 1965ல் யூனெசுகோ தகவல் நிறுவனம் (Unesco Information Centre) ஆயிற்று
1966-ல் நூலக ஆணைக் குழு நூலகங்களுக்கான பயிற்சி நிலையம் ஆயிற்று
1973-ல் புது கட்டடம்
1983-ல் மேலும் மேலும் புதிய பொலிவுடன் வளர்ச்சி அடைந்தது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக நூலக வரலாற்றில் எத்தனை மாற்றம், முன்னேற்றம், தொடங்கியவர்களின் ஆசைகள் நிறைவேறிவிட்டது. ‘நூல்கள் அலமாரிகள் வைக்க இடமின்றி காணப்படுகிறது என்பதை காணும் போது எத்தனை மகிழ்ச்சி.

கன்னிமாரா நூலகம் தனிப்பெரும் நிறுவனமாக மாறிவிட்டது. இன்னும் எத்தனை முன்னேற்றம் காத்துக் கிடக்கின்றன. நூலகமானது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவெளியின்றி பன்னிரண்டு மணி நேரம் திறந்து இருக்கின்றது.

1980 ஏப்ரல் முதல் படிக்க விரும்பும் எவரும் இங்கு வரலாம். வாசிக்க வரும் நபர்கள் எத்தனை ரகம் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர், குழந்தைகள், ஆராய்ச்சி யாளர்கள் என்று எத்தனையோ வகை.

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றார் திருமூலர்.

இதனை மனதில் கொண்டு வாசகர்களுக்கு - படிக்கிறவர்களுக்கு குறிப்புதவி வசதி அளிக்கப்படுகிறது. காலம் கடந்த நூல்களில் இருந்தும் எதிர்கால எதிர்பார்ப்புகளில் இருந்தும் கருத்தைத் தேடிக் கொடுக்கும் கனிவான பணியும் நடக்கிறது.

பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான 'பிரெய்லி' மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது.

தேசியத் தகவல் மையப் பொதுத் தகவல் முறையகம் மூலம் ஏராளமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன.

இந்தியச் சுற்றுலா வழிகாட்டி, இந்தியப் பல்கலைக்கழகக் கல்விமுறை வழிகாட்டி, ஊரகத் தொழில் நுட்பங்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியல், இந்திய மாவட்டங்கள்-மாநிலங்களின் விவரங்கள், இந்தியப் பொருளாதார வங்கியியல் விவரங்கள், இந்தியத் தொழிற்சாலைகளின் அகராதி, வேளாண் புள்ளியியல் விவரங்கள் போன்றவை இந்தப் பிரிவில் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு முடிவுகளை இதில் காணலாம்.

இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணிக்கு ரு. 35ம் அரை மணிக்கு ரூ.20ம் கட்டணம். விரைவில் மைக்ரோ பிலிமில் நூல்களை ஏற்றிப் பாதுகாக்க உள்ளனர். அயல்நாடுகளில் இருந்து அதற்கான இயந்திரங்கள் விரைவில் வர உள்ளன.

“இங்கு என்ன கிடைக்கிறது என்று எளிதிலே கேட்பவர்கள் பலர்! இங்கு எல்லாம் கிடைக்கிறது என்று சொல்லும் நிலையிலே இருக்கிறது - செயல்படுகிறது - நூலகம்.

ஆண்டொன்றுக்கு இரண்டு இலட்சம் வாசகர்களையும் மூன்றே கால் இலட்சம் பயன்படும் நூல்களையும் பயன்படுத்த வேகம் கொண்டு அறிவுக்களஞ்சியமாக ஆராய்ச்சி மையமாய், நடைப்போடுகிறது நூலகம் இன்று, வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம் கன்னிமாரா சென்று கருத்தாக்கம் பெறுங்கள்.

இத்தனையும் ஏட்டிலே எழுதிவிட்டால் இனிப்பின் சுவை குறைந்து விடும் அதனால் நேரில் சென்று சுவைத்துப் பாருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.