29/09/2020

தமிழால் தழைக்கிறது செளராஷ்டிரம்...

 


வடமொழிக்கு முன்பு நிலவிய பிராகிருத மொழிகள் ஐந்தில் ஒன்று "ஸெளரஸேனி' மொழியாகும்.

அத் தொன்மையான மொழியிலிருந்து கிளைத்த மொழியே செளராஷ்டிர மொழியாகும்.

இம்மொழிக்கு சொந்த எழுத்து இருப்பினும், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இச்சிறிய மொழியினரில் சில ஆயிரம் பேர் மட்டுமே சொந்த எழுத்தினை அறிவர்.

பெரும்பாலோர் பேச்சு மொழியாகவே கொண்டுள்ளனர்.

ஆனால், பொது இடங்களில் இம்மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர்.

தங்கள் மொழி இலக்கியங்களை தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தியே வெளியிட்டும், தங்கள் மொழி, சமூக இதழ்களில் தங்கள் மொழி எழுத்துகளுடன் தமிழ் எழுத்துகளையும் சேர்த்தே சுமார் 100 ஆண்டு காலமாக பிரசுரம் செய்தும் வருகின்றனர்.

உதாரணமாக, 1921-ஆம் ஆண்டில் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் வரலாறு, 1958-இல் செளராஷ்டிர ஸங்க்ரஹ ராமாயணம், 2013-இல் கவி வேங்கடசூரியின் ஸங்கீத ராமாயணொ - இம் மூன்றும் தமிழ் எழுத்திலேயே பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.

இம்மொழிக்கென வெளிவரும் பாஷாபிமானி எனும் மாத இதழில் தலையங்கம் செளராஷ்டிர எழுத்துடன் தமிழ் எழுத்திலும் பிரசுரமாகிறது.

இம்மொழி இலக்கியங்களுக்கு தமிழில் உரை எழுதப்படுகிறது.

ஆக, செளராஷ்டிர மொழி இலக்கியங்கள் காப்பாற்றப்படுவதற்கு தமிழ் மொழி - தமிழ் எழுத்தின் உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தமிழ் மொழியால் இன்னொரு மொழியின், அதுவும் ஒரு சிறிய மொழியின் இலக்கியங்கள் காப்பாற்றப்படுகின்றன என்பது தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் சேர்க்கிறதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.