30/10/2020

கல்லறைகளை சேதப்படுத்திய வழக்கு - ஹிந்து மக்கள் கட்சியினர் 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

 


நெல்லையில் கிறிஸ்துவ கல்லறை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடையார் உள்பட 8 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீசார் மேல்நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருநெல்வேலி ஜங்ஷன், மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணிக்கரையில் பழமையான உச்சிஷ்ட விநாயகர் கோயில் உள்ளது. அதன் எதிரே உள்ள கிறிஸ்துவ கல்லறை தோட்டங்களுக்கு எதிர்ப்பு இருந்தது. கடந்த அக்.,17 இரவில் கத்தோலிக்க கல்லறை தோட்டத்தில் 40க்கும் மேற்பட்ட கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டன.

இதற்கு கண்டனம் தெரிவித்தும், கல்லறைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்திருந்தனர்.

இதனையடுத்து இதுதொடர்பாக ஹிந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடையார் நிர்வாகிகள் முருகானந்தம், சங்கர், ஐய்யப்பன், சேர்மதுரை, கந்தன், ராதாகிருஷ்ணன், சோடா மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அ.தி.மு.க.,தி.மு.க.,உள்ளிட்ட கட்சியினரும் கிறிஸ்தவ அமைப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் தற்போது நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் சிறைகளில் உள்ள 8 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் சரவணன், உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் பரிந்துரைத்தனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.