10/02/2021

பிராணயாமம் பற்றி திருமூலர் கூற்று செயல் முறை...

 


திருமூலர் காட்டிய பிராணயாமம் முறை மிகவும் எளிதானது..

இயம, நியமங்கள் கடை பிடிக்கும் முறை..

இயமம்-தீயவற்றை செய்யாதிருத்தல்.

நியமம்-நல்லனவற்றை செய்தல்.

ஆசனம்-உடலை உணர்வோடு இருத்துதல்.

இனி ஆசனத்தில் அமர வேண்டும். இவற்றை திருமூலர் பயன் தரக்கூடிய ஆசனங்கள் என்கிறார்.

அவை பத்மாசனம், சுவஸ்திகாசனம், பத்திராசனம், சோதிராசனம், சிம்மாசனம், கோமுகம், வீராசனம், சுகாசனம் ஆகிய எட்டு ஆசனங்களாகும். இவை உத்தமானது.

பதினாறு மாத்திரை கால அளவு, இடது பக்க நாசி துவாரத்தின் வழியே காற்றை உள்ளே இழுக்க வேண்டும். இது 'பூரகம்'எனப்படும்.

64 மாத்திரை கால அளவு காற்றை உள்ளே நிறுத்த வேண்டும். இது கும்பகம் எனப்படும்.

இனி உள்ளிருக்கும் காற்றை மெதுவாக 32 மாத்திரை கால அளவு வலது நாசி வழியாக விட வேண்டும். இது ரேசகம் எனப்படும்.

இது போல் வலது நாசி துவாரத்தின் வழியாக காற்றை இழுத்து உள்ளே அதே கால அளவில் வைத்திருந்து, இடது நாசி துவாரத்தின் வழியாக வெளிவிட வேண்டும்.

இந்த முறையை காலையும் மாலையும் சுமார் பத்து தடவை செய்ய வேண்டும்.

திருமூலர் திருமந்திரத்தில் கூற வில்லை என்றாலும், பிராணயாமம் செய்யும் போது வடக்கு அல்லது கிழக்கு திசைகளை நோக்கி அமர வேண்டும். இது பதஞ்சலி முனிவரின் யோக முறையில் குறிப்பிட்டுள்ள வழி முறைகளாகும்.

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிபட வுள்ளே நின்மலமாக்கில்

உறுப்பு சிவக்கும்,உரோமம் கறுக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடையோனே

 - திருமந்திரம் 575.

பொருள்: பிராணயாமம் செய்தால் உடல் சிவக்கும். தலை முடி கறுக்கும். உடலில் ஆன்மா நிலைத்து நிற்கும். (இறப்பை தவிர்க்கலாம்).

காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு

கூற்றை யுதைக்குக் குறியதுவாமே..

காற்றை பிடிக்கும் கணக்கறிந்தவர் (பிராணயாமம் செய்பவர்) காலனை எட்டி உதைத்து நெடு நாள் வாழலாம்.

இதற்கு இது தான் உபாயம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.