03/04/2021

கோலார் தங்கவயலும் தமிழர்களும்...

 


கோலார் என்கிற பெயர்ச்சொல் ஒரு காலத்தில் அதாவது கொங்கு மண்டலத்தின் பகுதியாக இருந்த காலத்தில் குவாலப்புரம் என்று அழைக்கபட்டது என்றும், அதே போல் இன்று மைசூர் என்று விளிக்கப்படுகின்ற ஊர் பெயர் கொங்கு மண்டல ஆட்சியில் எருமையூர் என்று அழைக்கப்பட்டதாக மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் கூறுகின்றார்.

ஆக எருமையூர் (மைசூர்), வெங்காலூரின் (பெங்களூர்) பெரும்பகுதி, குவாலப்புரம் (கோலார்) மற்றும் காவிரியின் பிறப்பிடமான குடகுமலை வரையும் மேலும் வடவேங்கடம் (திருப்பதி) தென்குமரி என்பது தொன்றுத்தொட்டு தமிழகத்தின் எல்லைக்குள் இருந்தது.


இந்த பகுதிகள் தமிழர்களின் ஏமாளித்தனத்தாலும், வடுகத் திராவிடத் தலைவர்களின் (ஈ.வே.இரா., சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி இன்னப்பிற திராவிடர்களால்) மாற்று அரசியல் போக்கு, பச்சைத்தமிழரான காமராஜரின் தேசியக் கொள்கையினால் தமிழக நிலப்பரப்பினை மீட்டெடுக்காமல் முடியாமல் போய் விட்டது.


மா.பொ.சியார் முயற்சித்திருக்காவிட்டால் சென்னை, திருத்தனி, ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளும் தவறவிட்டிருப்போம்.


தன் தமிழக நிலப்பரப்பு மீட்புக்கு திராவிடக்கழகத்தார், திமுக , காமராஜர், இராஜாஜி போன்ற தேசியத்தலைவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் தமிழகத்து பல முகாமையானப் பகுதிகளை மீட்டிருப்பேன் என்று மா.பொ.சி. அவர்கள் கூறியுள்ளமை நினைவுக் கூறத்தகுந்தது.


திருப்பதி, சித்தூர், குப்பம் (இவை ஆந்திரர் கவர்ந்துக் கொண்டனர்), குமரி மாவட்டத்தில் பல பகுதிகள் எடுத்துக்காட்டிற்கு கண்ணகிக்கோயில் (இன்றுவரை இது தமிழக எல்லைக்குள் இருக்கின்றதாக சொல்லப்படுகின்றது.), பீர்மேடு இன்னப்பிற பகுதிகள் ஆகியவை கேரளர்கள் கவர்ந்துக் கொண்டனர்.


கோலார் தங்கவயல், குடகு, பெங்களூர் தண்டுப்பகுதிகள் இன்னப்பிற பகுதிகள் தமிழர்களின் ஏமாளித்தனத்தால் கருநாடக மாநிலத்திற்கு போய் விட்டதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகள் தொடர்ந்து தமிழகத்தின் எல்லைக்குள் இல்லாமல் போய்விட்டது.


அதனால் இன்று தமிழர்களுக்கு எத்தனை இடையூறுகள்.அதை இன்று கண்க்கூடாக பார்க்கிறோம்.


ஆனால் தமிழர்கள் ஏனைய மொழியினத்தவர் விழிப்புடன் இருப்பது போல், விழிப்பில்லாமலும் அறியாமை என்னும் மடமையில் மூழ்கி சூடு சுரணையற்றப் பிண்டங்களாக நமக்கென்ன வந்தது என்று எருமை மீது மழைப் பொழிந்தது போல் வந்தாரை வாழவிட்டு தன் தொடையில் கயிறுத்திரித்துக் கொள்ளவும் விட்டிருக்கின்றான்.


மத மூடநம்பிக்கை, திரைப்படத் துறையினைரை தலையில் தூக்கி வைத்து ஆடுவத, திராவிட மாயையில் இருந்து விடுபடுவது ஆகிய அறியாமையிலிருந்து விடுப்பட்டால் தான் தமிழர்கள் வாழ்வு மேம்படும்..

இருப்பதைக் காப்போம்...

இழந்ததை மீட்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.