04/06/2021

இது தமிழ்நாடு தான்...

 


தமிழகம் என்பதும் இதன் பெயர். அது ஒரு துணைப் பெயர், சிறப்புப் பெயர். அதுவும் நம்முடையதுதான்.

ஆனால், இயற்பெயர், தமிழ்நாடுதான். அரசியல்பெயர் தமிழ்நாடுதான்.

மூளை முழுக்க துரோகமும் தமிழ் விரோதமும் நிரம்பியிருக்கும் மாலன்களால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. 

ஈராயிரம் ஆண்டுகளாக எத்தனையோ வேந்தர்களாலும் வேளிர்களாலும் சிற்றரசர்களாலும் இதன் பகுதிகள் தனித்தனியே ஆளப்பட்டிருந்தாலும் உலக வழக்கு இதை தமிழ்நாடென்றே கூறியது. 

சேர நாட்டினர் பிரிந்துபோயிருந்தாலும் எல்லையில் பல சேதாரங்கள் நடந்திருந்தாலும் இது தமிழ்நாடாகவே இருந்துவருகிறது. 

வட வேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகமாகவே இது நீடித்துவருகிறது. 

11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இருந்தார்கள், பாண்டியர்கள் இருந்தார்கள், சேரர்கள் பிரிந்துகொண்டிருந்த நேரம். வேறு பல சிற்றரசர்களும் இருந்தார்கள். அந்தக் காலத்தில் இளம்பூரணர் என்கிற இலக்கண ஆசிரியர் எழுதுகிறார்: "நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்" என்கிறார். உன்னுடைய நாடு எது என்று கேட்டால், சோழ நாடு என்று சொல்லாதே, பாண்டிய நாடு என்று சொல்லாதே தமிழ்நாடு என்று சொல் என்று சொல்கிறார். 11 ஆம் நூற்றாண்டில்!-  ராஜ்யங்கள் வேறு, நாடு வேறு என்கிற புரிதல் நமது புலவர்களுக்கு இருந்தது. இளங்கோவடிகளுக்கும் இளம்பூரணருக்கும் இருந்தது. பெரியாருக்கும் திருவிகவுக்கும் சங்கரலிங்கனாருக்கும் ஜீவாவுக்கும் அண்ணாவுக்கும் தம்பிகளுக்கும் இருந்தது.

வெளிப் பேரரசுகள் ஆண்டிருந்தாலும் காலனிய காலத்தில் நாம் முகமிழந்திருந்தாலும் இதை மாற்றமுடியவில்லை. நாம் அதிகாரமில்லாதபோது நமது அடையாளத்தை மாற்றி வைத்திருந்தார்கள். நாம் அதிகாரம் பெற்றபோது மீண்டும் அதை தமிழ்நாடாக்கிக்கொண்டோம். சென்னை மாநிலம் தமிழ்நாடு என அதிகார பூர்வமானப் பெயரை அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் பெற்றது.

இது தமிழ்நாடுதான். சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று ஏன் பெயர்சூட்டவேண்டும் என தமிழறிஞர்கள் பலர் (அறிஞர் அண்ணா மட்டுமல்ல) எழுதியிருக்கிறார்கள். போராடியிருக்கிறார்கள். சங்கரலிங்கனார் உயிர்துறந்தார். அவர்களின் வாதங்களை அறிவாரா மாலன்? அறிந்திருப்பார். ஆனால் தமிழ் விரோத மனப்பான்மை இப்படியெல்லாம் அவரைப் படுத்தியெடுக்கிறது. 

மாலன்களின் நோக்கம் "தமிழகம்"கூட அல்ல. இதைத் தட்சிணப்பிரதேசமாக மாற்றவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற அடையாளங்களைக் கண்டு நடுங்கிறார்கள் மாலன்களைப் போன்றவர்கள். 

ஆனால் சிலப்பதிகார வரிகளைச் சொல்லி எச்சரிப்பதாக இருந்தால் இப்படிச் சொல்வேன்: இமிழ்கடல் வேலி சூழ்ந்திருக்கும்வரை இது தமிழ்நாடு தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.