17/07/2021

என் இதயத்தின் இறுதிசுற்று...

 




வாழ்வின்
வசந்தங்களை தேடி
ஒரு பட்டாம்பூச்சியாய்
சுற்றி தெரிந்தவன் நான்...

உலகில்...
அங்கங்கே சிதறிக்கிடக்கும்
ஒட்டுமொத்த இன்பமும்
உன்னிடமிருந்தே கிடைக்கிறது
என்ற நம்பிக்கை எனக்கு...

உன்னை....
பார்க்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உன் கைபிடித்து...
இந்த உலகத்தையே சுற்றி வந்த
திருப்தி எனக்கு.....

தென்றல் வீசும் தெருக்களில் எல்லாம் 
நமக்காக ஒரு வீட்டை
ஒத்திக்கு வாங்கி வைத்த
புத்திக்கு சொந்தக்காரன் நான்தான்...

கோடி கோடியாய்
ஜோடி சேர்ந்து வந்து அமரும் 
புறாக்களின் சரணாலயங்களிலெல்லாம்
நமக்காக ஒரு கிளையை
விலை பேசிவைத்த
சுகவாசி நானேதான்...

அலையின் வருகைக்காக
காத்திருக்கும் கடற்கரை போல..
அலைபேசியோடு 
உன் அழைப்பிற்காக
காத்திருந்த காலம்..
என் வாழ்வின் அது ஒரு கனாக்காலம்...

பொன்மாலையிட்டு வரவேற்கும்
என்றுதான்
இதயப் படிக்கட்டில்
காதல் மலை நோக்கி
காலடி எடுத்து வைத்தேன்...

கால் தடுக்கி விழுந்தால் கூட
எழுந்து விடலாம்...
இந்த உலகத்தில்
காதல் தடுக்கி விழுந்தவர்கள்
எழுந்ததாய் சரித்திரம் இல்லை...

நானும் விழுந்தேன்
கால் தடுக்கி அல்ல
காதல் தடுக்கி...

என்
ஆத்மார்த்தமான ஆசைகள் எல்லாம்
என் கண்முன்னே
காயம்பட்டு நிற்கிறது...

இன்றோ எனக்கு
மருந்து போடவும் ஆள் இல்லை
உன்னை மறந்து தொலைக்கவும்
வழி இல்லை ...

போலியான புன்னகையோடு
உன்னை
கடந்து செல்ல முடிந்த என்னால்....
உன் நினைவுகளை கடந்து செல்ல முடியவில்லை...

நீ மீட்டுவிடுவாய்
என்ற நம்பிக்கையில் தான்
காதல் கடையில்
என் உயிரை அடகு வைத்தேன்...
இன்று
மீட்க முடியாது என்று
தெரிந்த பின்னும்
அது உனக்காக போவதில்
மகிழ்ச்சி கொள்கிறேன்....

உதிர்ந்து விழும்
பூக்களுக்குத்தான் தெரியும்
தன்னை யாரும் 
தீண்டாத சோகம் என்னவென்று....

உடைந்து போன
இதயத்திற்குத்தான் தெரியும்...
வாழ்க்கை 
எவ்வளவு ரணமானது என்று...

காதல் உணர்வு சுகமானதுதான்...

அது... 
வென்றவர்களுக்கு....
சொர்க்கத்தை தாண்டிய சந்தோஷத்தையும்...

தோற்றவர்களுக்கு....
மரணத்தை தாண்டிய நரகத்தையும்...
பரிசளிக்கிறது...

உன் நினைவுகளை
சுமந்து கொண்டு வாழ்வது
சுகமானதுதான்....
என்றாலும்...

காலத்துக்கும்
ஒரு சுமைதாங்கியாய் வாழ
என்னால் முடியாது....

காரணம் ?

பனித்துளி தாங்கும் மலர்கள்...
பாறைகள் தாங்குவதில்லை...
என் இதயம் மலரினும் மெல்லியது டீ
என்னால் எப்படி தாங்க முடியும்...

நான் சாயும் தோளில்...
இன்று
வேறு ஒருவன் சாய்ந்திருக்கிறான்...

பரவாயில்லை....

இந்த பூமி 
உன்னைவிட ஒருபடி மேல்
நான் உறங்குவதற்கே
இடம் தர தயாராய் இருக்கிறது...

சென்று வருகிறேன்...
என்னுயிர் காதலியே
சென்று வருகிறேன்....

எந்த ஒரு விளையாட்டிலும்
அரையிறுதிக்கு பிறகுதான்
இறுதிச்சுற்று வரும்....

ஆனால்...

இந்த காதல் விளையாட்டில் மட்டும்தான்
தகுதிச்சுற்றில் தோற்றாலே
இறுதிச்சுற்று வந்துவிடும்...

உன் கண்ணுக்கு தெரியாமல் 
நான் மண்ணுக்குள் சென்றாலும் 
உன் உண்மையான சிரிப்பிலும்
சந்தோஷத்திலும்
நான் வாழ்ந்து கொண்டே தான் இருப்பேன்..

ஒருவேளை
நாளை
என் கல்லறையில் பூக்கும் பூக்கள் கூட
உன் பெயர் சொல்லி பூத்தாலும்
ஆச்சர்யப்படுவதற்கில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.