25/08/2021

ஈகோ என்பது என்ன?

 


தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும்..

மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது..

கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது என்பதன் சுருக்கம் தான் (Ending God out) ஈகோ என்பர்.

நமது பலவீனத்தை, தவறையாராவது சுட்டிக்காட்டினால் ஈகோ விழித்துக் கொள்கிறது. மோதல் ஏற்படுகிறது..

ஈகோ மனிதர்களின் அடையாளம்...

நம்மிடம் வணக்கத்தை கட்டாயம் எதிர்பார்ப்பர், நன்கு தெரிந்தவர் என்றாலும், கண்டும் காணாதது போல நடப்பர்.

அதிகம் பேச மாட்டார்.

தம் இனத்துடன் மட்டும் பழகுவர்.

தம்மை நாடியே பிறர் வர வேண்டும் என்று இருப்பர்.

தன்னை விட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பர்.

தான் மட்டும் தான் சிறந்தவர் என நம்புவர்.

ஈரமும், இரக்கக் குணமும் அற்றதன்மை பேச்சில் வெளிப்படும்.

மற்றவர் தன்னை மதிக்க வேண்டும், புகழ வேண்டும் என்பதில் தீராத ஆசை கொள்வர்.

தான் எதை செய்தாலும் பிறர்க்கு தெரியும் படி சுய விளம்பரம் செய்ய விரும்புவர்.

தன்னை முந்தி செல்வோர் மீது பொறாமைபடுவர்.

தன் சுயநலத்திற்காக பிறரை சுரண்டுவர்.

தன்னைவிட குறைந்த படிப்பு, பதவி, அந்தஸ்து உள்ளவர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள்.

தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.

தன்னை சாதாரண மனிதர்களாய் நினைத்து கொள்வதே கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத காரியமாகும்.

பிறர் தன்னை மிகவும் குறைவாக மதிப்பிடுவார்கள் என்ற நினைப்பில் தங்களை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு முயல்வர்.

எல்லா புனிதமான தோற்றத்திற்கு மறுபுறம் இன்னொரு மோசமான குரூரமான முகமிருக்கும்.

தகவல் தொடர்பு சரியான முறையில் இருக்காது.

தெரியாதததைக் கேட்டு தெரிந்து கொள்ள தயங்குவர்.

அதிக  முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதில் தீவிரமாக இருப்பர்.

ஈகோ பிரச்சினையால் பல விஷயங்களில் முரண்டு பிடிப்பது.

முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிப்பது இவர்களது வழக்கமாக இருக்கும்...

ஈகோ அற்றவர்களின் இயல்புகள்..

ஈகோ இல்லாத மனிதர்கள் பதவி கிடைத்து விட்டது என்று அதிகப்படியான அதிகாரம் செய்ய மாட்டார்கள். பதவி நிலையானது அல்ல என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

அழகு கூடுகிறது என கர்வம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். ஒருநாள் உடல் அழகு மங்கப்போகிறது என்று.

பணக்காரர் ஆனாலும் பகட்டாக இருப்பதில்லை. பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள்.

அந்தஸ்து வந்தாலும், உடன் பிறந்தவர்களை முற்றிலுமாக பிரிந்துவிட மாட்டார்கள்.

நட்பு கசந்து விடாமல், திருமண வாழ்க்கை சரிந்து விடாமல் கவனமாக நடந்து கொள்வார்கள்.

ஈகோவை விட்டுவிட்டால் வாழ்வு லேசாகி விடும் என்பதை உணர்ந்தவர்கள்.

வானம், பூமி, ஆறு, கடல், மலை எல்லாம் இறைவன் தந்தது. நாம் உருவாக்கியது அல்ல.

நமது சக்தி, பலம், முயற்சி நமக்கு செல்வத்தை தந்து இருக்கலாம். ஞாபகமிருக்கட்டும்.

நமது திறமைகள் கடவுளால் நமக்குத் தரப்பட்ட கொடை.

மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கும் போது ஈகோ குறைந்து விடுகிறது.

அறிவாற்றல் குறைந்தவர்களிடம் ஈகோ அதிகரிக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.