01/07/2017

கிரிக்கெட்டும் இட ஒதுக்கீடும் - 2...


௨) அப்படி என்றால் பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமா?

ஆம். பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமே.

அதனை அந்த நிறுவனமே கூறியும் இருக்கின்றது. சமீப காலமாக இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் பிசிசிஐ தனது பண பலத்தையும் மற்ற அரசியல் செல்வாக்கினையும் வைத்துக் கொண்டு அரசுக்கு பிடி கொடுக்காமல் ஆடிக் கொண்டி இருக்கின்றது. அதாவது அரசின் சலுகைகளை அந்த தனியார் நிறுவனம் பெற்றுக் கொள்ளுமாம் ஆனால் அரசின் கீழ் அது வராதாம். இதுவே பிசிசிஐ இன் நிலை.

http://www.deccanherald.com/content/130248/bcci-takes-government-says-its.html

http://articles.timesofindia.indiatimes.com/2012-04-27/lucknow/31439613_1_bcci-arjuna-award-sports-federation

௩) அப்படி என்றால் பிசிசிஐ இன் சார்பாக விளையாடும் வீரர்கள் இந்திய விளையாட்டு வீரர்கள் இல்லையா?

நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றீர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனம் உங்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கும். நீங்கள் இன்ன பணியினைச் செய்ய வேண்டும் அதற்கேற்றார்ப் போல் அந்நிறுவனம் சம்பளம் வழங்கும். அந்நிலையில் நீங்கள் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகின்றீர்களே தவிர்த்து அரசாங்க ஊழியர்களாக கருதப்படமாட்டீர்.

அதனைப் போன்றே தான் பிசிசிஐ இன் கிரிக்கெட் வீரர்களும். அவர்களுக்கு பிசிசிஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருக்கின்றது. அவர்கள் பிசிசிஐயிடம் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு அதற்காக விளையாடுகின்றனர். அவர்களைத் தேர்வு செய்வதும் அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சம்பளம் போன்றவற்றை முடிவு செய்வதும் முழுக்க முழுக்க பிசிசிஐ நிர்வாகத்தின் கையிலேயே இருக்கின்றது. இந்திய அரசு அந்த விடயங்களில் தலையிட முடியாது. பிசிசிஐ அதன் விருப்பத்திற்கேற்ப அணியினைத் தேர்வு செய்துக் கொள்ளும்...விளையாடும்... பணம் பார்க்கும்... அரசாங்கம் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்!!! இந்நிலையில் அந்த வீரர்கள் பிசிசிஐயின் வீரர்கள் ஆகின்றனரே தவிர்த்து இந்திய வீரர்கள் ஆக மாட்டார்கள். நிற்க..

இப்பொழுது இரு கேள்விகள் எழலாம்...!

ஒன்று - அட என்னங்க, அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே?

ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர். இந்நிலையில் நன்றாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டையும் அரசின் வசம் தந்து விட்டு அதையும் நாசமாக்கச் சொல்லுகின்றீர்களா?

ஒரு விளையாட்டாவது நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

அரசாங்கம் தேர்வு செய்தால் தான் அவன் இந்திய வீரனாக ஆகின்றானோ... அப்படி என்றால் அரசாங்கம் திறமை இல்லாதவர்களை எல்லாம் சேர்த்து ஒரு அணியை உருவாக்கும்... அதனை இந்திய அணி என்று ஏற்றுக் கொள்வீர்... ஆனால் திறமையான வீரர்களை கொண்டு ஒருவன் தனியாக அணியினை அமைத்தால் அதனை இந்திய அணி என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்? அப்படித் தானே...!

பதில்: அரசாங்கம் என்பது மக்கள் தேர்ந்தெடுத்த/ மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பினை மக்கள் கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் தனியார் நிறுவனங்கள் என்பன அவ்வாறு இல்லை. அவர்களை மக்கள் கேள்விக் கேட்க முடியாது.

இன்றைய நிலையில் பிசிசிஐ முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்டு ஒரு அணியினை அமைத்தாலும் அதனை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் திறமையின் அடிப்படையில் அணியினைத் தேர்வு செய்யலாம், மொழியின் அடிப்படையில் தேர்வு செய்யலாம், சாதியின் அடிப்படையிலும் தேர்வு செய்யலாம்...அது அவர்களின் விருப்பம். அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

அந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் அதன் விருப்பதிற்கேற்ப தேர்வு செய்யும் ஒரு அணியினை இந்திய நாட்டின் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அணியாக நாம் கருத முடியாது. ஏனெனில் அந்த அமைப்பினை குறித்து நாம் கேள்விகளோ அல்லது அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கங்களோ நாம் எழுப்பவும் கோரவும் முடியாது. எனவே மக்களின் பங்கு சிறிதும் இல்லாத தனியார் அமைப்புகள் தேர்வு செய்யும் அணியினை நாம் எக்காரணம் கொண்டும் மக்கள் அனைவரையும் குறிக்கும் இந்திய நாட்டு அணியாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமை இல்லாதவர்களை அரசாங்கம் தேர்ந்து எடுத்தால் அதனை சுட்டிக் காட்டி கேள்விகளை கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால் அதே உரிமை தனியார்களிடத்து செல்லுபடியாகாது.

இரண்டு - பிசிசிஐ இன் அணி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அதனை ஏன் ஊடகங்கள் இந்திய அணி என்று கூறுகின்றன... இந்திய அரசும் ஏன் அதனை மெளனமாக வேடிக்கைக் கண்டுக் கொண்டு இருக்கின்றது?
இந்த கேள்விக்கும் சரி முதல் கேள்வியில் நான் பதில் கூறாது விட்ட பகுதியான 'அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே?

ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர்' என்பதற்கும் ஒரே விடை.

அரசியல்!

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், பார்ப்பன‌ அரசியல்!

ஆம். பார்ப்பன‌ அரசியலே மற்ற விளையாட்டுத் துறைகள் இந்திய நாட்டில் வளராது இருப்பதற்கும், கிரிக்கெட் இவ்வளவு பெரிய விளையாட்டாக வளர்ந்து நிற்பதற்கும் காரணம் ஆகும்.

"ஆரம்பிச்சிடீங்களா...இதுக்கும் பார்ப்பன‌ன் தானா பழி போடுவதற்கு கிடைத்தான்" என்று நண்பர்கள் சிலர் இந்நேரம் பேச ஆரம்பித்து இருப்பர். இந்நிலையில் நாம் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்தோம் என்றால் நம்மை 'இவன் பார்ப்பன‌ர்களை குறை சொல்வதையே குறியாக வைத்து இருக்கின்றான்... சாதிகளை யாரும் பார்க்காத இக்காலத்திலும் சாதியினைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்' என்று பழியினை நம் மீது திருப்பி விடுவர். எனவே நாம் குற்றச்சாட்டுகளோடு சில ஆதாரங்களையும் வைக்க வேண்டி இருக்கின்றது. அதற்கும் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.