15/01/2018

வனத்தை அழிக்கக்கூடிய உன்னிச்செடியில் பர்னிச்சர் தயாரிக்கும் கோவை, சீங்கப்பதி மலைக்கிராம மக்கள்...


வனத்தை ஆக்கிரமித்து அழிக்கக் கூடியது லாண்டனா எனப்படும் உன்னிச்செடி. அதை எப்படி அழிப்பது, காடுகளை அதன் பிடியில் இருந்து எப்படி மீட்பது என்பதே சூழல் ஆர்வலர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. அதற்கு விடையளிக்கும் விதமாக கோவையில் தயாராகிறது லாண்டனா பர்னிச்சர் பொருட்கள். அழிக்கப்பட வேண்டிய ஒரு தாவரத்தை அழகான பர்னிச்சர் பொருட்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பழங்குடி மக்கள். பார்வைக்கு மூங்கிலைப் போல காட்சியளிக்கின்றன அந்த பர்னிச்சர் பொருட்கள். விலை மட்டும் சற்று குறைகிறது. தரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.

புதர் போல படர்ந்து மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும். நீராதாரத்தை வற்றச் செய்துவிடும் என்ற குற்றச்சாட்டு இந்த லாண்டனா எனப்படும் உன்னிச்செடி மீது உண்டு. தமிழக வனங்களை ஆக்கிரமித்துள்ள இச்செடியை அழிப்பது வனத்துறைக்கு பெரிய சவாலாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தான் கோவை சீங்கப்பதி மலைக்கிராம மக்கள் இந்த செடிக்கு வேறொரு அடையாளம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தாங்கள் உள்ள வனப்பகுதியில் ஆக்கிரமித்திருக்கும் லாண்டனா செடிகளை வெட்டி வந்து பர்னிச்சர் பொருட்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சீங்கப்பதி மக்கள். ஒருபுறம் வனத்தின் சூழல் காப்பாற்றப்படுகிறது. கலைப் பொருளாக பழங்குடி மக்களின் பொருளாதாரத் தேவையை ஈடு செய்து வருகிறது. எதற்கும் பயன்படாது என ஒதுக்கப்பட்ட உன்னிச்செடி அனைவராலும் விரும்பக்கூடியதாக அடையாளம் பெற்றிருக்கிறது.

பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்ட இந்த பர்னிச்சர் பொருட்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. முதல் முறையாக லாண்டனா செடியில் இருந்து தயாரான சோபா, மேசை, டீபாய், இருக்கை, புத்தக அலமாரி, சிறிய அளவிலான குப்பைத் தொட்டி, பொம்மை பொருட்கள் என சுமார் 10 விதமான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இதன் விற்பனையும் அதிகரித்துள்ளது.

மிக வேகமாக பரவக்கூடியது லாண்டனா செடி. வெட்டி வீசுவதைத் தவிர இதை கட்டுப்படுத்த வேறெந்த வழிமுறையும் நம்மிடம் இல்லை. அப்படியான சூழலில் பழங்குடிகளின் இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.