27/08/2018

9 மதகுகள் உடைந்து விழுந்த முக்கொம்பு மேலணையில் தற்காலிக சீரமைப்பு பணிகள் தொடங்கின...


முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த இடத்தில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கின. இந்த பணிகளை 4 நாட்களில் முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி தண்ணீர் வந்தடைகிறது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆறு மூலமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மட்டும் முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. கொள்ளிடம் தடுப்பணையில் தென்பகுதியில் 45 மதகுகள் உள்ளன. வடபகுதி 10 மதகுகளை கொண்டதாகும். ஒவ்வொரு மதகின் நீளம் 12 மீட்டர்.

இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி இரவு முக்கொம்பு மேலணை பகுதியில், கொள்ளிடம் பாலத்துடன் கூடிய அணையில் 6 முதல் 14 வரையிலான 9 மதகுகள் உடைந்து கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விட்டன.

சேதமடைந்த பகுதியின் மொத்த நீளம் 108 மீட்டர் ஆகும். தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுவதற்காகவே கொள்ளிடம் ஆறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தற்போது 9 மதகுகள் உடைந்தாலும் உபரிநீர் வெளியே செல்வதில் எந்த சிரமும் இல்லை.

இந்தநிலையில் கொள்ளிடம் தடுப்பணை இடிந்து விழுந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் நேற்று முதல் மேற்கொண்டனர். சீரமைப்பு பணிக்காக ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மணல் நிரப்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப்பட்டு, அவை டிராக்டர் மூலம் கொள்ளிடம் தடுப்பணையின் இடிந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு மணல் நிரப்பிய சாக்குமூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதன் மூலம் கொள்ளிடம் ஆற்றில் வீணாக செல்லும் தண்ணீர் ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதகுகள் உள்ள இடத்தில் சவுக்கு கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தற்போதுள்ள மதகுகளில் சிக்கி இருந்த கழிவுப்பொருட்கள், தண்ணீர் செல்ல இடையூறாக இருந்த கம்புகள் மற்றும் செடி, கொடிகளை தொழிலாளர்கள் ஆற்றுக்குள் இறங்கி வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

இந்த சீரமைப்பு பணிகளை 100-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் அருகில் இருந்து கண்காணித்து வருகிறார்கள்.

மேலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, காமராஜ், துரைகண்ணு, எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டனர். இந்த பணிகளை 4 நாட்களில் முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.