14/09/2018

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.88 ரூபாயாக வீழ்ச்சி...


இந்தியாவிற்கு இதனால் என்ன நஷ்டம்?

1. இந்தியா தன் கையிருப்பில் உள்ள டாலர்களில் பெரும் பகுதியை கச்சா எண்ணெய் இறக்குமதிக்குதான் செலவிடுகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதால் இந்தியாவிலிருக்கும் டாலர் கையிருப்பு வேகமாக குறையும்.

2. இந்தியா வாங்கியுள்ள கடனுக்கான வட்டியை டாலரில்தான் திருப்பி செலுத்துகிறது. அந்த வட்டிக்கான இந்திய மதிப்பு கூடுதலாகும்.

உலக வங்கியில் அதிகம் கடன் வாங்கியுள்ள நாடு இந்தியா.

உலக வங்கியில் இதுவரை (70 ஆண்டுகளில்) இந்தியா வாங்கியுள்ள கடன் 104 பில்லியன் அமெரிக்க டாலர்.

அடுத்த இடத்தில்

பிரேசில் 58.8 பில்லியன் $
சைனா 55.6 பில்லியன் $
மெக்சிகோ 54 பில்லியன் $
இந்தோனேசியா 50.5 பில்லியன் $

2015ம் ஆண்டில் மட்டும் உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி - IBRD (The International Bank for Reconstruction and Development)யில் இந்தியா வாங்கியுள்ள கடன் 2.1 பில்லியன் $ . இது 2015ம் ஆண்டில் அந்த வங்கி கொடுத்திருக்கும் மொத்த கடன் தொகையில் 12%. 2015ம் ஆண்டில் அதிக கடன் வாங்கியிருக்கும் நாடும் இந்தியாதான்.

(மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா கடனே வாங்கவில்லை என ஒருசில பதிவுகளை சில நாட்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம் )

'பிரதான் மந்த்ரி கிராம் சதக் யோஜனா' திட்டத்தை செயல்படுத்த 500 மில்லியன் டாலர் கடன் வாங்கும் ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இந்தியாவும் உலக வங்கியும் செய்துகொண்டுள்ளன.

உடனடி தீர்வுதான் என்ன?

2013ம் ஆண்டு இதேபோல டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தபோது டாக்டர் மன்மோகன்சிங் NRIகளின் உதவியை நாடினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களிடம் உள்ள பணத்தை உடனடியாக இந்தியாவிற்கு அனுப்ப கோரிக்கை விடுத்தார். அந்த பணத்திற்கு நிறைய சலுகைகளும் வழங்கப்பட்டது. புதிதாக முதலீட்டு பத்திரங்களும் வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அந்த ஒரு காலாண்டில் மட்டும் இந்தியாவிற்கு வந்த பணத்தின் அளவு 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

தற்போதுவரை இது சாதனையாகவே உள்ளது.

இவ்வளவு பெரிய தொகை இதற்கு முன்பும் சரி தற்போதும்சரி இந்தியாவிற்கு மொத்தமாக ஒரு காலாண்டில் வந்ததில்லை.

இது எப்படி இந்தியாவிற்கு லாபம் என சிலர் நினைக்கலாம்.

இந்தியாவிற்கு வெளியிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் அனைத்து பணமும் அமெரிக்க டாலர்களாக மாற்றப்பட்டுதான் வரும்.

இந்த பணம் அனைத்தும் இந்தியாவிற்கு தொடர்பில்லாத பணம் (ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய்தான் இந்தியாவின் சொந்த வருவாய்).
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் அத்தனை பணமும் (டாலர்) இந்தியாவை பொறுத்தவரை வரவுதான். இந்தியாவின் டாலர் கையிருப்பில் அந்த பணம் சேரும்.

உள்நாட்டில் முதலீடுகளை செய்து அதன் மூலம் பொருட்களை உற்பத்தி செய்து , அப்பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டுவது ஒரு அரசின் கடமை. இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு.

இதில் எதுவும் சம்பந்தப்பட்டிருக்காத பணம்தான் NRIகளின் வருவாய்.

இன்னும் புரியும்படி சொல்வதென்றால் இந்திய பட்ஜெட்டிலிருந்து உதாரணம் காட்டலாம்.

கடந்த பட்ஜெட்டில் இந்தியாவின் மொத்த வருவாய் - 350 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

கடந்த ஆண்டு NRIகள் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த வருவாய் - 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

350 - 70 = 280 பில்லியன் டாலர்கள் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி, வரி, ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருவாய். மீதி (70) NRIகள் மூலம் கிடைத்த வருவாய்.

உலக அளவில் வெளிநாடு வாழ் குடிமக்களால் அதிக வருவாய் பெறும் நாடு இந்தியா. அடுத்த இடத்தில்

சைனா - 63 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

பிலிப்பைன்ஸ் - 5.3 பில்லியன் $

மெக்சிகோ - 5 பில்லியன் $

ஃபிரான்ஸ் - 4.1 பில்லியன் $

இந்தியாவிற்கு அதிக பணம் அனுப்பும் NRIகளில் கீழ்கண்ட 5 நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் முதல் 5 இடத்தில் உள்ளனர்.

1. UAE - 13.8 பில்லியன் $ (மொத்த NRI வருவாயில் இது 20%)

2. USA - 11.7 பில்லியன் $ (மொத்த NRI வருவாயில் இது 17%)

3. சவுதி அரேபியா - 11.2 பில்லியன் $ (மொத்த NRI வருவாயில் இது 16.3%)

4. குவைத் - 4.6 பில்லியன் $ (மொத்த NRI வருவாயில் இது 6.7%)

5. கத்தார் - 4.1 பில்லியன் $ (மொத்த NRI வருவாயில் இது 6%)

இது போன்ற சூழலில் டாக்டர் மன்மோகன்சிங் செய்ததுபோல வெளிநாடு வாழ் இந்தியர்களின் மூலம் உடனடியாக வருவாயை ஈட்டுவதுதான் புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும்.

டீமானிட்டைசேஷன் மூலம் ஒட்டுமொத்த ஃபர்னிச்சரையும் உடைத்த மோடி அவர்கள் இனியாவது சுதாரிக்க வேண்டும்.

ஏனென்றால் இனியும் உடைத்து விளையாட எந்த ஃபர்னிச்சரும் நம் கைவசம் இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.