19/01/2019

மனம்...


பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம். இது தான் நமக்குள் இருக்கும் திருடன்.

அந்த திருடனோடு தான் நாம் சண்டையிட வேண்டிருக்கிறது. திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

அடுத்த வீட்டில் ஒரு திருடன் பிடிபட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம். ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான். அவனைப் பிடித்து தண்டிக்க நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை.

வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம். நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம். திருடனைத் தண்டிக்கத் திருடனின் இருப்பு அவசியம்.

புனித மனிதர் ஒரு திருடனை அடிக்கவே முடியாது. ஆகவே திருடர்களே எப்பொழுதும் திருடர்களை கண்டிப்பார்கள். குற்றவாளிகளே குற்றவாளிகளை குறை சொல்வர். காமவயப்பட்டவரே பாலுறவை மிகவும் கண்டிப்பர். நமக்குள் இருப்பது தான் வெளியே தோன்றும்.

ஒருவன் 'திருடன்.. திருடன்.. விடாதே பிடி என்று கத்தினால் முதலில் அவ்வாறு கத்துபவனைப் பிடிக்க வேண்டும் என்கிறார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.

ஏனெனில் அவ்வாறு கத்துபவன் எதிர்காலத்தில் திருடுவான்.

நம் நோய்களை நமது மனநோய்களையே பிறர் மீது சுமத்துகிறோம். எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும் போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

பிறரைக் குறை சொல்ல அதிகம் இல்லாத போது நம்மியல்பே அங்கு வெளிப்படும். நமக்குள் நடக்கும் போராட்டமே இன்னொருத்தர் மேல் ஏற்றி உரைக்கப்படுகிறது.

ஆகவே நமக்குள் முரண்பாடு தோன்றாத போது போராட்டம் எழாத போது இன்னொருத்தர் மேல் பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று போகிறது.

மனித மனம் உடைப்பட்டு கிடக்கிறது. அவனது வன்முறை இங்கு தான் பிறக்கிறது.

மனித மனம் அஹிம்ஸையாக மாறத் தொடங்கும்போது அது முழுமையாகி விடும். ஒன்றாக இருக்கும். பிளவுபடாது.

மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும் போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது. ஆனந்த நடனமே அமையும். மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் தொடங்குகிறது. அப்பாதையில் சென்று இறையை அடையலாம்.

முழுமை அடைந்த மனத்தால் மட்டுமே இறையை அடைய முடியும். வேறு வழியே இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.