29/04/2019

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்து விடுமாம்...


மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால்
கட்டப்பட்டது.

1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’
விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.

இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவற விட்டுவிடக் கூடாது.

இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம்.

இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச் சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஹரிஷ் சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம்.

இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலங்கம் ஒன்று அமைந்திருக்கிறது. 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது.

அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக
இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது.

அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம்.

மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன.

இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம்,
த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு
யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும்
ஒவ்வொரு தூணாக இடிந்து விழும்.

அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து விடும் என்று நம்பப்படுகிறது.

அந்த நாளில் இந்த உலகமும் அழிந்து விடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.