11/08/2020

2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கியது ஏன் ?



மோடி அரசு பி.எம் கேர்ஸ் மூலம் வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக மே17 இயக்கம் குற்றசாட்டு.

கொரோனா நிவாரண நிதியைப் பெறுவதற்காக PM Cares(பி.எம் கேர்ஸ்) எனும் நிதி அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. பி.எம் கேர்ஸ் எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல என்றும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெறலாம் என்றும் சர்ச்சை கிளம்பியது.

பி.எம் கேர்ஸ் மூலம் பெறப்படும் நிதி குறித்த கணக்கை இவர்கள் யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது எனக் கூறப்பட்டது.

இந்த நிதி மத்திய தணிக்கை குழு (CAG)யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்கவே முடியாது எனத் தகவல் வெளியானதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“2.5 லட்சம் ரூபாய் வெண்டிலேட்டரை 4 லட்சம் கொடுத்து வாங்கிய மோடி அரசு?” : பி.எம் கேர்ஸ் ஊழல் அம்பலம்..!
இந்நிலையில், பி.எம் கேர்ஸ் மூலம் மோடி அரசு பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக மே17 இயக்கம் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மே17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெரும்தொற்றில் இந்தியாவே நிலைகுலைந்து போயிருக்கும் வேளையில் எரிகிற வீட்டில் கிடைப்பது லாபமென்கிற ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க நிதி தாருங்களென்று ஏற்கனவே இருக்கும் அரசு கணக்கை தவிர்த்துவிட்டு மோடி புதிய கணக்கில் நிதி கேட்டார்.

மேலும் இந்த கணக்கை தணிக்கை செய்யமுடியாதென்றும், எவ்வளவு பணம் வருகிறது என்ன செலவு செய்திருக்கிறோமென்ற கணக்கையும் காட்டதேவையில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்தது மோடி அரசு. இந்த செயல்பாட்டை அப்போதே பலரும் இது ஊழலுக்குத்தான் வழிவகுக்குமென்று எச்சரித்தனர். இப்போது முன்பு சொன்னது போல பி.எம் கேரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

அதாவது, ஆகஸ்ட் 06’2020அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பி.எம்.கேர் நிதியிலிருந்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாநில மருத்துவமனைகளுக்கு 18,000 வெண்டிலேட்டர்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வாங்கி அனுப்பப்பட இருக்கிறதென்றும் மொத்தம் 60,000 வெண்டிலேட்டர்கள் இன்னும் சில மாதங்களில் உள்நாட்டிலேயே தயாரித்து கொடுக்கப்படுமென்றும் அதில் 50,000 வெண்டிலேட்டர்கள் பிஎம்.கேர் நிதியிலிருந்தும் 10,000வெண்டிலேட்டர் மத்திய அரசு நிதியிலிருந்தும் கொடுக்கப்படுமென்று அறிவித்தது.

இந்நிலையில் முன்று நாட்களுக்கு பிறகு நேற்று ஆகஸ்ட் 09’2020இல் பிஜேபியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் பிஜேபியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா சொன்னதாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதில், இன்று 50,000 வெண்டிலேட்டர்கள் பி.எம்,கேர் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் இன்னும் 20,000வெண்டிலேட்டர் விரைவில் கொடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பானசுகாதாரத்துறை 18,000 வெண்டிலேட்டர்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதென்று சொல்லும்போது, பிஜேயின் தலைவர் ஏன் இந்த எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிமாக்கி 50,000என்று சொல்ல வேண்டும்.

அப்படியானால் மீதமிருக்கிற 32,000 வெண்டிலேட்டர்கள் எங்கே? இதற்கான பணம் எங்கே? ஏற்கனவே 2.5லட்சம் பெருமானமுள்ள வெண்டிலேட்டர்களை 4 லட்சம் கொடுத்து மோடி அரசு வாங்குவதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இப்போது எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவது எதனால்? அதேபோல மொத்தமே 60,000 வெண்டிலேட்டர்கள் தான் என்று அரசு சொல்கிறது.

ஆனால் பிஜேபியோ 70,000கணக்கு சொல்கிறது. ஆக எப்படிப்பார்த்தாலும் கொரோனா தொற்றை பயன்படுத்தி வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழலை பிஜேபி அரசு செய்திருக்கிறது என்பது மேற்கூறிய அவர்களின் அறிக்கையின் வாயிலாகவே அறியமுடிகிறது.

இதன் உண்மை தன்மையை அறிய பி.எம்.கேர் நிதியை உடனடியாக அரசின் வரம்பிற்குள் கொண்டுவந்து முறையான தணிக்கை செய்து உண்மையை நாட்டுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.