17/10/2020

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்...

மதுரை: அரசு ஊழியர்கள், சம்பளத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

விவசாயிகள் கொண்டு வரும் நெல்மூட்டை ஒன்றுக்கு, ரூ.40 லஞ்சம் வாங்குவதாக கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கூறியதாவது: அரசு ஊழியர்கள், சம்பளத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். ஒரு நெல்மணி முளைத்து வீண் போனாலும், அதற்கு காரணமான நெல் கொள்முதல் அதிகாரியிடம் பணத்தை வசூலிக்க வேண்டும். ஒரு நெல்மணி முளைத்து வீணானாலும், அதற்கான பணத்தை வசூலிக்க வேண்டும். அப்போது தான் நெல்மணிகள் வீணாவது தடுக்கப்படும்.

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் போராடுவதை பார்க்க முடிகிறது. நெல் கொள்முதல் செய்வதற்கு மாற்று ஏற்பாடுகளை அரசு விரைந்து முடிவெடுப்பது அவசியம்.

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்மூட்டைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து உரிய விளக்கமளிக்கும்படி, நுகர்பொருள் வாணிப கழக இயக்குநருக்கு உத்தரவிட்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.