16/07/2021

உன் நினைவுகள்...

 



நிலவின் விழிகளில்
நான் தினம் படித்த
உந்தன் கையொப்பங்கள்தான்
என் கனவுகளில்
நான் தினம் வரையும்
உந்தன் ஓவியங்கள்...

ஆதவனின் அகராதிக்குள்
நான் தேடி அலைந்த
உந்தன் வார்த்தைகள்தான்
என் இருதயத்துக்குள்
நான் கிறுக்கிக் கொண்ட
உனக்கான கவிதைகள்...

வானத்தின் பக்கங்களில்
நான் பூசிக் கொண்ட
உந்தன் வண்ணங்கள்தான்
என் உதடுகளில்
நான் தீட்டிக் கொண்ட
வெட்கத்தின் சுவடுகள்...

வீண்மீன்களின் அரிச்சுவடியில்
நான் எழுதிக் கொண்ட
உந்தன் தீண்டல்கள்தான்
என் கைரேகைகளில்
நான் பதித்துக் கொண்ட
மருதாணியின் முத்தங்கள்...

தென்றலின் மௌனத்தில்
நான் சேர்த்துக் கொண்ட
உந்தன் நினைவுகள்தான்
என் வாழ்க்கை முழுதிற்கும்
நான் கோர்த்துக் கொண்ட
உன் காதலின் சந்தங்கள்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.