22/06/2017

கூடங்குளத்தில் 5,6 வது அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில்...


அணு உலைப் போராட்டத்தின் மீதும், தோழர் உதயகுமார் மீதும் அவதூறு பரப்பும் வேலையினை இந்திய பாஜக அரசும், இந்துத்துவ கும்பலும் துவங்கியுள்ளன.

Republic Tv எனும் பாஜக-வின் பாராளுமன்ற உறுப்பினரான ராஜீவ் சந்திரசேகர் முதலீட்டில் நடத்துகிற ஊடகத்தின் மூலமாக இந்த வேலையினை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
கூடங்குளத்தில் 5வது மற்றும் 6 வது அணு உலைகளுக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு மட்டும் 50,000 கோடி (இது கட்டுமானத்தின் போது இன்னும் அதிகரிக்கலாம்). ஒவ்வொரு திட்டத்தின் போதும் அதன் மதிப்பில் 30 முதல் 40 சதவீதம் அதிகாரவர்க்கத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் சென்று சேர்கிறது. அதாவது 15,000 கோடி ரூபாய் ஆளும் வர்க்கத்தினருக்கு கையூட்டாக சென்று சேர்கிறது. ரஷ்ய கம்பெனிகளிடம் இருந்து பெறும் இத்தனை பெரிய லாபத்தினை ஆளும்வர்க்கம் மக்கள் நலனுக்காக விட்டுக் கொடுக்குமா என்ன?
அந்த கையூட்டிற்காகத் தான், இந்தியாவில் அணு உலைகளுக்கு எதிராகவும், அழிவுத் திட்டங்களுக்கு எதிராகவும் நிகழும் எளிய மக்களின் போராட்டத்தினை வெளிநாட்டுத் தூண்டுதலில் நடக்கும் போராட்டம் என்றும், கிறித்துவ மதம் சார்ந்த போராட்டம் என்றும் கொச்சைப் படுத்தி, அந்த போராட்டங்களின் மீதான மக்களின் பார்வையை திசை திருப்பும் வேலையினில் அர்னாப் கோசாமி என்ற மூன்றாம் தர ஊடகவியலாளரை வைத்து இறங்கியிருக்கிறது பாஜக அரசு.

உதயகுமாரிடம் spy camera வைத்து பதிவு செய்யப்பட்டதாக Republic TV வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில் எந்த அடிப்படையும் இல்லை. பணம் அனுப்புவதென்றால் வெளிப்படையாக கட்சியின் கணக்கிற்கு அனுப்பலாம். அதற்கு ரசீதினை தருகிறோம். வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதில்லை. அப்படி உங்கள் நண்பர் அனுப்ப விரும்பினால், இந்தியாவிலிருக்கும் அவரின் உறவினர் அல்லது நண்பர் மூலமாக அளிக்கலாம் என்று குறிப்பிடுகிறார். இந்த காணொளியினை ஒரு ஆதாரம் என்று சொல்லிக் கொண்டு, உதயகுமார் என்ற தனிப்பட்ட மனிதரை முன்னிறுத்தி மொத்த அணு உலை எதிர்ப்பு போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்த கும்பல். உதயகுமாரை முன்வைத்தும் கூட ஊழலின் ஆதாரமாக எதையும் முன்னிறுத்த முடியாததால், வெட்டி ஒட்டும் படத்தொகுப்பு வேலையினை sting operation என்ற பெயரில் செய்திருக்கிறார்கள்.
அந்த வீடியோவைச் சுற்றி, எச்.ராஜா பாணியில் Anti National கூச்சல்களை நிரப்பி ஒரு Super Exclusive நாடகத்தினை பாஜகவினர் உருவாக்கி உள்ளனர்.
கூடங்குளம் அணு உலைப் போராட்டம் என்பது தமிழ்நாட்டின் அனைத்து ஜனநாயக இயக்கங்களின் ஆதரவுடன் நடந்த மக்கள் போராட்டம். அது எளிய மக்கள் தங்கள் தினசரி வருமானங்களை இழந்தும், சுழற்சி முறைகளில் வேலை செய்தும், பெண்கள் போராட்டப் பந்தலில் அமர்ந்து பீடி சுற்றும் தொழிலை மேற்கொண்டும் நடைபெற்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகரப் போராட்டம். உழைக்கும் மக்களின் உறுதியினாலேயே ஒரு ஆண்டைக் கடந்து இந்த போராட்டம் நடைபெற்றது.

வெறுமனே உணர்ச்சிகரமான போராட்டமாக இல்லாமல், அணு உலைகளின் பாதிப்பு குறித்த அறிவியல் பூர்வமான விவாதத்தினை இந்தியா முழுக்க உருவாக்கியது. இந்தியாவின் அனைத்து செயல்பாட்டாளர்களும் இடிந்தகரை மண்ணை மிதித்து சென்றிருக்கிறார்கள்.

அணு உலை எதிர்ப்பு ஏதோ இந்தியாவில் மட்டும் நடைபெறுவதைப் போலவும், அதைச் செய்பவர்கள் தேச விரோதிகள் என்றும் பாஜக கும்பல் பரப்பி வருகிறது. அணு உலை எதிர்ப்புப் போராட்டம் என்பது உலகின் அனைத்து நாடுகளிலும் நடைபெறும் போராட்டம். பல நாடுகள் அணு உலைகளின் ஆபத்தினை உணர்ந்து அணு உலைகள் அமைக்கும் திட்டத்தினை கைவிட்டிருக்கின்றன. அணு உலை எதிர்ப்புப் போராட்டம் என்பது சுற்றுச் சூழல் காக்கும் போராட்டம், மனித இனத்தினை காக்கும் போராட்டம். அப்படிப்பட்ட இந்த போராட்டத்தினை இந்திய அதிகாரவர்க்கமும், பாஜகவும், காங்கிரசும் கொச்சைப்படுத்துவதன் நோக்கத்தினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தென் தமிழ்நாட்டினை அணு உலைப் பூங்காவாக மாற்றுவது, இந்தியா முழுவதிலும் பல்வேறு எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அணு உலைகளை நிறுவுவது போன்ற மிகப் பெரிய அழிவுத் திட்டத்தினை இந்திய அரசு வைத்திருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ரசியா என பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று அணு உலை ஒப்பந்தங்களைப் போட்டு இந்திய மக்களை அடகு வைக்கும் வேலையினை மோடி செய்து வருகிறார். அணு வர்த்தகம் என்பது பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடி லாபத்தினை அள்ளித் தரும் வர்த்தகம். மக்கள் நலன் என்ற பெயரிலோ, சுற்றுச் சூழல் என்ற பெயரிலோ இந்த வர்த்தகத்திற்கு அடி விழுவதை பார்ப்பனியமும், கார்ப்பரேட்டுகளும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

கூடங்குளம் அணு உலைப் போராட்டம் இந்தியா முழுதும் உள்ள தேசிய இன மக்களுக்கு அணு உலைகளின் ஆபத்துகளை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளதால் அந்த போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது பாஜக கும்பல். இந்தியா முழுதும் வரப் போகும் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தினையும், மீத்தேன் எதிர்ப்பு, கனிம வள சுரண்டல் எதிர்ப்பு போராட்டங்களையும் வெளிநாட்டுக் கைக்கூலிகளின் போராட்டம் என முத்திரை குத்துவதற்கான வேலையினைத் தான் உதயகுமார் மற்றும் கூடங்குளம் போராட்டத்தின் மீதான இந்த அவதூறுகள் வழியாக துவக்கியுள்ளனர்.

போராடுகின்றவர்களை தனிமைப்படுத்தி, எளிய மக்களின் போராட்டங்களை அவதூறுக்கு உள்ளாக்கி, மக்களை உளவியல் ஊனத்திற்கு உட்படுத்தும் அயோக்கிய முயற்சியே இது.

இந்தியாவின் கனிம வளங்களை சுரண்டி பழங்குடி மக்களை ஒடுக்கும் வேதாந்தா என்ற வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து பாஜக தொடர்ச்சியாக பணம் வாங்கியிருக்கிறது. அது குறித்துப் பேசுவதற்கு Republic Tvயோ, அர்னாப் கோசாமியோ தயாராக இருக்கின்றனரா?

மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பணம் கொடுத்தவர்கள் யார் என்று இந்த அயோக்கிய ஊடகங்கள் விவாதம் நிகழ்த்தியிருக்கிறதா?

Republic TV யின் முதலீட்டாளரான ராஜீவ் சந்திரசேகர் 9 வெளிநாடுகளில் தனது நிறுவனத்தை நடத்தி வருகிறார். Republic TV யின் முதலீட்டில் போடப்பட்ட பணம் எந்த நாட்டிலிருந்து வந்த பணம்?

மோடி ரஷ்யா சென்று 5 மற்றும் 6 வது அணு உலைகள் ஒப்பந்தம் போட்டு வந்த நிலையில் இன்னொரு போராட்டம் அங்கு துவங்கி விடக் கூடாது என்பதற்காக ரஷ்ய கம்பெனியிடம் பணம் வாங்கி இந்த சூழ்ச்சியினை அர்னாப் கோசாமியின் வாயிலாக நிகழ்த்தியிருக்கிறது பாஜக கும்பல்.
தொடர்ச்சியாக மக்கள் உரிமைகளுக்காக போராடி வரும் செயல்பாட்டாளர்களை மூர்க்கத்தனமாக முடக்கும் வேலையில் பாஜகவின் பார்ப்பனிய கும்பல் ஈடுபட்டுள்ளது. பின்வாசல் வழியாக நுழைந்து தமிழ்நாடு அரசை தனது பினாமியாக மாற்றும் அளவிற்கு பாஜகவின் அயோக்கியத்தனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு செயல்பாட்டாளர்கள் தேசிய பாதுகாப்பு சட்டம், தேச விரோத சட்டம் போட்டு கைது செய்து கொண்டிருக்கிறது. உண்மையைப் பேசும் ஊடகங்களையும் முடக்கி அவர்களை செயல்படவிடாமல் அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்தான் மக்கள் இயக்கங்களாகிய நாம் பார்ப்பனிய பாஜக கும்பலின் இந்த அயோக்கியத்தனங்களுக்கு எதிராக ஒற்றைப் புள்ளியில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது.

போராட்டங்களை தனிநபர்களையோ, ஊடகங்களின் செய்திகளையோ முன்வைத்து ஆராயாமல், போராட்டத்தின் மைய அரசியல் முழக்கங்களையும், கோரிக்கைகளையும் வைத்து ஆராய்வோம்.

அணு உலைகளை எதிர்த்திடுவோம்!
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் போடப்பட்ட அணு உலை மற்றும் அணு ஆயுத ஒப்பந்தங்களை திரும்பப் பெறு!

அயோக்கியத்தனமாக இழப்பீடு மசோதாவினைக் கைவிடு..
அணு ஆயுதப் பெருக்கலை எதிர்த்திடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.