30/09/2017

எம்ஜிஆர் விழாவுக்கு பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களைக் கேட்டு மிரட்டுவதா எடப்பாடி அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்...


உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை கடும் கண்டனம் தெரிவித்தாலும் கூட தமிழகத்தில் நடைபெறும் பினாமி அரசு திருந்தாது போலிருக்கிறது. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு  விழாவுக்காக முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஆட்சியாளர்களாலும், ஆளுங்கட்சியினராலும் கட்டவிழ்த்து விடப்படும் அத்துமீறல்களும், மிரட்டல்களும் இது திருந்தாத அரசு என்பது உறுதி செய்கின்றன.

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நாளை சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி விளையாட்டுத் திடலில் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவிற்கு கூட்டம் சேராததால், விழா அரங்கில் காலி இருக்கைகள் மட்டும் தான் காட்சியளித்தன. நாளைய விழாவிலும் அதே போன்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் மாணவர்களையும், மாணவிகளையும் அழைத்துச் சென்று கூட்டத்தைக் காட்டி விடலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், மாணவர்களை அழைத்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

இதனால் சேலம் விழாவிற்கு கூட்டத்தைச் சேர்ப்பதற்காக தலையால் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் எல்லா சட்டவிரோத செயல்களையும் செய்து கொண்டிருக்கின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிர்வாகிகளை அழைத்துப் பேசிய அதிகாரிகள், நாளைய விழாவிற்காக பொது மக்களை அழைத்து வருவதற்காக வாகனங்களை எரிபொருள் நிரப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளனர். வாகனங்களை அனுப்ப மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்திருக்கின்றன.

அதுமட்டுமின்றி, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக சேலம் விழாவுக்கு அரசு பள்ளிகளின் மாணவர்களை சாதாரண உடையில் அழைத்து வரும்படி ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் 30-ஆம் தேதி சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்டித்தும், இந்த கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலவழக்கில் தான் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால்,  உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், உயர்நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் எம்.ஜி.ஆர் விழாவுக்கு மாணவர்களை சாதாரண உடையில் அழைத்துச் செல்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விழாக்களுக்கு மாணவர்களை அதிக அளவில் அழைத்துச் செல்லும் போது ஏற்படும்  ஆபத்துக்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் விரிவாக விளக்கியிருந்தனர். நீதிபதிகளின் அறிவுரைக்கு மாறாக, மாணவர்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் எம்ஜிஆர்  நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல துடிப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொந்த மாவட்டத்தில் இல்லாத செல்வாக்கை, இருப்பதைப் போன்று காட்டிக் கொள்வதற்காக இத்தகைய அத்துமீறல்கள் மற்றும் மிரட்டலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை அனுப்பும்படியும், மாணவர்களை சாதாரண உடையில் அனுப்பும்படியும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களை நிர்பந்திப்பதை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். மாறாக, திருந்த மறுக்கும் மனிதர்களாக நடந்து கொண்டால் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.