30/09/2017

மகாபாரதக் கதைகள் தமிழகத்தில் நிகழ்ந்தவைகளா?


மகாபாரதப் போர் நிகழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும், இலக்கிய ஆதாரங்களும், பழங்கால சிற்ப ஆதாரங்களும் வேறு எந்த இடத்தைக் காட்டிலும் தமிழகத்திலேயே அதிகமாக உள்ளது.

அதற்கான காரிய காரணங்களை ஆராய்ந்து வெளியிடும் முயற்சியில் தமிழ் பேரறிஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்து மதத்தினர் உண்மையான உள்ளத்துடன் இதற்கு ஆதரவு தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை..

மகாபாரதக் கதைகள் தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகே வழக்கிற்கு வந்தது எனலாம்....

ஆனால், அதற்கும் முற்பட்ட காலத்திலேயே, பஞ்சபாண்டவர் இரதங்களுடன் சேர்த்து, ஏழு இரதங்கள் மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது....

அவற்றுள், இரண்டு இரதங்கள் கடற்கோளினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது..

முழ்கிய பகுதிகளில் கடைசங்க காலத்தைச் சேர்ந்த  பகுதிகளும் உள்ளதாக ஆய்வாளர்களின் முடிபுகள் கூறுகிறது.

ஆனால், கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக முனைவர். சு.சௌந்திரபாண்டியன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு "புராண உண்மைகள் " என்ற புத்தகமானது வெளிவரப்போவதாக இருக்கும் நிலையில்,  ''பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல'' என்கிற பரப்புரையானது, எவ்விதமான ஆதாரமும் இன்றி விக்கிபீடியா போன்ற இணையதளங்களில் பதிவேற்றப்படுகிறது..

மகாபாரதப் போர் என்பது தமிழர்களின் ஆதியில் கடைபிடித்து வந்த போர் நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடந்த போராகும் என்பதை அதன் உயரிய போர் நெறிமுறைகளைக் கொண்டு அறியலாம்..

போர்க்களத்தின் எல்லைக்கு அப்பால் யாருமே தனியாக ஒருவரையும் தாக்கவில்லை.

பெண்களோ, குழந்தைகளையோ, முதியவர்களையோ, சம்பந்தமில்லாத பொது மக்களையோ தாக்குவதும், புறமுதுகிடுதலும், முதுகில் அம்பை எய்தலும், கேவலமானதாக கருதப்பட்டது.

உயரிய போர் நெறிமுறையானது, அறியப்படுகிற வரலாற்றுக் காலத்திற்கும் முன்பிருந்தே தமிழர் மத்தியில் வழக்கில் இருந்து வருகிறது.

இத்தகைய ஒழுக்கமானது தமிழரைத்தவிர வேறு எந்த இனத்தாரிடத்திலும் இருந்ததாக வரலாறு கிடையாது.

ஆனால், மூலக்கதையில் வரும் போர்க்களமும், நதிகளும், சில காட்சிகளும் கடற்கோளால் மூழ்கடிப்பட்டும் இருக்கலாம்.

வனவாச காலத்தில், பாண்டவர்கள் கொல்லி மலையில் முனிவர்கள் (சித்தர்கள்) ஆதரவுடன் தங்கியிருந்தாக சொல்லப்படுகிறது.

இத்தகவல்கள் அங்கு வாழும் மக்கள் தமது அடுத்த தலைமுறைக்கு வாழையடி வாழையாக கூறிவரும் தகவலாகும்.

அவ்வாறு கூறப்பட்டுவரும் உண்மையான அதிசயமான தகவல்கள் ஆயிரம் தலைமுறைகள் கடந்து சென்றாலும்  நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை...

கொல்லி மலையில், பெரியண்ணசாமி கோவில் என்று அழைக்கப்படுவது பஞ்சபாண்டவர்களில் பெரியவராக இருந்த தருமருடைய கோவிலே ஆகும்..

கொல்லிப்பாவையாக இருப்பது திரௌபதியே ஆகும்.

அந்த இடங்களுக்கு நேரில் சென்ற போது, இவ்விவரங்கள் எனக்கு கிடைத்தது..

அங்குள்ள திரௌபதி அம்மன். துகிலுரியப்பட்டு இருக்கும். அதனால் முகத்தை மட்டும் பார்க்கும்படியாக திரை கட்டப்பட்டிருக்கும்.

அங்கு யாரும் பலி கொடுக்கவோ, அசைவம் புசிக்கவோ அனுமதி இல்லை. காரணம், அத்தேவதையானவள் விரதத்தை கடைபிடிப்பவள்.

வனவாசம் முடியும் காலத்தில், ஓராண்டு காலம் யார் கண்ணிலுமே படாமல் வாழவேண்டும் என்ற ஆணை இருந்தது.

அப்போது வெள்ளியங்கிரி மலையிலுள்ள பாண்டவர் குகைகள் என்று அழைக்கப்படும் இரகசிய குகைகளில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுவதற்கு எதுவாக அதன் அமைப்பு உள்ளது.

திரவ்பதி அம்மனது கோவில்கள்...

திரவ்பதி அம்மனுக்காக அமைக்கப்பட்டுள்ள மிகப் பழமையான கோவில்கள் அனைத்தும் தமிழ்நாடு, முன்னாளில் தமிழர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் தென்னிந்திய பகுதிகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் போன்ற  இடங்களில் மட்டுமே அதிகமாக உள்ளது.

(கதை நடந்ததாக கூறப்படும் இடங்களில் மிகவும் பிற்காலத்தில் மட்டுமே ஒன்றிரண்டு நினைவிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது)

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்..

சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன்.

இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

புறநானூற்றில் கூறப்படும் “ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”
என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.

பாரதப் பெரும்போரில், இருபடைகளுக்கும் சோறுகொடுத்த சேரமன்னன், உதியஞ்சேரலாதனைப் பற்றிய குறிப்புகள், புறநானுறிலும், சிலப்பதிகாரத்திலும் உள்ளது. சோற்றை எவ்வளவு தூரம் கொண்டு சென்று கொடுக்கமுடியும் என்பதை நீங்களே யூகம் செய்து கொள்ளவும்.


திரு.முருகேசன் தனபால் அவர்களால் எழுதப்படும் "புராண உண்மைகள்" நூல் விமர்சனம்.

முனைவர் சு.சௌந்திரபாண்டியன் அவர்கள் எழுதிய "புராண உண்மைகள்"என்ற புத்தகத்தில் இருந்து..

கண்ணன் என்றும், கிருஷ்ணன் என்றும், கிருஷ்ணபகவான் என்றும், கிருஷ்ண பக்தி என்றும், ' அரே ராமா அரே கிருஷ்ணா ' என்று கூறி உலகெங்கும் பேசப்பபடுகிறாரே கிருட்டிணன் , அந்த கிருட்டிணன் ஒரு தமிழன்..

கிருட்டிணன் என்பவனின் மூலத் தமிழ் பெயர் கருப்பையா அல்லது கருப்பசாமி என இருத்தல் வேண்டும்.

கறுப்பு என்பதற்கான வடசொல்தான் கிருஷ்ணம்.

தமிழிலிருந்து பிரிந்த வடமொழி, தமிழன் வரலாறாகிய கிருட்டிணன் வரலாற்றை எழுதி வைத்த நூல்தான் அரியவம்சம்.

மகாபாரதம் கூறும் இக் கிருட்டிணன், ஒரு தமிழன்..

இதற்கு ஐயமே வேண்டாம்..

இதற்கு சான்று?

கிருட்டிணன் வரும் இடங்களை எல்லாம் உற்று நோக்குங்கள்.

உங்களுக்கே தெரியும், அவை எல்லாம் தமிழ் மண்ணில் நடந்தவையே என்று.

ஸ்ரீமத் பாகவதத்தை தமிழில் மொழி பெயர்த்த கடலங்குடி நடேசசாத்திரி அவர்கள், மதுரா என்று வட மொழியில் எழுதபட்ட இடங்களை எல்லாம், மதுரை என்று தான் மொழி பெயர்த்துள்ளார்.

அவர் தமிழ் நாட்டு மதுரையைக் குறிக்கவில்லையாயினும், உண்மையில வடமொழி நூல்கள் கூறும் ' மதுரா ' தமிழ் நாட்டு நம் மதுரை தான். இதை நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.

ஆனால் பேருண்மை இது.
மிக பெரிய புராண உண்மை இது.

தமிழ் மக்கள் வரலாறே புத்துணர்ச்சி பெறும் உண்மை இது..

இத்தனை ஆண்டுகளாக மறைந்து போய்க்கிடத்த மாபெரும் வரலாற்று உண்மை இன்று தமிழகத்தில் மலர்ந்துள்ளது.

எனது 23 ஆண்டுகால ஆய்வின் பலன் என்று அடக்கத்தோடு கூற விரும்புகிறேன் இதை..

அதாவது, தமிழகத்து மதுரையில் தான் வாசுதேவருக்கும் தேவகிக்கும் கண்ணன் பிறந்தான்.

இதே நம் மதுரையில்தான் கம்சனின் அரன்மனை இருந்தது.

தமிழகத்தில், கஞ்சன் என்று சில தமிழ் நூற்களில் வருபவன் இதே தமிழனாகிய கம்சன் தான்.

அப்படியானால், யமுனைக் கரையில் கோகுலத்தில் வளர்ந்தான் கண்ணன் என்பது ?

அது உண்மை தான்.. ஆம்..

தமிழகத்து வைகை இருக்கிறதே , அதன் வடமொழிப் பெயர் தான் யமுனா.

இந்த சொல் மாற்றம் தான் தமிழகத்து வரலாற்றைத் தமிழர்களிடமிருந்து பறித்தது.

இனிமேல் வட மொழி நூல் எந்த நூலை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் சரி, அதில் யமுனா நதி என்று வந்தால், அது தமிழகத்து வைகை என்று எடுத்துக் கொள்ளுங்கள். தமிழக வரலாறு இனிமையாகத் துலங்கக் காண்பீர்கள்.

தமிழக வரலாறு என்றுகூடக் கூற வேண்டாம் உண்மை வரலாறு என்று கூறலாம்.

வை - நூனி
வைக்கோல் - கதிரின் நுனி
வை + கை = வைகை

யமுனை என்ற சொல்லை பாருங்கள்..
ய + முனை = யமுனை ; முனை = நுனி..
இப்போது விளங்குகிறதா ?

வைகைதான் யமுனை என்று ?

இதை ஏதோ சொல்லாராய்ச்சி என எண்ணி விட வேண்டாம்.

நமது ஆய்வு சொல்லாராய்ச்சி மீது உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை.

நமது ஆய்வு நிலவியல் (Geography) உள்பட பல்வேறு கூறுகளின் மீது உட்கார்த்துள்ளது.

வைகை கரையில் தான் கண்ணன் விளையாடியது.

பலராமனுடன் கண்ணன் விளையாடிய கோகுலம் எது ?

நமது திருப்பூவனம் என்ற ஊர்தான்.. ஆம்..

வடமொழி நூற்களில் விரஜா என்று குறிப்பிடடும் இந்த ஊர் நந்தகோகுலம், தமிழகத்துத் திருப்பூவணம் என்ற ஊர்தான்.

மதுரையை ஒட்டி அமைத்துள்ளது. வைகைக் கரையில் உள்ளது.

இத் திருப்பூவணமே யமுனை கரையில் உள்ள நத்தகோகுலம் என்று சித்திரிக்கபட்டுள்ளது வடமொழி நூல்களில்.

எந்த வடமொழி நூல்களில் ?

மகாபாரதம், அரியவம்சம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் முதலிய வடமொழி நூல்களில்..

எனவே, இந்த வடமொழி நூற்கள் விவவரிக்கும் கண்ணன் வரலாறு , தமிழக வரலாறே , கற்பனை கதை இல்லை..

நத்தகோகுல வருணனைகளைப் படித்துப் பாருங்கள்.. அப்படியே நமது வட்டாரத்திற்கு பொருந்தி வரும்.

திருப்பூவணத்துக் கடம்ப மரங்கள் எல்லாம் கூட அப்படி வடமொழி நூற்களில் அச்சுக் குலையயாமல் வருணிக்கப்படுகின்றன.

நான் இங்கு ஒன்றைக் கேட்கிறேன்..

எந்த வடமொழி நூலிலாவது, 'மதுரா' 'கோகுலம்' முதலியன வடநாட்டில் இருப்பனவாக எழுதப்பட்டுள்ளதா? இல்லையே..

அப்படி இருக்கும் போது, இவற்றை ஏன் வடநாட்டுக்குத் தள்ள வேண்டும்..

யமுனை ஒன்றுதான் இதுவரை கண்ணன் வரலாற்றை வடநாட்டுக்கு தள்ளிக் கொண்டிருந்ததுது.

அந்த இரகசியம் இன்று விடுபட்டு விட்டது.

தமிழக வைகை தான் யமுனை என்று தெளிவான பின்.

வேறு எதை வைத்து கண்ணன் வரலாற்றை வடநாட்டுக்கு தள்ள முடியும்?

தமிழகத்து வைகைக்கு 'யமுனை ' என்று பெயரிட்டவர்களும் தமிழர்களே..

பழந்தமிழர்கள் வடநாடு பரவிய போது, அங்கே இருந்த ஒரு பெரிய நதிக்கு யமுனை என்று பெயரிட்டார்கள். அதுவே யமுனை எனப்பட்டது..

வடநாட்டு யமுனா, தமிழகத்து வைகையைவிடச் சிறப்பாக, வளமாக இருந்ததால் 'யமுனா' என்றாலே அது வடநாட்டு யமுனாதான் என்ற நிலை ஏற்ட்டது..

யமுனையின் இரகசியம் இன்று வெளிப்பட்டு விட்டதால் எத்தனையோ வரலாற்றுக் கருத்துகள் இனி தமிழர் பக்கம் ஒதுங்கும். இந்த அதிசயத்தை இனித் தமிழகம் துய்க்கும், தமிழர்கள் நிச்சயமாக ஏற்றம் பெறுவர்..


கண்ணனை ஒரு கடவுளாக வணங்குவது வேறு, அவனை ஒரு பழந்தமிழ் அரசனாகக் கணக்கில் எடுத்துக் கொள்வது வேறு..

கண்ணன் எனும் ஆற்றல் வாய்ந்த தமிழக அரசனின் வரலாறு மிக பெரிய தமிழக வரலாறு.

இதை நம் இளைய சமுதாயத்திற்குக் கூற வேண்டியது கடமை நமக்கு உள்ளது.

இந்த வரலாறு தமிழர்களின் சொத்து.

இதை இழந்தால், தமிழர்களைப் போல் ஏமாளிகள் எருவம் இருக்க மாட்டார்கள்.

கடவுள் பக்தி இல்லாதவர்களும், தமிழக வரலாற்றை வெளிப்படுத்தலாம், பக்தியில் பரவவசபட்டுத் தான் கண்ணன் வரலாற்றை பேச வேண்டும் என்பதில்லை.

சுற்றுலாத் துறையினர் இங்கு விழித்துக் கொள்ள வேண்டும்..

மதுரையில் "இது தான் கண்ணன் பிறந்த ஊர். மதுரா என்பது இது தான்." என்று எழுதி வைக்க வேண்டும். உலக மக்களைத் தமிழகத்திற்குத் திருப்ப வேண்டும்.

தமிழகம் அப்போது ஒரு மெக்கா ஆக, ஒரு வாடிகன் ஆக ஆகும்.

திருப்பூவணத்தில், "இதுதான் கண்ணன் விளையாடிய கோகுலம்" என்று ஒரு விளம்பர பலகை எழுதி வைக்க வேண்டும், அப்போது அவ்வூரே செழுமையாகும்.

என்னினிய தமிழர்களின் வாழ்வு பூத்து குலுங்கும்.

கண்ணன் கையில் உள்ள புல்லாங்குழல், அதுவே தமிழகத்து இசைக் கருவி அல்லவா..

ஏழு சுரங்களை கண்டறிந்த இனம் தமிழினம் அல்லவா?

இப்படி எத்தனையோ கருத்துகளை அடுக்கி கொண்டே போகலாம்.

கண்ணன் தமிழன் என்றால் அவரை ஒட்டிய எத்தனையோ வரலாறுகள் உள்ளனவே.

அவை எல்லாம் தமிழர்களின் வரலாறுகள் தான். இதில் ஐயம் இல்லை.

இவை பற்றிய எனது விரிவான ஆய்வு பின்னர் வெளிவரும், அதுவரை பொறுத்தருள்வீர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.