16/10/2017

மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன...


பிறப்பின் முடிவு இறப்பு - இறப்பின் முடிவு பிறப்பு...

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது.
ஏழு பிறப்பு என்பது தவறான வாதம்.

ஏழு பிறப்பு என்ற வள்ளுவன் வார்த்தைக்கு, எழுகின்ற ஒவ்வொரு பிறப்பும் என்பது பொருள்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது பிரபந்தம்.

ஏழேழ் பிறவி என்றால், நாற்பத்தொன்பது பிறவி என்று அர்த்தமல்ல.

எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும் என்பது பொருள்.

சில உயிர்கள், போன வேகத்தில் திரும்புகின்றன. சில உயிர்கள் ஓய்வெடுத்துத் திரும்புகின்றன.

புதிய வடிவங்கள் பிறந்த பின்னாலும், பழைய வடிவங்கள் கனவில் வந்து பேசுகின்றன.

இம்மையில் பக்தியைச் செம்மையாகச் செலுத்தி ஈஸ்வரனிடமே லயித்து விட்ட உயிர், பிரிந்தால் மீண்டும் அது திரும்புவதில்லை. மறு பிறப்பு என்ற துயரம் அதற்கு இல்லை.

மற்றொன்று, சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் மீண்டும் திரும்புகிறதென்றும், வேறு சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் திரும்புவதில்லை என்றும், தன்னைச் சரணடையும் உயிர் எப்போது மரித்தாலும் அதற்கு மறு பிறப்பு என்ற துன்பமே இல்லை என்றும் பகவான் கூறுகின்றான்.

எப்போது மரிக்கின்ற உயிர், மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படுகின்றது?

புகை சூழ்ந்த நேரம், இரவு நேரம், கிருஷ்ண பக்ஷம், தக்ஷணாயணம் ஆகியவற்றில் இறப்பவர்கள், சந்திரனின் வழியில் செல்கிறார்கள்.

சந்திர கதியை அடைந்த எந்த உயிரும் மீண்டும் திரும்புகிறது.

காரணம், சந்திரன் என்பது அகங்காரம்; சூரியன் என்பது உண்மை அறிவு.

சந்திரனுக்கு இயற்கை ஒளி கிடையாது. சூரியனுடைய ஒளியை வாங்கித் திருப்பி அனுப்புகிறான்.

சந்திரனுடைய அகங்காரத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவன் பரமாத்மா. அவனைச் சரணடைந்து விட்டால் இந்த மறுபிறப்பை வெல்லலாம்.

எப்போது மரணம் அடைகிறவர்களுக்கு இயற்கையிலேயே மறுபிறப்பு இல்லை?

நெருப்பு, வெளிச்சம், பகல், சுக்லபக்ஷம், உத்தராயணம் இவற்றில் மரிக்கிறவர்கள் மீளாத வழியில் சென்று ஈஸ்வரனோடு ஐக்கியமடைந்து விடுகிறார்கள்.

இவர்களுக்கு மறுபிறவி இல்லை.

உத்ராயணம் என்பது சூரியனின் வடதிசைப் பயணம். அதனால்தான், இறந்து போனவர்களை வடக்கே தலைவைத்துப் படுக்க வைக்கிறார்கள், முத்தியடைவதற்காக.

உயிரோடு இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று சொல்வதும் அதற்காகவே.

இந்தப் பிறப்பில் துன்பங்களை அனுபவித்தவர்கள் இன்னும் ஒரு பிறப்பையா விரும்புவார்கள்?

மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானேதாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னும்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா – என்றார் பட்டினத்தார்.

பிறவா வரம் வேண்டும் எம்மானே என்று புலம்பினார் ஒருவர்.

மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்த வேண்டாம் – என்று வேண்டுகோள் விடுத்தார் ஒருவர்.

அன்னை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை அப்பனோ
இன்னும் எத்தனை ஜென்மமோ? – என்று கலங்கினார் ஒருவர்.

மறு பிறப்பைப் பற்றிய திடமான நம்பிக்கையும், ஐயையோ. படமுடியாதினித் துயரம், பட்டதெல்லாம் போதும் என்ற அவலமும் சேர்த்து இதிலே எதிரொலிக்கின்றன.

மறு பிறப்பு இல்லாமல் இருப்பதற்கோ, அப்படிப் பிறந்தாலும் பூர்வ ஜென்மத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கோ ஒரே வழி ஈஸ்வர பக்தி.

அதையும் தெளிவாகச் சொல்வதென்றால், கிருஷ்ண பக்தி.

ஏனென்றால், பகவான் மட்டும் தான் மறுபிறவி இல்லாமல் இருக்க வழி சொல்கின்றான்.

பகவான் ஒன்று சொல்கிறான், மனம், உயிர், ஆத்மா மூன்றும் வேறு வேறு என்று.

உடம்பை விட்டு உயிர் பிரியும் போது, ஆத்மாவும் பிரிகிறது. அதனால்தான் இறந்து போனவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் போது, அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்கிறோம்.

மனிதனின் பாவ புண்ணியங்களை கவனிக்கிற இந்த ஆத்மா, உயிரைக் கையோடு அழைத்துக் கொண்டு மறு கூட்டிலே புகுந்து விடுகிறது.

அந்த ஆத்மா சாந்தியடைந்து விட்டால், அந்த உயிரையும் தன்னோடு வைத்துக் கொண்டு விடுகிறது.

இந்தப் பிறவியில் துன்பங்களை அனுபவித்தவர்கள், தன் வாழ்நாளிலே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியவில்லை என்றால், கடைசியாக அவர்கள் பெறக் கூடிய விடுதலை, ஆத்ம சாந்தி.

ஈஸ்வர பக்தி இல்லாதவனுடைய ஆத்மாவும், தற்கொலை செய்து கொள்கிறவனுடைய ஆத்மாவும் எப்போதும் சாந்தி அடைவதில்லை.

மறு உலகில் அவை, பேயாய் கணங்களாய்த் திரிகின்றன.

மீண்டும் இந்தப் பூமியிலே பிறந்து விட்ட இடத்திலிருந்து துன்பத்தைத் தொடருகின்றன.

ஆகவே லெளகீகத்தில் போராடிப் பார்த்து இறுதியாகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கிறவனுக்குக் கைகொடுக்கும் ஒரே மார்க்கம், பக்தி மார்க்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.