20/10/2017

பெண் கைதிகளுக்கு ரவுடிகள் மூலம் பாலியல் தொல்லை நடந்ததா?: காவலர்களே ஏற்பாடு செய்தது அம்பலம்...


புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இதில் புதுவை மாநிலத்தில் கைதாகும் நபர்களை அடைக்கின்றனர். இந்த ஜெயிலில் சுமார் 600 கைதிகள் உள்ளனர். அவர்களில் 100 பேர் பெண்கள்.

ஜெயிலில் ஆண்களுக்கு தனி பகுதியும், பெண்களுக்கு தனி பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் பகுதியில் பெண் காவலர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

காலாப்பட்டு ஜெயிலில் பிரபல ரவுடிகள் பலர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஜெயிலில் இருந்தபடியே போனில் பேசி தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது, வெளியில் உள்ள தங்கள் கூட்டாளிகளுடன் தொடர்பு கொண்டு சதிதிட்டங்களை நிறைவேற்றுவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.

கைதிகளுக்கு சிறை வார்டன்களே போன்கள் கொடுத்து உதவியதும், கைதிகளை கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததும் ஏற்கனவே தெரியவந்தது. இதையடுத்து சில காவலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

ஆனாலும், ரவுடி கைதிகளுக்கு ஜெயில் வார்டன்கள் தொடர்ந்து உதவி வருவது இப்போது தெரியவந்துள்ளது. இதில் முக்கியமாக பிரபல ரவுடியுடன் பெண் தாதா ஒருவரை சந்திக்க ஜெயில் அதிகாரிகளே ஏற்பாடு செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெயிலில் மர்டர் மணிகண்டன் என்கிற பிரபல தாதா அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காரைக்காலை சேர்ந்த பெண் தாதா எழிலரசி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மர்டர் மணிகண்டனும் எழிலரசியும் சந்தித்து பேசுவதற்கு ஜெயில் அதிகாரிகளே ஏற்பாடு செய்து கொடுத்தனர். இந்த தகவல் ஜெயில் போலீஸ் ஐ.ஜி. பங்கஜ்குமார் ஜாவுக்கு தெரியவந்தது. இதனால் அவர் இரவில் திடீரென சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது மர்டர் மணிகண்டனும், எழிலரசியும் சந்தித்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஜெயில் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ், முதன்மை வார்டன் வீரவாசு, வார்டன்கள் கலாவதி, மதிவாணன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து ஐ.ஜி. உத்தரவிட்டார்.

மர்டர் மணிகண்டனும், எழிலரசியும் தங்களது எதிரிகளை தீர்த்து கட்டுவது தொடர்பாக அந்த சந்திப்பின் போது ஆலோசித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்திப்புக்கு வேறு பின்னணி உண்டா? என்று தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

ஜெயிலில் உள்ள ஆண் கைதிகளும், பெண் கைதிகளும் சந்திக்க முடியாத அளவுக்கு பல்வேறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதையும் மீறி அவர்கள் சந்திப்பதற்கு சிறை காவலர்களே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜெயிலில் உள்ள மற்ற பெண் கைதிகளையும், ஆண் கைதிகள் சந்திப்பதற்கு ஜெயில் காவலர்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜெயிலில் உள்ள ரவுடி கைதிகளை பெண் கைதிகளை சந்திக்க வைத்துள்ளனர்.

இதன் மூலம் பெண் கைதிகளுக்கு அந்த ரவுடி கைதிகள் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெண் கைதிகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தி இருப்பது மிகப்பெரிய குற்றமாகும். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறு எந்தெந்த பெண் கைதிகளை ஆண் கைதிகளுடன் சந்திக்க வைத்தார்கள் என்று தற்போது விசாரணை தொடங்கி உள்ளது. இதில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண் - பெண் கைதிகள் சந்திப்பதற்கு மேலும் 3 ஜெயில் காவலர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களையும் அழைத்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒன்றிரண்டு நாளில் அவர்களும் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெயிலில் நடந்திருக்கும் இந்த குற்றம் பூதாகரமாக உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.