26/12/2017

தமிழ் அறிவும்.. உணர்வும்...


தமிழ் அறிவு என்பதற்கும் தமிழ் உணர்வு என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்தும் சிறந்த தேர்ச்சியும் பெற்ற ஒருவர் தமிழ் அறிவு பெற்றவராக ஆக முடியும். ஆனால், அவர் தமிழ் உணர்வு பெற்றவராக ஆக முடியும் என்பது நிச்சயமல்ல.

தமிழைப் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருக்கின்ற செய்திகளை வைத்து தமிழ் அறிவு உண்டாகும். எந்தச் சூழலிலும் சொந்த மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் பேணிக்காக்கும் மனவுறுதியே தமிழ் உணர்வு என்பதாகும்..

என் தாய்மொழியை நான் இழக்க முடியாது; என் தாய்மொழியை அழிக்க இன்னொரு மொழிக்கு இடம் தர முடியாது; எத்தனை மொழிகளைக் கற்றாலும் என் தாய்மொழியைக் கல்லாமல் இருக்க முடியாது என்பவை தமிழ் உணர்வின் சில அடையாளங்கள்..

தமிழ் அறிவு இருந்து தமிழ் உணர்வு இல்லாதவர்கள் தமிழுக்காகப் பெரிதாக எதுவும் செய்யமாட்டார்கள்.

தமிழ் உணர்வு இருந்து தமிழ் அறிவு இல்லாதவர்கள் தமிழுக்குச் செய்வதாக எண்ணி இலக்கு தெரியாமல் எதையாவது செய்துவிடுவார்கள்.

தமிழ் அறிவோடு தமிழ் உணர்வும் பற்றும் உள்ளவர்கள் தான் தமிழுக்காகச் செய்யவேண்டிய உருப்படியான செயல்களைச் செவ்வனே செய்து முடிப்பார்கள்.

தமிழால் கிடைக்கும் எல்லாவகையான ஏந்து (வசதி) களையும் வாய்ப்புகளையும் எப்பாடுபட்டாகிலும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆளாய்ப்பறக்கும் நம்மவர்கள் சிலர், தமிழுக்காக ஒரு சிறு நன்மையும் செய்வது கிடையாது. இவர்களின் இப்போக்கு மாறவேண்டும்; இவர்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வை ஏற்கவேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.