17/01/2018

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்...


உசில், வேங்கை, தடசு, மருதம், இலுப்பை, தோதகத்தி, வன்னி, குயில், கடுக்கை, தாண்டி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?

ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோன்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல்...

இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியைக் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

தமிழனின் நாகரிகம் தாவரத்துடன் இணைந்து தான் இருந்தது. ஊரின் பெயர்களை கூட மரங்களின் பெயர்களை வைத்து தான் அழகு பார்த்தார்கள் நம் முன்னோர்கள்..
மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு பாசப்பிணைப்பு இருந்தது உண்மை.

ஆனால், இன்று... அப்படி ஒரு மரம் இருந்ததா? என்று கேட்கக் கூடிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்..
மரங்களை இழந்தோம்; மழையையும் இழந்தோம்..

தமிழ்நாட்டில் இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பற்றி ஒரு அகராதியே உண்டு. அவ்வளவு செழிப்பான மண்.. நம் தமிழ் மண். நம் பூமி...

‪உசில்‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் உசிலம்பட்டி..

‪இலுப்பை‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் இலுப்பையூர்..

‪‎விளாமரம்‬ இருந்த இடம் தான் விளாத்திகுளம்..

‪‎வாகைமரம்‬ செழித்து வளர்ந்த ஊர் தான் வாகைக்குளம்..

இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து... இப்படி பல ஊர்களின் பெயரில் மரங்களின் பெயரும் மறைந்திருக்கு..

ஆனால், இன்று அந்தந்த ஊர்களிலேயே அந்த காரண மரங்களைக் காணவில்லை.

அதுக்கெல்லாம் பதிலாக... தைலமரம், சீமைக்கருவேலம், யூஃபோடிரியம், தூங்குமூஞ்சி'னு விதவிதமான வெளிநாட்டு மரங்கள் தான் இங்கே ஆக்கிரமித்திருக்கிறது.

இந்த மரங்கள் சீக்கிரம் வளர்ந்து விடும். அதிக நீரையும் உறிஞ்சும். இதனால், புல் வெளிகளுக்கு நீர் கிடைக்காமல் அழிய.. அதை நம்பி வாழ்கிற கால்நடைகளும் குறைந்து, உயிர் சுழற்சியே மொத்தமாக மாறிவிட்டது.

பார்த்தீனியம் செடிகள் நீர் நிலைகளையும் அழித்து விட்டது. இப்படி வளரும் மரங்களில் காய்கள், பழங்கள் எதுவும் வராது. அதனால் பறவைகளும் இல்லாமல் போய் விட்டது.

உசில் மரம் வறட்சியைத் தாங்கி வளரும்.
எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும்.

வேங்கை மரம் இன்று அரிதாகி விட்டது. இந்த. மரத்தில் ஒரு குவளை செய்து அதில் தண்ணீரை ஊற்றி வைத்தால் கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியை குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இன்றளவும் பயன்படுத்துகிறார்கள்.

மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைப் தடுக்கும் மருந்து தயாரிக்கிற ஆராய்ச்சி இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

இலுப்பை மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய் தமிழர் கலாசாரத்தில் ரொம்ப காலமாக விளக்கேற்ற பயன்படுத்தினர். இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது.

தோதகத்தி மரத்தில் எந்த பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள் மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்தில் கண்டு பிடிச்சிருக்காங்க. அதில் தோதகத்தி மரத்துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4- ஆயிரம் வருடத்திற்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க.. ஆனால், இப்போது இந்த மரம் மிகவும் அரிதாகி வரும் நிலையில்.. தமிழக அரசு இந்த மரத்தை வெட்ட தடை விதித்திருக்கிறது.

இது மாதிரி தான்... குறுஞ்செடிகளும். நம் தமிழ் மண்ணில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

இதில் ‪‎துத்தி‬ என்று ஒரு செடி, மருத்துவ குணமுள்ளது. அதை பார்த்தீனியம் வளரும் இடத்தில் வைத்தால் தொடர்ந்து பார்த்தீனியம் வளராது.

புவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்சினைகளை இந்த தலைமுறையில் நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு ஏசியைப் போட்டு நம்மை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நினைக்கும் நாம்.. ஏன் ஒரு பாரம்பரிய மரத்தை நட்டு இந்த பூமியை குளிர்ச்சியாக வைக்கக் கூடாது..?

இந்த பூமியை வளப்படுத்த நினைத்தால்.. இந்த மாதிரி பாரம்பரிய மரங்களை நம்பி தான் ஆக வேண்டும்..

அதற்கு.. இந்த 2018- ல் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு.. கண்ட கண்ட மரங்களை நடாமல்.. பாரம்பரிய மரத்தை தேர்வு செய்து... ஒரு மரமாவது நடுங்கள்.

மரங்களில் கூட ஷாம்பு உண்டு...

உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாக பாவிக்கலாம்.

வழுக்கைமரம் எனப்படுகிற தடசு மரத்தின் பட்டையை சுடு நீரில் போட்டால் வழுவழு ஷாம்பு ரெடி.

இந்த இரண்டு ஷாம்பூக்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.

மருத மரத்தின் பட்டையை காய வைத்து கஷாயம் பண்ணி அருந்த.. உடலில் உள்ள கொழுப்பு குறையும்.

தாண்டி மரத்தில் காய்க்கிற தாண்டிப்பழம் மூலத்தைக் குணப்படுத்தும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.