01/02/2018

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே சென்னையில் பிப்ரவரி 3 அன்று மாநாடு...


திருச்சி செய்தியாளர் சந்திப்பில்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அழைப்பு...

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே - வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல என்ற தலைப்பில், வரும் பிப்ரவரி 3 – சனிக்கிழமையன்று, சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் சிறப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, இன்று (29.01.2018) காலை, திருச்சியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன் உள்ளிட்டோர் இச்செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

தோழர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது...

தமிழ்நாட்டில் வருவாய்த் துறை எழுத்தர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) உள்ளிட்ட மாநிலப் பணிகளுக்குத் தேவையான 9,351 வேலைகளுக்கான எழுத்துத் தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (TNPSC) 11.02.2018 அன்று நடத்துகிறது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் உள்ளவர்களம், நேப்பாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாக்கித்தான், வங்காளதேசம், திபெத், மியான்மர், இலங்கை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தனது அறிவிக்கையில் (14.11.2017) அழைத்துள்ளது.

இதுவரை இல்லாத புதிய மாற்றமாக இவ்வறிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கல்வித்தகுதி பெற்ற 90 இலட்சம் பேர் வேலை தேடி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இந்திய நாடு முழுவதும் உள்ளவர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இத்தேர்வு எழுதினால் தமிழ்நாட்டின் குடிமக்களுக்குத் தமிழ்நாட்டிலேயே வேலை கிடைக்காத அவலம் ஏற்படும். மண்ணின் மக்களாகிய இளம் ஆண்கள் மற்றும் பெண்களின் எதிர்காலம் என்னவாகும்?

இதற்குமுன், தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணி இடங்களுக்கான தேர்வில், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை அனுமதித்ததால், பல நூறு பணி இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்குக் கிடைத்தது. அதில் தேர்வுத்தாள் திருத்துவதில் ஊழல் செய்தவர்கள் இப்போது பிடிபட்டு வருகிறார்கள். அம்முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல்., நெய்வேலி அனல் மின் நிலையம், இரயில்வே, படைக்கலத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், மற்றும் வருமான வரி, உற்பத்தி வரி, அஞ்சலகங்கள், வங்கிகள் போன்றவற்றில் அண்மைக்காலமாக 100க்கு 80 பேர் என்ற அளவில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வேலை வழங்கினால் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலமே இருண்டு விடும்!

தமிழ்நாட்டு தொழில், வணிகம், அதிகார வர்க்கம் அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கோலோச்சுகிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்களின் மொழி, கல்வி, பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்காக 1956இல் மொழியின மாநிலமாக, உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு. அரசமைப்புச் சட்டப்படி உள்ள தமிழர் உரிமைகளை மறுக்கும் வகையில் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வேலை வாய்ப்புகளில் கொண்டு வருவது மிகமிகத் தவறு.

மகாராட்டிரம், கர்நாடகம், குசராத், மேற்கு வங்கம், சத்தீசுகட் போன்ற பல மாநிலங்களில், அந்தந்த மாநில மக்களுக்கு மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுத்து வேலை ஒதுக்கீடுகளுக்கான சட்டங்களும், அரசு ஆணைகளும் இருக்கின்றன.

எனவே, தமிழ்நாட்டிலும் அதுபோல் அரசுத்துறை வேலைகளில் 100 விழுக்காடும், நடுவண் அரசு வேலைகளில் – தனியார் வேலைகளில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அதற்கான மாதிரிச் சட்ட வரைவு 03.02.2018 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே” மாநாட்டில் நிறைவேற்றப்படும்!

இதற்கான சட்டத்தை நிறைவேற்றும்படி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தொடர் மக்கள் திரள் இயக்கம் நடத்தப்படும். வரும் 11.02.2018 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்வில், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து, தமிழ்நாட்டு மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் அம்மாநாட்டில் இயற்றப்படும்.

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் திரு. மு. தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன், இயக்குநர் மு. களஞ்சியம், இயக்குநர் வ. கௌதமன், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், துறைசார் வல்லுநர்கள் மாநாட்டில் உரையாற்றுகின்றனர். கலை நிகழ்ச்சிகள், புகைப்படக் கண்காட்சி, பா வீச்சு என காலை 9.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை இம்மாநாடு நடக்கிறது.

தமிழர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையுள்ள அனைவரும், இம்மாநாட்டில் அவசியம் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் பேசினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.