17/02/2018

ஜெர்மனியில் இலவசமாக பேருந்துப் பயணம்: சென்னை நகருக்கு பாமக முன்வைத்த கோரிக்கை...



போக்குவரத்து நெரிசலையும் காற்று மாசுபாட்டையும் குறைக்கும் நோக்கில் சென்னை நகரில் மாநகரப் பேருந்துகளை இலவசமாக இயக்க வெண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் 2016-ல் அறிவித்த போது, பலரும் அதனை விமர்சனம் செய்தார்கள்.

ஆனால், ஜெர்மனி நாட்டில் மாசுபாட்டை தடுக்க அதுதான் தீர்வு என இப்போது ஜெர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜெர்மனி நாட்டின் முக்கியமான ஐந்து நகரங்களில் (Bonn, Essen, Herrenberg, Reutlingen, Mannheim) பேருந்துகளை இலவசமாக இயக்கப்போவதாக தற்போது அறிவித்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் காற்று மாசுபாட்டு விதிகளை நிறைவேற்றும் நோக்கில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஐந்து நகரங்களிலும் 'மக்கள் எங்கேயும் ஏறி, எங்கேயும் இறங்கும் வகையில், பயணச்சீட்டுகள் ஏதுமின்றி' பேருந்துகளை இலவசமாக இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

கார்களின் தலைமையகமாக இருக்கும் ஜெர்மனி நாடு, பேருந்துகளை இலவசமாக இயக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபுள்யூ, ஃபோக்ஸ்வேகன், ஓபெல், போர்சே எனும் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவைதான். இலவச பேருந்துகளை இயக்குவதற்கான செலவினை இந்த கார் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என கிரீன்பீஸ் அமைப்பு கோரியுள்ளது.

பன்னாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவின் மீது ஆடம்பர கார்களை திணிக்கின்றன. ஆனால், அவர்கள் நாட்டில் இலவச பேருந்துகளை இயக்குகிறார்கள். இதிலிருந்து சென்னை பாடம் கற்க வேண்டும்.

2016 தேர்தல் அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது போன்று, சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 ஆக அதிகரித்து, அவற்றை இலவசமாக இயக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.