25/06/2018

விபசாரத்திற்காக டெல்லியில் 4 ஆயிரம் பெண்களை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த அபக் உசேன், சாய்ராபேகம் தம்பதி...


டெல்லியில் 4 ஆயிரம் பெண்களை கடத்தி விற்று ரூ.250 கோடி சம்பாதித்த தம்பதி..

டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 4 ஆயிரம் இளம்பெண்களை ஏமாற்றி கடத்தி விபசாரத்துக்காக விற்பனை செய்து, ரூ.250 கோடியை சம்பாதித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி...

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளுக்கு வங்கதேசம் வழியாக பெண்கள் கடத்தப்படும் கொடூரம் ஓசையின்றி நடந்து வருகிறது.

குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் கடத்தப்படுவதை உளவுத்துறையினர் கண்டறிந்தனர்.

பெண்களை கடத்தும் கும்பலை பிடிக்க நாடெங்கும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது டெல்லியைச் சேர்ந்த கணவன் - மனைவியான அபக் உசேன், சாய்ரா பேகம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, அவர்கள் பெண்களை கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்துவதையும், விற்பனை செய்வதையும் மிகப்பெரிய தொழில் போல செய்து வருவதை கண்டு பிடித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் சுமார் 4 ஆயிரம் இளம் பெண்களை ஏமாற்றி கடத்தி விபசாரத்துக்காக மற்றவர்களிடம் விற்பனை செய்து இருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு பெண்ணையும் விற்கும் போதும் லட்சக்கணக்கில் பணம் கிடைத்ததால், நாளடைவில் அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் புரோக்கர்கள், ஏஜெண்டுகளை நியமனம் செய்து பெண்களை கடத்தி விற்பதை விரிவுபடுத்தியுள்ளனர்.
பெண்களை கடத்தி விற்றதன் மூலம் அவர்கள் மிகக்குறுகிய காலத்தில் ரூ.250 கோடி வரை சம்பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பணத்தை கொண்டு அவர்கள் டெல்லி உள்பட பல இடங்களில் சொகுசு பங்களாக்கள் வாங்கி உள்ளனர்.

டெல்லி புறநகர் பகுதியில் பெரிய பண்ணை வீடும் வாங்கி, அங்கு வசித்து வந்தனர். ஆடி, டொயோட்டா, ஹோண்டா என்று விதம் விதமான கார்களில் வலம் வந்தனர்.

தங்கள் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக உசேனும், சாய்ரா பேகமும் 2 போலி நிறுவனங்களை நடத்தி வந்தனர். பெண்களை விற்பனை செய்வதற்கு அவர்களது நிறுவனங்கள் உதவியாக இருந்துள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அபக்உசேனும், சாய்ரா பேகமும் பரம ஏழையாக இருந்தவர்கள். இருவரும் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி டெல்லி சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்தைச் சேர்ந்த அபக்உசேன், டெல்லி சென்று ஒரு நிறுவனத்தில் ரூ.3 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு உத்தரபிரதேச மாநிலம் மொரதாபத்தைச் சேர்ந்த சாய்ரா அறிமுகம் ஆனார்.

சாய்ரா விபசார தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவரை 1999-ம் ஆண்டு அபக்உசேன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களை கடத்தும் தொழிலில் ஈடுபட்டனர்.

குறுகிய காலத்தில் ஏராளமான பெண்களின் விபசாரம் மூலம் அவர்களுக்கு பணம் கொட்டியது. நாளடைவில் ஏஜெண்ட் மூலம் அதிக பணம் கிடைத்தால் கோடீசுவரர்கள் ஆகி விட்டனர்.

தற்போது கைதாகி சிறையில் உள்ள அவர்களுடன் பெண்களை கடத்தியதாக மேலும் 10 பேர் உள்ளனர். அவர்கள் மீது 3895 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 126 பேர் காட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளது.

அபக்உசேன் - சாய்ரா இருவரும் பெண்களை கடத்தி விற்று சம்பாதித்த பணம் மூலம் வாங்கிய 18 பங்களாக்கள், 5 கார்கள் முடக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ப்பூரில் உள்ள ரூ. 35 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு, பகவன் நகரில் உள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவும் அடங்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.