22/06/2018

இந்திய ரூபாயை ரொக்கமா வைக்காதீர்: மக்களுக்கு பூடான் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை...


இந்திய ரூபாயை ரொக்கப் பணமாக கையில் வைத்திருக்க வேண்டாம், மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பேற்க முடியாது என்று பூடான் ரிசர்வ் வங்கியான ராயல் மானிட்டரி அத்தாரிட்டி (ஆர்எம்ஏ) எச்சரிக்கை செய்துள்ளது

இந்தியாவில் கறுப்புப் பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லது என்று பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பிரதமர் மோடி கடந்த 2016, நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார்.

இந்த அறிவிப்பால், அண்டை நாடான நேபாளம், பூடான் நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. ஏனென்றால், இந்திய ரூபாயை அங்கு மக்கள் தாராளமாக பயன்படுத்திக்கொள்ள மக்களுக்கு அந்த நாட்டு ரிசர்வ் வங்கிகள் அனுமதி அளித்து இருந்தன.

இந்திய அரசின் திடீர் உத்தரவால் அந்த நாட்டில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி, பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றினார்கள். ஏறக்குறைய ஒரு ஆண்டுக்குப் பின் அங்கு நிலைமை சீரடைந்தது.

இந்தச்சூழலில் அண்டை நாடான பூடான், தனது மக்களுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ரூபாயை கையில் ரொக்கமாக அதிகமான அளவுக்கு வைத்திருக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''இந்திய ரூபாய் நோட்டுகளைக் கையில் ரொக்கமாக வைத்திருக்கும் மக்கள், முடிந்தவரை அதை வங்கியில் செலுத்தி தேவைக்கு ஏற்றார்போல் எடுத்துப் பயன்படுத்துங்கள். இந்திய ரூபாயை ரொக்கமாகக் கையில் வைத்து செலவு செய்வதையும், சேமித்து வைத்திருப்பதையும் தவிர்க்கவும் என ராயல் மானிட்டர் அதாரிட்டி (ஆர்எம்ஏ) கேட்டுக்கொள்கிறது.

கடந்த 2016-ம்ஆண்டில் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் போல் ஏதேனும் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட்டால், மக்கள் கையில் வைத்திருக்கும் இந்திய ரூபாய்க்கு பூடான் ரிசர்வ் வங்கி எந்தவகையிலும் பொறுப்பேற்காது.

இந்திய ரூபாயில் 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் அதிகமாகப் புழங்குவதால், 500 ரூபாய் நோட்டுகளை ஏற்கும் போது, மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். இந்திய ரூபாய்களில் ரூ.500 நோட்டுகளை ரூ.25 ஆயிரத்துக்கு மேல் அதிகமாக வெளியே எடுத்து செலவு செய்ய வேண்டாம், சேமிக்கவும் வேண்டாம்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பூடானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உள்ள ஒரு அதிகாரியிடம் இந்த அறிவிப்புக்குப் பின்புலம் குறித்துக் கேட்டபோது, ரிசர்வ் வங்கி ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்போகிறதா என்பது குறித்து ஏதும் தெரியாது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ரூபாயைக் கவனமாக வைத்திருக்கவும், சேமிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

Source : http://tamil.thehindu.com/india/article24221847.ece/amp/?utm_source=HP&utm_medium=hp-tsothers&__twitter_impression=true

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.