20/09/2018

குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை வளமாகிறது...


குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும்.

குலதெய்வம் என்பது தெய்வங்களக்கு எல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.

தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.

பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள்.

குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது.

நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.

அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில் தான்.

குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம்.

சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர்.

அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.

ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும் பித்ருக்களின் ஆசியும் மிக மிக மிக முக்கியம்.

இவர்களை திருப்தி படுத்தாது நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது பயன் தரவே தராது.

குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி தெரிந்து கொள்ளும் முன், குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும்.

பிரார்த்தனைகளில் மிகவும் முக்கியமான பிரார்த்தனை குல தெய்வ பிரார்த்தனை ஆகும்.

குல தெய்வ பிரார்த்தனையை தவிர்த்து வேறு எந்த பிரார்த்தனை செய்தாலும் அதில் பலனில்லை.

ஆயிரம் கோயிலுக்கு சென்றாலும் குல தெய்வ பிரார்த்தனை செய்யாதவர்களுக்கு ஆயிரம் கோயிலுக்கு சென்ற பலன் நிச்சயம் கிடையாது.

குல தெய்வ பிரார்த்தனை என்பது உங்களது தந்தை, தாத்தா, முப்பாட்டன் அவர்களுக்கு முன்னாள் உள்ள மூதாதையரால் வணங்கப்பட்ட தெய்வம் ஆகும்.

குல தெய்வம் கோயிலுக்கு சென்று நீங்கள் வணங்கும் போது அந்த குலதெய்வத்தின் அருள் மட்டும் அல்லாமல் உங்களுடைய மூதாதையரின் ஆசியும் கிடைக்கின்றது.

அதுபோன்று குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை வளமாகிறது. உங்களுடைய சந்ததிகளும் சுகமாக வாழ்வார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.