05/09/2018

கர்மயோகம் அருள் விளக்கங்கள்...


கர்ம யோகம் என்பது கடமை அறம் என்பதாகும். தனக்கும் சமுதாயத்திற்கும் எந்த துன்பமும் விளைவிக்காமல், நன்மையே தரக்கூடிய செயல்களை மட்டும் செய்து வாழ்வது கர்ம யோகம்.

கர்மம் என்றால் செயல். செயல் என்பது கடமையை குறிக்கின்றது. கடமை என்பது நன்றி உணர்வு.

தொப்புள்கொடி (பிறப்பு) அறுப்பது முதல் அரைஞான் கயிறு (இறப்பு) அறுப்பது வரை மனிதனானவன் பிறருடைய உதவியால் வாழ்ந்து வருகிறான்.

அவனது வாழ்வில் அவன் சாதித்ததாக நினைக்கும் அனைத்தும், அவன் பெற்றது அனைத்தும் சமுதாயத்தால் அவனுக்கு அளிக்கப் பட்டவைகளே.

இதை மனித மனம் உணர்ந்து தன்னால் இயன்ற அளவு, தன்னுடைய அறிவைக் கொண்டும் பொருளைக் கொண்டும், உடலைக் கொண்டும் சமுதாயத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்து இன்புறுவது கடமை ஆகும். இதுவும் ஒருவகையில் தொண்டு ஆகும்.

யோகம் என்றால் அறவாழ்வு. அறவாழ்வு என்பது விளைவறிந்த விழிப்பு நிலையில் தனது எண்ணம், சொல், செயல்களை ஒழுங்குபடுத்தி சமுதாயத்திற்கும், தனக்கும் ஒத்தும் உதவியும் வாழக்கூடிய வாழ்வு ஆகும்.

இறைநீதி ஆனது நமது செயல்களுக்கு ஏற்ற விளைவாக இன்பத்தையோ துன்பத்தையோ அளிக்கிறது என்பதை உணர்ந்து நன்மைகளை மட்டுமே ஆற்றி இன்பத்தை மட்டுமே பெற்று வாழ்வது விளைவறிந்த விழிப்பு நிலை ஆகும்.

நம்மை வாழவைக்கின்ற சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை திருப்பி செலுத்துவதே கர்ம யோகம் எனும் கடமை அறம் ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.