24/12/2018

அழிவின் விளிம்பில் நீலகிரி வரையாடுகள்: கவனிக்குமா அரசு?


தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக வன உயிர் கூட்டமைப்பின் இந்திய பிரிவு (WWF-Inida)தெரிவித்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் தமிழக - கேரள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் இப்போது 2500 வரையாடுகள் மட்டுமே இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் தமிழக மற்றும் கேரள வனத்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அதில் 3122 வரையாடுகள் வரை இருப்பதாக தெரியவந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், வேகமாக அவை தொடர்ந்து அழிவதாகவும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கேரளத்தில் மட்டும், அம்மாநில அரசு மேற்கொண்ட கணக்கெடுப்பில் சுமார் 1,420 வரையாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது. அவற்றில் சுமார் 664 வரையாடுகள், எரவிக்குளம் தேசியப் பூங்காவில் மட்டுமே தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி வரையாடு அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. இந்த நீலகிரி வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவில் வேறெங்கும் காணப்படுவதில்லை.

மேலும், தமிழின் சங்க இலக்கியப் பாடல்களில் வரையாடு குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. வரையாடுகள் கடல் மட்டத்திலிருந்து 1,200 முதல் 2,600 மீட்டர் உயரம் உள்ள மலையில் புற்கள் அடர்ந்த சோலைப் புல்வெளி பகுதியில் வசிப்பவை. பாறைகளில் முளைத்துள்ள புற்களையும், தாவர இலைகளையும் இவை உணவாக்கி கொள்ளும். முதிர்ந்த ஆண் வரையாடு சராசரியாக 100 கிலோ எடையும் 110 செ.மீ. உயரமும் இருக்கும். பெண் வரையாடு சராசரியாக 50 கிலோ எடையும் 80 செ.மீ. உயரமும் இருக்கும். பெண் வரையாட்டின் கொம்பு ஆண் வரையாட்டின் கொம்பைவிடக் குட்டையாகவும் பின்னோக்கிச் சரிவாகவும் அமைந்திருக்கும்.

ஆண் வரையாடு அடர் பழுப்பும் மெல்லிய கறுப்பும் கலந்த வண்ணத்தில் இருக்கும். பெண், சாம்பல் நிறத்தில் காணப்படும். ஆண் வரையாடுகள் தனியாகவும், பெண் வரையாடுகள் கூட்டமாகவும் வசிக்கும். ஆண் வரையாடுகளில் யார் தலைவன் என்ற போட்டி அதற்குள் சண்டை சாகும்வரை நடைபெறும். வரையாடுகள் இனப்பெருக்க காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையாகும். ஆறு மாத காலம் வயிற்றில் குட்டியைச் சுமக்கும் இவற்றின் ஆயுள்காலம் 5 முதல் 6 ஆண்டுகள்.

இவைகளை எங்கெல்லாம் பார்க்கலாம்?
களக்காடு அருகே முத்துக்குளி வயல், மேகமலை ஹைவேவிஸ், ஆனைமலை, நீலகிரி மலை, வால்பாறை, கேரளத்திலுள்ள அமைதி பள்ளத்தாக்கு, பரம்பிக்குளம், ரண்ணி வனப்பகுதிகளில் வரையாடுகள் நடமாட்டத்தை பார்க்கலாம்.

அச்சுறுத்தல்கள் என்ன ?
வரையாடுகளுக்கு இயற்கையான எதிரி சிறுத்தை, புலிகள் மற்றும் மனிதனே ஆவான். வரையாடுகளுக்கு புல்வெளிகள் நிறைய வேண்டும். அதுவும் உயரமான மலைகளில் இருக்க வேண்டும். மேலும் காடுகளின் பரப்பளவுகள் சுருங்கிக் கொண்டு வருவதால் வரையாடுகளுக்கு தேவையான உணவு கிடைக்காததால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வருகிறது.

இவை காலையும், மாலையும் மட்டுமே மேய்ச்சலுக்கு செல்லும். பகல் பொழுதில் ஓய்வெடுத்துக் கொள்ளும். இரவில் வரையாடுகளுக்கு பார்வை தெரியாது. அதிகமான மழைப்பொழிவு, செழிப்பான பிரதேசங்களில் மட்டுமே இவை வசிக்கின்றன....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.