05/02/2019

பெண் போலிஸ் மர்ம மரணத்தை மூடி மறைக்கும் சிறைத்துறை...


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், திருச்சியில் பெண் சிறை வார்டன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்திற்கு காரணத்தை மூடி மறைக்க சிறை நிர்வாகம் முயற்சிப்பதாக நமக்கு வந்த புகாரை அடுத்து விசாரித்த போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் செந்தமிழ்ச்செல்வி (24). திருச்சி காந்தி சந்தை பகுதியில் உள்ள மகளிர் சிறையில் வார்டனாகப் பணியாற்றி வரும் இவர் அருகிலுள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று 03.02.2019 மாலை வீட்டில் தனியாக இருந்தபோது திடீரெனத் தூக்கில் பிணமாகத் தொங்கினார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் கே.கே.நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் செந்தமிழ் செல்வியின் உடலை கைப்பற்றித் திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தமிழ் செல்வியின் தற்கொலை குறித்து விசாரணையில் இறங்கியபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

2017ம் ஆண்டு தேர்வானவர் செந்தமிழ் செல்வி. அதே ஆண்டு தேர்வானவர் அரியலூர் மாவட்டம் திருமாந்தூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர்கள் இரண்டு பேரும் அகில இந்திய அளவில் சிறைதுறை விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர் என்கிற முறையில் ஆரம்பித்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நட்பு அடிப்படையில் ஏற்பட்ட பழக்கம் தினமும் செல்போனில் பேசும் அளவிற்கு மாறியிருக்கிறது. செந்தமிழ் செல்வி சிறைத்துறையைச் சேர்ந்த குடியிருப்பு பகுதியான R பிளாக்கில் தங்கியிருக்கிறார். இவருடன் 3 பெண்கள் தங்கியிருக்கிறார்கள். உடன் தங்கியிருப்பவர்கள் பணி நேரத்தில் வெளியே செல்லும் நேரங்களில் வெற்றிவேல் செந்தமிழ்செல்வியின் அறைக்கு வந்து விடுவாராம்.

இந்தப் பழக்கம் எல்லைமீறிச் சென்றிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் வெற்றிவேலிடம் திருமணம் செய்யச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் வெற்றிவேலோ நீ என்ன ஜாதி, நான் என்ன ஜாதின்னு தெரியுமா! உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது. நீ என்னோட பழகின, நா உன்னோட பழகின அவ்வளவு தான். எனக்கு இந்த மாதம் 6ம் தேதி திருமணம் நடக்கப் போகிறது என்று சொல்லியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த செந்தமிழ் செல்வி வெற்றிவேலின் காலில் விழுந்து என்னை ஏமாற்றிவிடாதே! உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், எனக்கு வாழக்கை கொடு, இல்லை போலிஸ் சூபிரடென்டிடம் சொல்லி உன்மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்லுவேன் என்று கெஞ்சியிருக்கிறார்.

இதை எல்லாம் பெருசா எடுத்துக்கொள்ளாத வெற்றிவேல் என்னோட அண்ணன் கைலாசம் இதே சிறையில் விஜிலன்ஸ் அதிகாரியாக இருக்கார். நான் அவரை வச்சு எல்லாத்தையும் சரி பண்ணிக்கிறேன். நீ மோசமுன்னு சொல்ல வச்சுடுவென் என்று மிரட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் தான் செந்தமிழ்செல்வி தற்கொலை செய்திருக்கிறார் என்கிறார்கள். ஏமாற்றிய வெற்றிவேல் திருமணம் 6-ம் தேதி நடக்க இருக்கிறது என்கிறார்கள். சிறைதுறையில் உள்ளவர்கள்.

செந்தமிழ்செல்வி தற்கொலை தொடர்பாக, அவரின் மாமா ரவியிடம் பேசியபோது,  ‘செல்வியும் வெற்றிவேலும் காதலித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில்  செல்வி திருமணம் செய்துகொள்ள சொல்லி வெற்றிவேலிடம் கேட்டபோது  ஜாதியை காரணம்காட்டி தவிர்த்திருக்கிறார். இதற்கு வெற்றிவேலின் அண்ணனும் உடந்தையாக இருந்திருக்கிறார்.  இதனிடையில் வெற்றிவேல் குடும்பத்தினர் வெற்றிவேலுக்கு  வேறொரு பெண்ணுடன் பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட செல்வி மனவுளைச்சலில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வேற்றிவேலை தொடர்புகொண்டு அவரின் விளக்கத்தை பெற முயற்சித்தோம், ஆனால் அவரின் செல்ஃபோன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என வருகிறது. 

வெற்றிவேல், செந்தமிழ்செல்வி செல்போன், வாட்ச்ஆப், ஆகியவற்றை ஆய்வு செய்தால் உண்மை வெளியே வரும். இல்லை என்றால் வழக்கம் போல் குடும்பச் சுழல், மனஉளைச்சல், கடிதம் எழுதி வைத்துவிட்டார் என்று வழக்கான கதைகளைச் சொல்லி செந்தமிழ்செல்வி மரணத்தின் மர்மத்தை மண்ணோடு புதைத்து விடுவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.