08/02/2019

இசுலாமியர் கட்டிய முருகன் கோவில்...


இசுலாமியர் முருகனை ஏற்பதில்லை என்பாருக்கு...

இஸ்லாமியர் கட்டிய முருகன் கோவிலை பற்றிய செய்தி..

புதுச்சேரியில் உள்ள ஒரு முருகன் கோயிலை கட்டியது இஸ்லாமியர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழும் அந்த கோயிலைப் பற்றி தற்போது பார்ப்போம்.

புதுச்சேரி ரயில் நிலைய வாயிலின் அருகே உள்ள சாலைக்கு எதிரே அழகாய் அமைந்துள்ளது "கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில்".

அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள இக்கோயிலை கட்டியவர் மதுரையை பூர்வீகமாக கொண்ட முகமது கௌஸ்.

1940ம் ஆண்டுகளில் அவரது முன்னோர்கள் புதுச்சேரியில் குடியேறிய பின்,கடவுள் முருகன் மீது மிகுந்த பற்று கொண்டதால் முருகன் கோவிலை கட்ட எண்ணியுள்ளார்.

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், இந்துக்களுக்கான கோயிலைக் கட்டுவதில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டிவந்தது.

எனினும், கடந்த 1970ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பி.டி.ஜாட்டியுடன் சேர்ந்து கோயிலுக்கான அடிக்கல் நாட்டி அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து கோயிலைக் கட்டி முடித்தார் முகமது கெளஸ்.

1977-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்தார்.

பின்னர் கோயில் கட்டியவரின் பெயருடன் இணைந்து கௌசிக பாலசுப்பிரமணிய சாமி திருக்கோயில் என பெயர் பெற்று இன்று வரை அழைக்கப்படுகின்றது.

சித்ரா பவுர்ணமி, வைகாசிப் பெருவிழா,கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபப் பெருவிழா என வருடம் முழுவதும் இத்திருக்கோயில் மின்னுகிறது.

2003-ம் மரணமடைந்த முகமது கௌஸூக்கு பின் அவரது மகன் முகமது காதர் தற்போது கோயிலை நிர்வகித்து வருகிறார்.

இக்கோயிலுக்கு கடந்த 2002ம் ஆண்டில் இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போது 3வது முறையாக கும்பாபிஷேகம் (23.06.2018) நடைபெறவுள்ளது.

மதங்களின் பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக இன்று உயர்ந்து நிற்கிறது இந்த கௌசிக பாலசுப்ரமணிய கோவில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.