28/03/2019

சட்டவிரோத வடமாநில அடியாள் கும்பலை வைத்து தமிழர்களை தாக்கும் சுங்கச் சாவடிகள் இழுத்து மூடப்பட வேண்டும் - மே பதினேழு இயக்கம்...


தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் இன்று மருத்துவமனைக்கு செல்லும் வழியில் திண்டிவனம் அருகே உள்ள  தொழுப்பேடு சுங்கச் சாவடியில் வடமாநில கும்பல் அவரது காரை மறித்துள்ளனர். அந்த வாகனத்திற்கு இந்தியா முழுதும் செல்வதற்கான உரிமம் பெற்ற அட்டையைக் காண்பித்தும் அந்த கும்பல் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டுள்ளது. இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் இப்படியான வடமாநில அடியாட்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த சட்ட விரோத அடியாட்களுக்கு மக்களின் வாகனங்களை மறிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது. எந்த விதியின் அடிப்படையில் இந்த அடியாட்கள் நிறுத்தப்படுகிறார்கள்.

 இப்படிப்பட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் அனைத்து சுங்கச் சாவடிகளும் இழுத்து மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பல்வேறு சுங்கச் சாவடிகள் காலக்கெடு முடிந்த பின்னரும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. சுங்கக் கட்டணத்தின் பெயரால் மிகப் பெரும் பகல் கொள்ளை இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த கொள்ளைகளுக்கு மத்தியில், தமிழ் தெரியாத வடமாநில கும்பலை நிறுத்தி வைத்து தமிழர்களை மிரட்டும் வெட்கக் கேடான செயல் தொடர்வது நிறுத்தப்பட வேண்டும்.

சுங்கச் சாவடிகள் இழுத்து மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து எழுப்ப வேண்டும்.

- மே பதினேழு இயக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.