09/04/2019

மச்சானுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய விஜயகாந்த் அழைப்பு.. டி.ராஜேந்தர் மறுப்பு...


அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி, வட சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. உடல் நிலை பாதிப்பு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

சென்னையில் உள்ள இல்லத்தில் ஓய்வில் இருந்துவருகிறார். அவருடைய மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா  தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இதேபோல விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், தனது இளைய மகன் குறளரசனின் திருமணத்துக்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் டி. ராஜேந்தர், விஜயகாந்த் இல்லத்துக்கு நேற்று முன் தினம் சென்றிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போது அரசியல் நிலவரம், தேர்தல் நிலவரங்களை விஜயகாந்தும், டி. ராஜேந்தரும் பகிர்ந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் சுதிஷுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யும்படி டி.ராஜேந்தரிடம் விஜயகாந்த் கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், விஜயகாந்தின் வேண்டுகோளை டி.ராஜேந்தர் நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமண வேலைகள் அதிகம் இருப்பதால், பிரசாரத்தில் ஈடுபட டி.ராஜேந்தர் ஆர்வம் காட்டவில்லை என்றும் தேமுதிகவில் உள்ள நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.