07/08/2020

எஸ்வி சேகர் எந்த கட்சி? எஸ்.வி. சேகரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை; ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார் எஸ்.வி.சேகர் - முதல்வர் பழனிசாமி...


"எஸ்வி சேகர் எந்த கட்சி ? எதையாவது பேசுவார்.. வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டல் செய்துள்ளார்.

ஜெயலலிதா காலத்தில், அதிமுகவில் சேர்ந்து எம்எல்ஏவானவர் நடிகர் எஸ்வி சேகர். பிறகு அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பாஜக ஆதரவாளராக உள்ளார்.

இந்த நிலையில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், அண்ணா திமுக என்ற பெயரில் அண்ணாவை நீக்கி விட்டால் மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அம்மா என்ற பெயரை அண்ணாவுக்கு பதிலாக சேர்த்துக்கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களிலும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்த எஸ்வி சேகர் தனது சம்பளப் பணத்தை திருப்பி செலுத்த முடியுமா, ஓய்வூதிய பணத்தை திரும்ப கொடுப்பாரா என்று அடுக்கடுக்காக ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

"நான் உழைத்து சம்பாதித்த பணத்தை எதற்கு திருப்பி தர வேண்டும்" என்று எஸ்விசேகர் பதில் வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில், இன்று, திண்டுக்கல் வருகை தந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது எஸ் வி சேகர் கருத்து பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது.

முதல்வருக்கு இந்தி தெரியும் என்று எஸ் வி சேகர் கூறியுள்ளார். எங்களுக்கு இந்தி தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும். முதலில் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர்? பாஜகவை சேர்ந்தவரா? அப்படியானால் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவே இல்லையே. லோக்சபா தேர்தலின்போது அதிமுக மற்றும் எங்களுடைய கூட்டணியைச் சேர்ந்த பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தோம். அப்போது எங்கேயுமே அவர் பிரச்சாரத்திற்கு வரவில்லை.

முன்பு அவர் அதிமுகவில்தான் இருந்தார். அதிமுகவைதான் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். சரியான முறையில் கட்சிக்கு ஒத்துழைப்பு தராத காரணத்தால், 'அம்மா' அவரை நீக்கினார். எனவே அவருக்கு பதில் சொல்லதேவையில்லை. அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக நான் நினைக்கவில்லை. ஏனெனில், எஸ்வி சேகர் ஏதாவது பேசுவார், பிறகு வழக்கு வந்தால், ஓடி ஒளிந்து கொள்வார். இவ்வாறு சரமாரியாக பதிலடி கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற புது காலகட்டம் அது. அப்போது, தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான், பெண் பத்திரிக்கையாளர்கள் தொடர்பான மோசமான பேஸ்புக் பதிவை ஷேர் செய்திருந்தார் எஸ்வி சேகர். இது தொடர்பாக போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், எஸ்வி சேகர் தலைமறைவாக இருந்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.