06/10/2021

சித்தர் ஆவது எப்படி - 6...

 


சாமியே சரணம் குருவே சரணம்...

சாமியே சரணம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.. சாமியை பிரித்தால் ச்+ ஆம்+ இ ஆக பிரியும்.. ச் என்ற நிகழ் காலம் ஆம் என்று அப்படியாய் இ என்று இருப்பவனே என பொருளாய் அமையும்...

சாமி என்றால் நிகழ் காலமாய் இருப்பவன் என பொருள்.. சாமியே என்று கடவுள் சிலைக்கு முன் வேண்டும் பக்தன், சிலையை சிலையாகத் தான் பார்கின்றானே தவிர அதை சாமியாக பார்ப்பதில்லை..

வேண்டுதல் என்ற செயல் பாட்டிற்கு முன்னே நிகழ் காலம் காணாமல் போய் விடுகிறது..

எண்ண ஆதிக்கங்கள் விளைவாக வேண்டுதல் எதிர்காலமாக தொடர்ந்தால் அங்கே நிகழ் காலம் இருக்க முடியாது..

சிலை என்பது ச் + இலை அதாவது நிகழ் காலம் இல்லை என பொருள்.. அது மட்டுமா மனிதன் சிலை அல்லாத உயிரோட்டம் உள்ள ஜீவர்களையுமே சிலை வடிவாகத் தான் பார்க்கிறான்..

அப்படி அன்பு நிலை இல்லாது சிலை வடிவாக அனைத்தையும் காணும் பண்பு எதனால் வந்தது?

நீர் பூதமாகிய சித்தத்தில் நிறைந்துள்ள பழைய எண்ண பதிவுகளின் ஆதிக்கமே காரணம்..

சிவம் என்ற சொல் நிகழ் கால குறிக்க வந்த சொல் என்பதை முன்பே அறிந்தோம்... அந்த நிகழ் காலமாய் மாறினால் மட்டுமே அன்பு என்பது உருவாகி சிவமே அன்பாகும் அல்லது அன்பே சிவமாகும்..

இந்த நிகழ் காலத்தில் அன்பு ஒன்று மட்டுமே உருவாகி இருப்பதால், சித்தத்தின் எண்ண ஆதிக்கம் இருக்கவே இருக்காது..

இப்படி சிலையை சாமி ஆக்க, அன்பு மலர, சிவம் தோன்ற, நிகழ் காலம் உதிக்க ஒரு சக்தி தேவை படிகிறது அல்லவா அது தான் குரு என்பது...

அந்த குரு, இரு என்ற நிலையில் இருந்து உருவாகிறது.. இரு என்ற இருத்தல் நிலை உருவாகும் வரை குரு தோன்றவே மாட்டார்.. எல்லா எண்ணங்களும் கற்பனை செயல் வடிவாய் இருப்பதால் இருத்தல் என்பது அதற்கு தெரியவே தெரியாது...

செயலாகிய இயக்கம் இருக்கும் இடத்தில் எப்படி இருத்தல்,நிலைத்தல், ஒய்வு, அமைதி இருக்க முடியும் ?  கற்பனை செயல் வடிவமாக, பிரகாசமாக இருந்து, கனல் என்ற பேரண்ட மூல ஆற்றலை, விரையமாக்கும்...

சித்தத்தின் எண்ண ஆதிக்கம் இல்லாத ஒரு இடம் தான், தொட்டு காட்டக் கூடிய தகுதியான ஒரு இடம் ஆகும்..

அங்கே மட்டுமே, இருத்தல் என்ற கனலின் இருப்பு நிலையை அடையாளம் காண முடியும்..

கனலின் இருப்பு நிலை என்பது கனலின் நிலையாய் நின்ற நிலை அதாவது static energy.. அதாவது கனல் சேமித்த அல்லது சேமிக்கப் பட்ட நிலை...

இந்த சேமித்த கனல் தான், புத்தி என்ற பூதமாய் பேரறிவின் துணையோடு சக்தி வாய்ந்த குருவாய் மலர, உருவாகத் தொடங்குகிறது..

குரு என்பது பிரிந்தால் க்+உரு ஆகும்.. க் என்றால் கடவுள் தன்மையிலிருந்து பெறும் கனல் சக்தி ஆகும்.. உரு என்பது உருவாகி பயன்பாட்டிற்கு வருவதாகும்...

சேமிக்கப் பட்ட கனலால் மட்டுமே, வலுவடைந்த புத்தி, குருவாய் எழுந்து செயலாற்ற தொடங்க முடியும்...

அப்படி கனலை பெருக்கும் பயிற்சி தான் கனல் தீட்சை என்கின்றனர்.. திருவடி தீட்சையும் நாத தீட்சையும் நயன தீட்சையும் கனல் தீட்சையின் உட் பிரிவாக உள்ளன...

ஆனால் வாசி யோகத்தில் இந்த கனல் தீட்சை மிக மிக எளிமையானது.. விரைவில் கனலை அதிகப் படுத்தக் கூடியது..

முறை தவறி போன வாசியோகத்தில் அங்கே கனல் பெருக்கத்திற்கு பதிலாக கனல் சுருக்கம் ஏற்பட்டு புத்தி வலு இழந்து போன அவல நிலை தான்..

ஆகவே முறையற்ற வாசியோகம், கனலை காட்ட தவறி விட்டது என்றே தோன்றுகிறது.. காரணம் தோன்றா நிலையாகிய பேரறிவு அதில் அனுபவப் படாததே...

வாசியோகத்தில் எவ்வாறு இந்த கனல் பெருக்கம் ஏற்படுகிறது என்பதை சற்று கவனிப்போம்..

குரு உருவாகாதவரை, சித்தத்தின் ஆதிக்கத்தை வேறு எந்த பூதத்தாலும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது...

அதே சமயம் சித்தத்தின் ஆதிக்கம் இருக்கும் வரை குரு உருவாக மாட்டார்..

இந்த இக்கட்டான சூழ்நிலைதான் மனிதனை மேல் நிலைக்கு ஏற விடாமல் செய்கிறது..

இதிலிருந்து மீள தான் சித்தர்கள் வாசி யோகத்தை கண்டு அறிந்து பயின்றார்கள்..

சித்தத்திலிருந்து எண்ண ஆதிக்கங்கள் எழ அதற்கு சக்தி வேண்டும்.. சக்தி கிடைக்காவிட்டால் அது சித்தம் என்ற நீர் பூதத்தின் உள்ளே புதைந்தே கிடக்கும்..

கனல் சக்தி என்பது சதா காலமும் பேரண்ட பேராற்றலாய் சீராக கிடைக்கக் கூடிய ஓன்று..

எந்த ஏற்ற தாழ்வும் இன்றி சீராக கிடைக்கும் கனல் என்ற சக்தியை சித்தத்தின் எண்ண ஆதிக்கம் உறிஞ்சாத போது கனல் சற்று தேகத்திற்கு மனம் கொடுக்கிறது..

அப்படி பெற்ற ஆற்றலின் மூலம் தேகம், தான் தூக்கத்தில் பெற்ற ஆற்றலோடு இணைத்து ஈடு கட்டிக் கொள்கிறது..

சித்தத்தின் அதி மிக எண்ண ஆதிக்கம், அப்படி தேகம் ஈடு கட்டும் ஆற்றலையும், உறிஞ்சி வாங்கி கொள்ளும் போது, தேகம் விரைவாக ஈடு கட்டும் ஆற்றல் இன்றி சோர்வு அடைகிறது...

இதன் மூலம் அறியப் படும் இரகசியம் என்ன வென்றால், சித்தத்தின் எண்ண ஆதிக்கம் வலு இழக்கச் செய்யும் முறையிலும், அப்படி வலு இழந்த கால அளவை நீடிக்க செய்வதின் மூலமும் புத்தி அதிக கனலை பெற முடியும்..

சித்தத்தை வலு இழக்க செய்ய வல்லது எது.. வாசி யோகத்தில் மூச்சின் சூரிய கலையாகிய வெளி மூச்சில் சித்தம் சிறுக சிறுக வலு இழந்து சூரிய கலையின் முடிவில் முழுமையாக வலு இழந்து விடுகிறது..

அந்த இடத்தை புத்தியும் அறிவும் பிடித்துக்கொள்ளும் பொழுது அங்கே அகப்படும் கனல் அனைத்தையும் புத்தியும் அறிவும் பெற்றுக் கொள்கிறது..

சூரிய கலையில் வலு இழந்த அந்த முடிவான இடத்தின் தளர்ந்த அமைதியான சூழ்நிலையை அனுபவமாக அறிவு பற்றிக்கொள்ளும்...

அத்தகைய சூரிய கலையின் இரண்டரை விநாடி முழுமைக்கும் அளப்பறிய கனலை பெற்றுக்கொள்ளும் ஒரு அற்புத நிகழ்வினை எமது வாசி யோக பயிற்சியில் அனுபவப் பட்டீர்கள் என நம்புகிறேன்..

இதில் அனுபவ அறிவு தான் கனலை பெறும் கால அளவினை விரிவாக்கம் செய்ய கூடியது..

இதனை சுட்டி காட்டாத இன்றைய வாசியோகம், அற்ப கனலை மட்டுமே பெற்று, அதனையும் முறையற்ற பயிற்சியின் தீவிரத்தில் இழந்து விடுகிறது...

நம் முறையான வாசியோகத்தில் இப்படியாக பெற்ற கனல் உருவாகி குரு பலமாகிறார்.. பலப் பட்ட குரு தான் நமக்கு எல்லா வகையிலும் புத்தியாக இருந்து சிறந்த வழி காட்டியாக இருக்கிறார்..

அனுபவ அறிவின் துணையை இனி வரும் பகுதியில் கண்டு குரு பீடத்தை வலு படுவதை காணலாம்...

இதுவும் இனி வரும் பகுதிகளும் சற்று கடினமானவை..  அவைகளை அடுத்த பதிவுகளில் காண்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.