09/05/2017

வாக்குப்பதிவு இயந்திரத்திலும் முறைகேடு நடக்கும் என்று நிரூபித்தது ஆம் ஆத்மி...


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி மோசடி நடைபெற முடியும் என்பதை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ டெல்லி சட்டசபையில் நேரடியாக மாதிரி இயந்திரத்தில் செய்து காட்டி விளக்கினார்.

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மின்னணு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்று குற்றம்சாட்டி வந்தன. ஆம் ஆத்மி தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டை கூறி வந்தது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் சோதனையின் மூலம் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளார் ஆம் ஆத்மி எம்.எல்.ஏவாக இருக்கும் சவுரபா பரத்வாஜ். இவர், மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற முடியும் என்பதை சோதனையை செய்துக்காட்டி விளக்கினார்.

அவர் பேசும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தேர்தல் ஆணையம் கொடுக்கும் விளக்கம் அர்த்தமற்றது. எந்த அடிப்படையில் இந்த இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற முடியாது என்று கூறுகின்றனர். நான் கடந்த பத்து வருடங்களாக கணினி பொறியாளனாக இருந்து வருகிறேன். பல நிறுவனங்களின் வேலை பார்த்து இருக்கிறேன். அதன் 'மதர்போர்டை' மாற்றி அமைப்பதற்கு எனக்கு 90 நொடிகள்தான் தேவைப்பட்டது' என்று கூறிய அவர் இயந்திரத்தில் உள்ள ரகசியக் குறியீடைக் காண்பித்து விளக்கினார்.

அவர் அந்த ரகசியக் குறியீடை அழுத்தினார். அதன்பின்னர், எந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதை எந்த நேரத்திலும் முடிவு செய்ய முடியும் என்று விளக்கினார்.

பொது வெளியில் இத்தகைய சோதனையை மேற்கொண்டால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதால் சட்டசபையில் வைத்து இந்த சோதனையை செய்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆம் ஆத்மியின் இந்த விளக்கம் தேர்தல் ஆணையத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி பயன்படுத்திய மின்னணு இயந்திரமும், தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரமும் வெவ்வேறானவை என்று தேர்தல் ஆணையத்தில் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.