27/06/2017

அழியாத கோட்டு உருவங்களும்… அழிந்து போன நாஸ்க்கா இனமும்...


நாஸ்கா எனும் நதி பெருவில் கொச கொச வென்று மேற்கிலிருந்து கிழக்காக பாயும் நதிக்கூட்டம் என்று சொல்லலாம்.

இந்த நதிகள் மற்ற நதிகளில் இருந்து வித்தியாசமானது தீடீரென்று நிலத்தினுள் சென்றுவிடும் இன்னோர் இடத்தில் நிலத்தில் இருந்து வெளியில் புறப்பட்டு செல்லும் விநோதம் மிக்கது.





கற்பனை செய்து பாருங்கள் நிரந்தரமான நதியல்ல பல இடங்களில் புற்றீசல் போல புறப்பட்டு மறையும். இந்த பெரும் பள்ளத்தாக்கில் வாழ்ந்த இனமே நாஸ்க்கா என அழைக்கப்படுகிறது.


இவர்களின் காலம் 100 AD லிருந்து 750 AD அதாவது இன்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முன் இருந்த இனம் என சொல்லலாம்.

ஒரு நாகரீகம் எந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்கிறது என்று பார்த்தால் அவர்கள் உபயோகித்த பொருட்களை வைத்து ஓரளவிற்கு மதிப்பிட்டுவிடலாம்.

இவர்கள் உருவாக்கிய செராமிக் கைவினைப்பொருட்கள் மிக அழகானது மட்டுமல்ல தொழிற்சிறப்பு வாய்ந்ததாகவும், துணி வகைகள் தரமிக்கதாகவும் அகழ்வாராய்சியினர் மதிப்பிடுகின்றனர்.


ப்யூகியோஸ் என்ற நிலத்தடி நீர் ஊற்றுக்களை அமைத்திருந்தனர். நம்மூர் கிணறு போல ஆனால் சுழற்படியில் கீழே இறங்கி செல்லவேண்டும். இது இன்றும் செயல் பாட்டில் இருக்கிறது.

ப்ரோசோபிஸ் பாலிடா  எனும் ஒருவகை மரங்கள் தான் பஞ்சு உற்பத்திக்கும் நிலத்தின் உறுதி தன்மைக்கும் காரணாமாயிருந்தது.  ஒரு கட்டத்தில் இந்த மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன.  இதனால் தீடீர் வெள்ளப் பெருக்கினால் இந்த இனத்தின் ஒரு பகுதியினர் அழிந்து போயிருக்கலாம்.

மனிதன் இயற்கை வளங்களை சுரண்டுவதும் சீரழிப்பதன் விளைவு என்னவாகும் ?  … ஆம், ஒரு கால கட்டத்தில் அற்புதமான நிலப்பகுதி அற்பமான நிலப்பகுதியாக மாறியது.

அது ஒரு வறண்ட பூமியாக சொற்பமான தண்ணீருடன் ஏறக்குறைய பாலைவனப் பூமியாக போய்விட்டது. ஆனாலும் எஞ்சிய இந்த இனம் தொடர்ந்து பல இடர்பாடுகளுடன் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இவர்களின் தீவிர இயற்கை கடவுள்  வழிபாடும் இந்த இனத்தின் அழிவுக்கு ஒரு காரணமாக சொல்கின்றனர்.

அது என்ன தீவிர வழிபாடு ?…நரபலி தான்.

குவியல் குவியலாக தலை வெட்டப்பட்ட மண்டை ஓடுகள் அகழ்வாராய்சியினருக்கு கிடைத்தன.   அதிலும் சில மண்டை ஓடுகள் நடு நெற்றியில் துளையிடப்பட்டு கிடந்தன. [ நெற்றிப் பொட்டுக்கு பதில் ஓட்டை என கற்பனை செய்து கொள்ளுங்கள் ] எதற்கு?  லாவகமாக கழுத்தில் மாட்டிக் கொள்ளலாம் அல்லது இடுப்பில் கட்டிக்கொள்ளலாம்.

இவை ஒரு பரிசுப்பொருள் போல பாதுகாக்கப்பட்டிருந்தன.   பெரும்பாலான மண்டை ஓடுகளின் நடுப்பகுதிகள் இல்லை.  அவைகள் வண்ணம் தீட்டப்பட்ட அழகிய செறாமிக் கிண்ணங்களாக கிடைத்திருக்கின்றன.





நாஸ்க்கா கோடுகள்…

இவைகளை எப்படி வரைந்தார்கள், ஏன் ? எதற்காக ?  இப்படி பல தேடற் கேள்விகள்.  இவற்றை பற்றி அடுத்த பதிவில் விரிவான தகவல் மற்றும் படங்களுடன்  காண்போம்…

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.