28/08/2017

அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை...


அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து, அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தமிழக அரசின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்ததன் பேரில், ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் இன்று அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 200 பேர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கட்சியின் பொதுச் செயலாளர் செயல்பட முடியாத நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பரிந்துரைத்தால் பொதுக்குழுவை கூட்டலாம் என கட்சி விதி இருப்பதால், அதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.