04/08/2017

ஆங்கிலத்தை தாய்மொழி என்பதா?


ம.பொ.சிவஞானம் பிறந்தநாள் விழாவில் பாரதிதாசன் எதிர்ப்பு...

சிலம்புச்செல்வர் ம.பொ.சி. 57வது பிறந்த நாள் விழா 26.8.1963இல் சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. அதில் குன்றக்குடி அடிகளார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் பங்கேற்றனர். (புகைப்படம் மேலே) அதில் பாரதிதாசன் நிகழ்த்திய தலைமையுரை வருமாறு:

அடிகளார் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! முதன் முதலில் என்னுடைய மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே நாம் கூடி இருப்பது நம் சிவஞானம் அவர்களை வாழ்த்துவதற்காக. 'சிவஞானம்' என்று சொல்லும் போது எல்லோருக்கும் சிவ உணர்வு வருவதில்லை. தமிழ் உணர்வு தான் வரும். சிவஞானம் என்று சொன்னவுடன் 'சிலம்புச் செல்வர்' நினைவுதான் வருகிறது.

சிவஞானம் என்ற பெயரில் இந்த நாட்டில் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் நம் சிலம்புச் செல்வர் சிவஞானம் அவர்கள் தமிழர்களின் நெஞ்சை விட்டு அகலாதவர். அந்த அளவுக்கு தமிழுக்காக, தமிழகத்துக்காக, தமிழருக்காக தொண்டு செய்து வருகிறார்.

இப்போது தமிழுக்கு, தமிழகத்துக்கு, தமிழருக்குத் தொண்டு தேவைப்படுகிறது. மற்றவைகளைப் பற்றி எண்ணிப் பார்க்க அவசியம் இல்லாமல் இருக்கிறது. தமிழ் அடைந்து வரும் இன்னல் சிறிதன்று, இந்த நாட்டை ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் கூட தமிழுக்காகப் பரிந்து கேட்க முன் வரவில்லை.

நம் நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. ஆனால் தமிழை முன் வைத்துத் தொண்டு செய்ய அவர்கள் முயல வில்லை. நம் சிவஞானம் அன்று முதல் இன்று வரை தமிழுக்காக, தமிழகத்துக்காக, தமிழருக்காகத் தொண்டு செய்கிறார். அன்று அவர் கிழித்த கோட்டிலிருந்து தவறவில்லை.

இங்கே நாம் இரண்டு காரியங்களுக்காகக் கூடி இருக்கிறோம். ஒன்று நம் சிவஞானம் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்த. இரண்டாவதாக. சிவஞானம் ஏற்றுக் கொண்டிருக்கும் கருத்துக்கு நாம் மனமார ஆதரவு தெரிவிக்கவும் கூடி இருக்கிறோம்...

தமிழ்மொழிக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டு காலமாக தமிழ் நெருக்கடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் அந்த நெருக்கடி அற்றுப் போகவில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்தியதால் தமிழுக்கு ஏற்பட்ட நெருக்கடி மிகப் பெரியது.

மாதர்கள் கூட நூற்றுக்கு இருபத்தைந்து சதவிகிதம் தான் தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள். 75 சதவிகிதம் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் பெரிய கலகமே ஏற்படுகிறது.

சென்னை நகர மக்கள் நாட்டுப்புறத்திற்குப் போனால், அங்குள்ள மக்களைக் கேவலமாக மதிக்கிறார்கள். காரணம், நாட்டுப்புற மக்களுக்கு இடை இடையே ஆங்கிலத்தைக் கலந்து பேசத் தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் அவர்களைக் கேவலமாக மதிக்கிறார்கள். இதைக் கூர்ந்து கவனித்த சிவஞானம் ஆங்கிலத்தை 'வரவிடாதே' என்று சொல்கிறார். ஆங்கிலத்தை நாம் எதிர்க்க வேண்டும்.

சிலர் "இந்தி, ஆங்கிலம் இரண்டும் வேண்டாம், தமிழ் போதும் என்கிறார்கள். சிலர், "இந்தி வர வேண்டாம்" என்று சொல்கிறார்கள். சிலர் "தமிழ் ஆங்கிலம்" என்று சொல்கிறார்கள். மூவர் சொல்வதும் விஷயம் ஒன்று தான். மூன்று கட்சிகள் இருக்கின்றன.

தமிழ் ஆட்சிமொழியாக, பாடமொழியாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதோ பேதப்பட்டு இருக்கிறார்கள். அதை நீங்கள் உணர்ந்து சிவஞானத்தை ஆதரிக்க வேண்டும். நாட்டுக்கு ஏற்பட்டுள்ள தீமை நீங்க வேண்டும்...

ஒரு பெரிய கட்சித் தலைவர் "ஆங்கிலமே தாய்மொழியாக இருக்கலாம் என்று சொல்கிறார். நீண்ட நாளாக தமிழ் உணர்ச்சி இல்லாததால் அத்தகைய சோம்பேறித்தனம் வந்து விட்டது.

இன்னொருவர், ஆட்சியைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர், "தமிழில் என்ன இருக்கிறது?" என்று கேட்கிறார். இப்படி கேட்கும் துணிவு எங்கிருந்து வந்தது? சென்னையில் நாம் பார்க்கிற இடம் எல்லாம் தமிழில் இல்லை. பெயர்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது.

சரி, கோயிலுக்குப் போனால் சிவபெருமான் இருக்கிறார். அவர் நம்ப ஐயா! எவனோ நம்மிடம் காசை வாங்கி ரெக்கமென்டஷன் செய்வதை சமசுகிருதத்தில் செய்கிறான். உன்தாய் மொழி எங்கே போயிற்று? தமிழ்நாட்டில் தமிழ் இல்லையா? தேவாரத்தில் இன்னின்ன வர்ணமெட்டு என்று இருக்கிறதே!

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் "தருமத்தின் பெயரால் நாங்கள் ஒன்றுபட்டு விட்டோம்" என்று அரை அணா கார்டு எழுதினால் போதும். நான் வரவில்லை என்று வடநாட்டான் சொல்லி விடுவான். நம்மிடம் அத்தகைய உணர்வு இல்லை.

இப்படிப்பட்ட புண்ணியவான்களுக்குப் பின்னால் நம் ஒற்றுமையை ஏன் காட்டக் கூடாது. சிவஞானம் அவர்களின் கொள்கையைக் கொண்ட இரண்டு கட்சிகள் இருக்கின்றன. அவர்களை இங்கே காணோம். மற்ற ஒரு கட்சி வராது. அதை நினைத்து வருத்தப்படத் தேவையில்லை.

கட்சிகள் நாட்டு ஒற்றுமையை முன் வைத்து பணியாற்ற வேண்டும். இதற்கு இன்னார் தலைவரா? நாம் இரண்டாம் பட்சமா? என்று நினைத்தால் எங்கே உருப்படுவது? அவர்களுக்கு உங்கள் மூலம் சொல்லிக் கொள்கிறேன்..."நீண்ட நாள் செல்லாது உங்கள் வாலாட்டம்".

தமிழ்ப்பற்று என்று சொல்லி ஏமாற்றிக் கட்சி நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் எல்லோரும் ஒன்றுபட்டு விட்டோம் என்று தமிழ்ப்பகைவர்களுக்குக் காட்டினால் போதும். 14 மணி நேரத்தில் சரியாகி விடும்.

நமது ம.பொ.சி. நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்தியும், அவரது கருத்துக்கு நாம் பேராதரவு தர வேண்டும் என்று சொல்லி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி: செங்கோல் (7.8.63)

குறிப்பு: 1960ஆம் ஆண்டு காமராசர் ஆட்சியில் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் உயர்கல்வியில் தமிழ்ப்பயிற்றுமொழி திட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டார். அப்போது ஆங்கிலத்திற்கு ஆதரவாக பெரியார், முதல்வர் காமராசர் ஆகியோரின் குரல்கள் உயர்ந்தன. இதன் காரணமாக தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனை எதிர்த்து ம.பொ.சி., பாரதிதாசன் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அப்போது பெரியார் "தாய்ப்பால் பைத்தியம்" என்று கிண்டல் செய்தார். பாரதிதாசன் தன்பேச்சின் ஊடே எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.