13/08/2017

புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ...


புரட்சியின் மூலம் 1959ஆம் ஆண்டு கியூபா நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற ஃபிடல் காஸ்ட்ரோ 1976ம் ஆண்டுவரை அப்பதவியில் இருந்தார். 1976ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் நாளில் இருந்து அதிபர் பதவியே நாட்டின் உயரியது என மாற்றியமைக்கப்பட்டது. அப்போதில் இருந்து 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வரை கியூபாவின் அதிபர் பதவியில் ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தார்.

ஸ்பெயின் நாட்டின் குடியேற்ற நாடாக இருந்த கியூபாவில் இருந்து அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாடிஸ்டாவின் ஆட்சியை அகற்றுவதற்கு வழக்கறிஞரான ஃபிடல் காஸ்ட்ரோவும், அர்ஜெண்டினாவின் மருத்துவரான சே குவேராவும் இணைந்து மக்களைத் திரட்டிச் செய்த புரட்சியே காரணமாகும்.1954ஆம் ஆண்டு புரட்சியின் மூலம் நாட்டைக் கைப்பற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டின் பிரதமராக இருந்து பண்ணையார்களிடம் இருந்த நிலங்களை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். ஃபிடலின் தந்தை 1940 ஏக்கர் கரும்புத் தோட்டத்தை வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

நாட்டைப் பொதுவுடைமைப் பாதையில் வழிநடத்தி அனைவருக்கும் இலவசமாகக் கல்வி அளிக்க ஏற்பாடு செய்தார் ஃபிடல். தொழிற்சாலைகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தினார்.  தன் நாட்டு வளங்களைக் கைப்பற்ற முயன்ற அமெரிக்காவுக்குத் தன் வாழ்நாள் முழுவதும் சிம்ம சொப்பனமாக விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ.

கியூபாவின் வளர்ச்சியைப் பொறுக்காத அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தபோதும் பொதுவுடைமை சோவியத் ஒன்றியத்துடன் வணிக, பொருளாதார, ராணுவத் துறைகளில் ஒத்துழைப்பை வளர்த்துக்கொண்டு கியூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்றார். வேளாண்மை மற்றும் சர்க்கரைத் துறை வளர்ச்சியால் கியூபா உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்றழைக்கப்படுகிறது. மக்களின் நலவாழ்வில் அக்கறையுடைய காஸ்ட்ரோ, உலகத்திலேயே மக்கள் மருத்துவர் விகிதத்தில் கியூபாவை முதலிடத்தில் இடம்பெறச் செய்தார்.

பிரதமர், அதிபர் என ஐம்பதாண்டுகள் நாட்டுக்குத் தலைவராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவை முதலாளித்துவ நாடுகள் சர்வாதிகாரி என்று அழைத்தன.தான் சர்வாதிகாரி அல்ல என்றும் மக்கள் நலனே முதன்மையானது என்று உணர்த்தும் வகையில் உடல்நலக் குறைவு, முதுமை ஆகியவற்றின் காரணமாக 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அதிபர் பதவியில் இருந்து விலகி உலகுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அன்று முதல் ஃபிடலின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபராகப் பதவியில் உள்ளார். அமெரிக்காவின் உளவுப்படையான சிஐஏ திட்டமிட்டுச் செயல்படுத்திய 638 கொலைமுயற்சிகளில் இருந்து உயிர்தப்பிய ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90ஆவது வயதில்  காலமானார்.

கியூபாவைப் பொதுவுடைமைப் பாதையில் வளர்ச்சி பெறச் செய்த இந்தச் சிற்பி அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தலைவராகவும் இருமுறை இருந்திருப்பது குறிப்பிடத் தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.