10/09/2017

அனிதாவின் பெயரில் கல்வி உதவித்தொகைத் திட்டம் : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு...


அனிதாவின் பெயரில் புலமைப்பரிசில்  என்று அழைக்கப்படும் மாணவர் கல்வி உதவித்தொகை திட்டத்தை  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, நாடு கடந்த  தமிழீழ அரசின் பிரதமர்  உருத்திரக்குமாரன் அலுவலகம் வெளியிட்டுள்ள  அறிக்கையில், "  தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி அனிதா சண்முகம் தன்னைத்தானே அழித்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம், உலகத்தமிழ் மக்களின் இதயங்களைச் சொல்லொணாத்துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நீட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி போராடிய அவருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் செலுத்தும் அதேவேளை அவரது பிரிவால் வாடும்; அவரது குடும்பத்தினரதும் மக்களதும் துயருடன் தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

தனது மருத்துவக் கல்விக்கான வாய்ப்பு நீட் (NEET) தேர்வுமுறையால் பறிக்கப்பட்டதை எதிர்த்து அனிதா சட்டரீதியாகப் போராடி வெற்றியடைய முடியாத நிலையில் தனது உயிரினைத் தானே அழித்து இத் தேர்வு முறைக்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசியல் ரீதியாகப் போராட வேண்டிய விடயம் ஒன்று தொடர்பாகத் தனது உயிரினை மாய்த்துக் கொள்ளும் முடிவினை அனிதா எடுத்துக் கொண்டது ஒரு துர்ப்பாக்கியமான விடயமே. இருந்தும் விரக்தியால் அவர் தன்னைத்தானே அழித்துக் கொண்டார் என நாம் இவ்விடயத்தைச் சுருக்கிவிட முடியாது.

புதிய தேர்வுமுறையால் தனது கல்வி வாய்ப்புப் பறிக்கப்பட்ட நிலையில் தனது மரணத்தின் ஊடாக இவ் விடயத்தினை ஏனைய மாணவர்களின் நன்மை கருதிய ஓர் அரசியற் பிரச்சனையாக மாற்ற அனிதா முற்பட்டிருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. சமத்துவ வாய்ப்பற்ற ஒரு கல்விச் சூழலில் தேர்வுகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் என்பவை அரசியல் ரீதியாக மிகுந்த கவனத்துடன் செய்யப்படவேண்டியவை. மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக ஆழமாகப் பரிசீலிக்கப்பட்டு எடுக்கப்பட வேண்டியவை.

வாழ்க்கையின் விளிம்புநிலையில் இருந்து போராடிக் கல்வியின் ஊடாக முன்னேற்றத்தை அடையத் துடிக்கும் அனிதா போன்ற மாணவரின் கல்விவாய்ப்பு பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரதும் தலையாய கடமையாகும்.

மாணவி அனிதா முன்வைத்த நீட் தேர்வுமுறை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்களும் மக்களும் வெளிப்படுத்தும் எதிர்ப்பினை சமூகநீதியின் அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் எதிர்ப்பாகவே நாம் நோக்குகிறோம்.

அனிதாவின் கோரிக்கைக்குக் கிடைக்கும் வெற்றி ஏதோவொரு வகையில் அவரது மரணத்துக்கு நீதி வழங்குவதாகவும் அமையும் எனவும் கருதுகிறோம். தனது கல்வி உரிமைக்காகப் போராடிய அனிதாவின் நினைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவரது பெயரில் புலமைப்பரிசில் (கல்வி உதவித்தொகைத்) திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளது என்பதனை நாம் இத் தருணத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

உருத்திரக்குமாரன், பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு..

இத் திட்டம் குறித்த விரிவான விபரங்கள் விரைவில் அறியத் தரப்படும். அனிதாவின் உயிர்த் தியாகத்துக்கு வணக்கம் செலுத்தும் அதேவேளை தமது கல்வி உரிமைக்காகப் போராடும் மாணவர்கள் எவரும் தமது உயிரினை மாய்த்துப் போராடும் முடிவினை எடுத்துக் கொள்வதனைத் தவிர்க்குமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.