24/10/2017

சித்தர் ஆவது எப்படி - 21...


அதுவாய் இருப்பதும், அதைப் பற்றி இருப்பதும்...

ஆன்மீகம் இரண்டாய் பிளந்து போய் இருக்கிறது..

ஒன்று அதுவாய் இருக்கும் மிக உன்னத நிலை..

மற்றொன்று அது என்ற ஒன்றை மறந்து விட்டு அதனால் காரியப் பட்ட விசயங்களையும், அதைப் பற்றிய விசயங்களில் மூழ்கி போய் அது என்ற அந்த ஒன்றின் தொடர்பை முற்றிலும் இழந்து விட்ட நிலை..

அதுவாய் இருக்கும் அந்த நிலையில் பல கோடி மக்களில் ஒருவர் தான் இருக்கிறார்..

மற்றவர்கள் எல்லாம் அது என்ற ஒன்றை பற்றிய விசயங்களில் பற்றிக் கொண்டு இருக்கும் நிலை....

சத்திய நிலையில் அதுவாக இருக்கும் சத்திய மகான்கள் உலக மக்கள் தொகையில் சிலர் மட்டுமே..

ஆனால் பற்றிய விசயங்களில் பற்றிக் கொண்டு அசத்திய நிலையில் உண்மை அற்ற நிலையில் தவித்துக் கொண்டு இருப்பவர்களே மற்ற அனைவரும்..

கடவுளை யாரும் நினைப்பதில்லை..
கடவுளை பற்றிய விசயங்களில் பற்றி பற்றி அதனால் தோன்றியவற்றில் மூழ்கி கடவுள் நினைப்பே இழந்து போய் விட்டனர்..

காதலை யாரும் நினைப்பதில்லை. காதலைப் பற்றிய விசயங்களிலேயே இருக்கின்றனர்..

வயது கடந்த நிலையில் வைரமுத்து என்ற கவிஞர் காதலை சொல்லுகின்ற போது காதலை மட்டுமே சொல்லுகின்றார்.. காதலை பற்றி சொல்லுவதில்லை.. அந்த கவிதைகள் பல பேருக்கு வியப்பை தருகிறது..

கடவுளை சொல்லுகின்ற போது அது பல பேருக்கு வியப்பை தரும்.. ஆனால் புரிவதில்லை.. கடவுளை பற்றி சொல்லுகின்ற போது புரிவது போல தோன்றும்.. ஆனால் சத்தியம் விளங்குவது இல்லை..

அது சத்தியமாக இருக்கிறது.. அது என்பதை விளக்க வந்தவைகள் சித்தாக உள்ளது..

அப்படி விளக்க, விவரிக்க வந்தவைகளில் சிக்கி கொள்ளாமல் விளக்க வந்தவைகள் சுட்டி காட்டும் அந்த சத்தியத்தை பிடிப்பதே புத்தி அறிவு..

ஆனால் இன்றைய நிலையில் அந்த சத்தியத்தை பிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை.. காரணம் விளக்க வந்தவைகளின் பிடிப்பு மிக வலுவாக உள்ளது.. அதிலிருந்து விடுதலை பெற முடியாமல் மனிதன் தவிக்கின்றான்..

அந்த தவிப்பின் வெளிப்பாடே மதவெறியாக மாறி விட்டது..

சித்து சுட்டிக் காட்டும் சத்தை பிடிப்பவர்கள் தான் சித்தர்கள்..

சித்து சுட்டி காட்டுபவைகளில் சிக்கி கொண்டவர்கள் பித்தர்கள், மன நோயாளிகள், மத வெறியாளர்கள்..

சத்தை பிடிப்பவர்களிடம் மட்டுமே அன்பு என்ற புனிதம் இருக்கும்..

விளக்க வந்தவைகளில் சிக்கி கொண்டவர்கள் விடுதலை பெற வேண்டுமானால் சத்து நிலையை மட்டுமே அனுபவப்படும் தோன்றா நிலையை அனுபவப் படும் போது மட்டுமே விடுதலைக் கிடைக்கும்..

கடவுளை பற்றிய விசயங்கள் அங்கே தொலைந்து போய் கடவுளையே அறியும் உன்னதம், புனிதம் கிடைக்கும்..

அந்த தோன்றா நிலையையும் அங்கே கிடைக்கும் சத்தியமான பிரபஞ்ச பேராற்றலை பெறுகின்ற புனித நிலையையும் பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு நம் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்வோம் என்றால் சித்தர் ஆவது திண்ணம், உறுதி....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.