05/11/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2... உண்மைகள் உறங்குவதில்லை -:பகுதி 2...


உண்மைகள் உறங்குவதில்லை என்கிற தீர்க்க தரிசனத்தின் பகுதியில் இன்று இடம் பெறும் தீர்க்க தரிசன குறிப்புகள் யாவும் தீர்க்க தரிசனத்தின் 2-ம் பகுதி ஆகும். அதாவது இரண்டாம் தீர்க்க தரிசனமாகும்.


மலேசியா நாட்டின் கடற்கரை ஓரமாக இடம் பெற்றுள்ள ஒரு தமிழரின் வணிக வளாகம் மிகப்பெரிய விபத்துக்குள்ளாகும். இது தமிழர்களுக்கு எதிரான ஒரு நாச வேலை ஆகும். இந்த விபத்தில் பலர் இறக்க நேரிடும். இந்த சம்பவம் நடந்து முடிந்தவுடன் மலேசிய அரசுக்கு ஒரு தீவிரவாத அமைப்பு மிகப்பெரிய எச்சரிக்கையை விடும். அந்த சமயத்தில் சீன அரசு இந்திய எல்லையிலும், நேபாளத்தின் எல்லையிலும் ஒரு மிகப்பெரிய அரசியல் சார்ந்த சம்பவத்தை நிறைவேற்றும். இதனால் இந்திய எல்லையில் ஒரு பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும். இந்த சம்பவத்தை சீன அரசு ஒரு மதக்குருவிற்கு எதிராக மேற்கொண்ட சம்பவமாக தன்னை காட்டிக் கொள்ளும் என இரண்டாம் தீர்க்க தரிசனம் இங்கு சுட்டிக் காட்டுகின்றது.


மனித ஜென்மங்கள் என்பவை ஆத்மாவின் பிறவி என அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு உண்மையாகும். அந்த வகையில் தமிழக அரசியலில் ஒரு துயரச்சம்பவம் நடந்திருந்தாலும், தற்போது புதியதாக நடக்கவிருக்கும் ஒரு சம்பவம் உலகத்தையே திரும்பி பார்க்கும்படி இருக்கும் என்றும், இந்திய அரசியல் வரலாற்றில் “ஒரு உண்மையான“ இறைசம்பவம் ஒரு ஆத்மாவின் ஏக்கத்திற்காக நடந்தது என மக்கள் யாவரும் நினைக்கும்படி அமைய உள்ளதாகவும் இதுவே “உண்மைகள் உறங்குவதில்லை“  அவை ஒருநாள் விழிப்படையும் என உணர்த்துவதாக இந்த தீர்க்க தரிசனம் அமைய உள்ளதாக குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழக அரசியல் நிலவரங்களை மக்கள் இனி உற்றுக் கவனிப்பார்கள் என்றும், இச்சமயத்தில் இயற்கையின் கோரத் தாண்டவங்கள் வரும் 2017 மே மாதம் பிறகு  தேதியிலிருந்து நடக்க உள்ளதாகவும் இது அனைவரையும் அச்சம் அடையும்படி செய்யும் என்றும் இரண்டாம் தீர்க்க தரிசனப் பகுதி இங்கு முக்கிய குறிப்பை தருகின்றது.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள 32-வது தீர்க்க தரிசனம் தற்போது வரும் மழைக் காலத்தில் துவங்கி பல பிரிவுகளாக நடந்து முடியும் என்றும், ஒரு அரசியல் பிரமுகரின் மரணம் அரசியல் அமைப்புகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், தலைமை அரசியல் அமைப்பில் சில மாற்றங்கள் திடீரென்று நடக்கும் என்று தீர்க்க தரிசனத்தின் 2-ம் பகுதி ஒரு குறிப்பை தருகின்றது.


மழை, மழை வெள்ளம், கரைபுரண்டு ஓடும் நீர், கடல் கொந்தளிப்பு, பெரிய சூறாவளி காற்று, இயற்கையின் கோர தாண்டவம் என தமிழகம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள 3 மாநிலங்கள் வெகுவாக பாதிக்கும் என்றும், அணை ஒன்றின் கரை ஓரம் உடையும் அபாயம் ஏற்படும் என்றும், ஆகஸ்டு மாதம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு என இரண்டாம் தீர்க்க தரிசனப் பகுதி மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என்ற கூற்றின்படி வரலாற்றில் நடந்த சம்பவத்தை போன்று இனி பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்கள் இடம் பெயர்ந்து வாழும் ஒரு கொடிய சூழ்நிலை தற்போது ஏற்படும் என்றும், இதற்கு இந்திய நாடு எவ்விதத்திலும் பொறுப்பு ஆகாது என்றும், இது மற்றொரு நாட்டின் சதியாக இருக்கும் என்ற உண்மை, இச்சம்பவம் நடக்கும் சில மாதங்களில் உலக நாடுகளுக்கு தெரியவரும் என்ற உண்மையை இந்த தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு சுட்டிக் காட்டுகிறது.


ஆன்மீகத்தில் ஒரு சிறந்த பழுத்த ஞானியாக திகழ்ந்த விவேகானந்தரின் நினைவுச்சின்னம் உள்ள அந்த பகுதியில் மாபெரும் இயற்கை சீற்றம் தற்பொழுது நடக்க உள்ளதாகவும், இதற்குமுன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தாலும் இச்சம்பவம் அதனைவிட கொடுமையாக இருக்கும் என்றும், இந்த சம்பவத்தினை அடுத்து அப்பகுதியின் ஒரு தீவு கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும் என்றும், அதே சமயத்தில் ஒரு சிறிய நிலப்பரப்பு கடலுக்கு தென் பகுதியில் தோன்றும் என்றும், இது தமிழர்களின் வாழ்க்கை தரத்தினை அரிய உதவும் ஒரு அரிச்சுவடியாக இருக்கும் என்றும், சிவாலயம் ஒன்றின் சிதலடைந்த பகுதிகள் அப்பகுதியில் கண்டெடுப்பார்கள் என்று இரண்டாம் தீர்க்க தரிசனப் பகுதிகள் தெரிவிக்கின்றன.


போகர் என்ற சித்தரின் பிரவேசம் தென்தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ளதாகவும், “கவிஞன்“ என்ற அடைமொழியை தாங்கிய ஒரு இளைஞன் போகர் பற்றிய சில குறிப்புகளை இணையதளத்தில் வெளியிடுவான் என்றும், அந்த குறிப்புகளை மறுத்து நாகப்பட்டினத்திலிருந்து ஒரு இந்து ஆன்மீக அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிடும் என்றும், அச்சமயத்தில் “சதுரகிரி மலையில்“ ஒரு “ஒளிபிழம்பு“ தோன்றி பல்லாயிரம் மக்களுக்கு காட்சி தந்து மறையும் என்றும், அதே வேளையில் பழனி மலையில் இரண்டாம் ஜாமத்தில் போகரின் ஜீவ சமாதியிலிருந்து ஒரு உருவம் எழுந்து பறந்து போகும் அதிசய நிகழ்வை பலரும் கண்டு வியப்படைவதோடு மட்டுமின்றி, அந்த உருவத்தை தமது செல்போன்களில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிடுவார்கள் என்றும், “இந்த உருவம்“ போகரின் வருகைக்கான ஒரு நிகழ்வாக மக்கள் கருதும்படி அமையும் என இரண்டாம் தீர்க்க தரிசனப் பகுதி ஒரு உண்மை நிகழ்வை இங்கு சுட்டிக் காட்டுகின்றது.


சேலத்தில் அமைந்துள்ள ஒரு மலையில் இடம் பெற்றுள்ள முருகனின் கோவிலில் ஒரு அதிசய சம்பவம் நடக்கும் என்றும், அதே சமயத்தில் தஞ்சையில் ஒரு பூமி சம்பந்தப்பட்ட திரட்டு ஒன்று கண்டறிவார்கள் என்றும், அந்த திரட்டில் யுக மாற்றங்களின் சரியான குறிப்புகள் அங்கு இடம் பெற்றிருக்கும் என்றும், இந்த சம்பவத்திற்கு பிறகு சேலத்தில் ஒரு தெய்வீக சங்கல்பம் நடக்கும் நிகழ்வை உலக மக்கள் அறிந்து வியப்பார்கள் என்றும், இதுவே சித்தர்களின் ராஜ்யம் இப்பூமியில் நடைபெற உள்ளதற்காக முன் அறிகுறியாக அமையப் போகிறது என்று “ உண்மைகள் உறங்குவதில்லை “ என்ற தீர்க்க தரிசனத்தின் 2ம் பகுதி நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தை சார்ந்த ஆன்மீகப் பெரியோர்கள் ஒரு புனிதரின் (இறைதூதுவர்) வருகையைப் பற்றி அதிகமாக பேசுவார்கள் என்றும், அது இக்காலக்கட்டமே என்று இரண்டாம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. இறை தூதுவர் என்பவர் பிறக்க போவதில்லை என்றும், அவர் ஏற்கனவே பிறந்தவராக இருப்பார் என்ற ஒரு முக்கிய குறிப்பை இந்த “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு இறை தூதுவர் பற்றி ஒரு அரிய குறிப்பை தருகிறது.


“ஸ்ரீகல்கி பகவான்“ அவதரிக்கும் பகுதி ஒரு பள்ளதாக்கு என்று பல ஆன்மீக அமைப்புகள் பல விடயங்கள் வாயிலாக குறிப்பிட்டு இருந்தாலும் அது அந்த இடம் இல்லை என இந்த இரண்டாம் தீர்க்க தரிசனப் பகுதி குறிப்பிடுகிறது.

அதாவது இறை அவதாரம் இந்தியாவில் உள்ள தமிழகத்தில் நடக்க உள்ளபோது அது தமிழகத்தின் மலை சார்ந்த ஒரு இடமாக இருக்கும் என்றும், மலைகள் சூழ்ந்த தரைப்பகுதியை அக்கால மக்கள் “பள்ளதாக்கு“ என்றே கூறுவார்கள் என்றும், அந்த பள்ளதாக்கு போன்ற பகுதியை கொண்ட தமிழகத்தின் ஒரு பகுதியிலே அவர் அவதரித்து வாழ்வார் என்று ஒரு குறிப்பை “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு பல அரிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

இனி உலக வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை தமிழகத்தின் பக்கமே இருக்கும் என்று தீர்க்க தரிசனங்கள் குறிப்பிடுகின்றன.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.