06/12/2017

இரத்த அழுத்தமா? குறைக்க எளிய வழி...


ரத்தக் கொதிப்பு என்றால் என்ன?

ரத்தம் உடல் முழுவதும் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை. இந்த அழுத்தம் அதிகமாகும்போது, அதையே ரத்தக் கொதிப்பு என்கிறோம். ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கலாம்? ரத்த அழுத்தத்தில் சுருக்கழுத்தம் (systolic blood pressure) விரிவழுத்தம் (Diastolic blood pressure) என இரண்டு அலகுகள் உள்ளன.

ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. உடல் எடை அதிகரிப்பைப் பொறுத்து ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளுதல், அதிகக் கொழுப்பு மற்றும் குறைவான நார்ச் சத்துள்ள உணவுகள், மது மற்றும் புகைப் பழக்கம், சரியான உடற்பயிற்சி இன்மை, நீரிழிவு நோய் ஆகியவற்றின் மூலம் இரத்த அழுத்த நோய் வரலாம்.

ரத்தக் கொதிப்பு வருவதற்கான அறிகுறிகள்: பொதுவாக இது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. மற்ற பல காரணங்களுக்காக உடலைப் பரிசோதிக்கும் போது இது கண்டு பிடிக்கப்படுகிறது. எனினும் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்போது தலை சுற்றல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.

ரத்தக் கொதிப்பால் ஏற்படும் விளைவுகள்: மாரடைப்பு, இதயத் துடிப்பில் கோளாறு, இதயம் பெரிதாகுதல், பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு, ரத்த நாளங்களில் நோய்கள், சிறுநீரகத்தில் பாதிப்பு, மற்றும் கண்களில் பாதிப்பு போன்றவை.

உணவு முறைகள்: அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாகப் பல்வேறு காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டாலே இவை கிடைத்துவிடும். சோடியம் என்னும் தனிமத்தைத் தவிர்ப்பது நல்லது. சமையல் உப்பு, பேக்கரியில் உபயோகப்படுத்தப்படும் சோடா உப்பு, சைனீஸ் உணவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவில் சோடியம் அதிகம் இருக்கும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும். வடகம், ஊறுகாய், சாஸ், கெட்சப், பீட்ஸா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உப்பு அதிகம் இருக்கும்.

ஓட்ஸ் உப்புமா: ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

முருங்கைக்காய் வடை: பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெஜிடபிள் மசாலா கறி: காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.

பாட்டி வைத்தியம்:

1). அரை கிலோ அசோக மரப்பட்டை, சீரகம் 50 கிராம் எடுத்து இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.

2). ஆடாதொடா இலையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ரத்தக் கொதிப்பு குணமாகும்.

3). ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

4). இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துக் கொள்ளவும். இதில் 2 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம். 

5). இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

6). எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு சரியாகிவிடும். கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அளவு பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம் வராது.

7). கல்யாண முருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாகும்.

8). பீட்ரூட் சாற்றில் அப­ரி­மி­த­மாக அடங்­கி­யுள்ள நைத்ரேட் (Nitrate) இரத்­தத்தில் நைட்ரிக் ஒக்­சைட்டின் (Nitiric Oxide) அளவை அதி­க­ரித்து உட்­கொண்ட 24 மணித்­தி­யா­லத்­திற்குள் உயர் இரத்த அழுத்­ததைக் குறைக்கும். தினமும் 250 மில்லி லிட்டர் பீட்ரூட் சாறு பருக இரத்த அழுத்தம் என்றும் கட்­டுப்­பாட்டில் இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் கராம்பு ஒன்றை மென்று சாப்­பிட, கறி­வேப்­பிலை சாறு பருக, தேனுடன் இஞ்சி சாறு பருக இரத்த அழுத்தம் குறையும்.

9). ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், நார்ச்சத்துநிறைந்த பழ வகைகளையும் அதிகம் சாப்பிடவேண்டும்.

10). பூண்டு: இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

11). கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.

12). முருங்கைக்காய்: முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.

13). நெல்லிக்காய்: நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

14). முள்ளங்கி: இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

15). எள்: சமீபத்திய ஆய்வின் படி நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.

16). ஆளி விதை: ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.

17). ஏலக்காய்: உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.

உடற்பயிற்சி: ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறையாவது, 20 நிமிடங்கள் வீதம் மிதமான ஓட்டம், வேக நடை, நீச்சல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.